Featured Articles
All Stories

வெள்ளி, 27 டிசம்பர், 2013

வெற்றி வானொலி குறும்படப் போட்டியும் விளக்கம் தேடும் சந்தேகங்களும்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இப்பதிவானது என்னால் விளக்கம் பெற முடியாமல் போன ஒரு குறும்படப் போட்டி தொடர்பாக வரையப்படும் பகிரங்க மடலாகும். அவ்வானொலிக்கு தொடர்பு எடுத்தாலும் அறிவிப்பாளருடனேயே பேச முடிகிறது. பாவம் அவரது கடமை நேரத்தில் என் போன்ற சந்தேகப் பிசாசுகளுக்கு எப்படி விளக்கம் கொடுக்க முடியும். தயவு செய்து அதன் வேறு பிரதிநிதிகள் யாராவது இருப்பின் எனக்கு விளக்கம் தந்து உதவவும்.

வாருங்கள் விடயத்துக்கு
வெற்றி வானொலி world tamil shortfilm festival என்ற போட்டிக்காக தை மாதம் 1 ம் திகதி வரைக்கும் குறும்படங்களை கோரி இருக்கின்றது. அதன் விதிமுறைகளிலும் அதன் விண்ணப்ப படிவங்களிலும் எனக்கு பல இடத்தில் தெளிவில்லை அதையே முன் வைக்கிறேன்.

1. ஃஃஃஃஃகுறுந்திரைப் படத்தில் பங்கு பற்றும் நடிகர்கள் மற்றும் அதன் குழு சார்ந்த இயக்குனர்,இசையமைப்பாளர்,படப்பிடிப்பாளர், ஏதோ ஒரு குறுந்திரைப் படத்தினூடாகவே போட்டியில் பங்குபற்றமுடியும்.மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் ஒருவராவது அந்த குழு சார்ந்து பங்கு பற்றும் போது அது அவதானிக்கப்படுமிடத்து அந்த நபர் அல்லது குழு சார்ந்து வந்த முதல் குறுந்திரைப் படமே போட்டிக்குள் எடுத்துக்கொள்ளப்படும்.ஃஃஃஃஃ

உதாரணத்திற்கு கடந்த 4 மாதத்திற்குள்  மட்டும் நான் 9 குறும்படங்களில் நடித்திருக்கிறேன் (துலைக்கோ போறியள், மிச்சக்காசு, தொடரி, போலி, தாத்தா, இளவரசர்கள், விட்டில்கள், உறவு தேடும் உயிர், (ஒன்றின் பெயரை சொல்ல அவ் இயக்குனரின் அனுமதியில்லை). இதில் 5 குறும்படங்கள் நான் இயக்கியவை. ஆகவே இவ்விதியால் எம்முடைய 8 படங்கள் ஒதுக்கப்பட இருக்கிறது. ஆகவே இவ் விதி தொடர்பான விளக்கம் தேவைப்படுகிறது.

2. Send your short film through Dropbox or Postal Submission இப்படி விதிமுறையில் கொடுக்கப்பட்டிருந்தாலும் விண்ணப்பப்படிவத்தில்
Postal Submission: Please send a DVD copy of your film with a completed entry form before the competition deadline. Entries should be sent to
இப்படித் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதற்கான சீடியை அனுப்பவே 3000 ஆயிரத்துக்கு மேல் செலவழியும்.
Dropbox ல் பரிமாறுகையில் தாங்கள் பெறுவதில் எந்தச் சிக்கலுமே இருக்காது அப்படியிருக்கையில் ஏன் இப்படி ஒரு வீண் செலவு வைக்கிறீர்கள்???

3. இலங்கையில் இருந்து அனுப்பப்படும் படங்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் கட்டுப்பணம் கோரப்பட்டுள்ளது. இத் தொகை செலுத்துவதற்கு எத்தனை படங்களுக்கு சாத்தியமானதோ தெரியவில்லை. காரணம் வெளிநாடுகளில் இருந்து தயாரிப்பாளர்கள் மூலம் படமெடுப்பவர்களுக்குச் சாத்தியப்பட்டாலும் சொந்தக் காசில் நொந்து நொந்து படமெடுப்பவர்களுக்கு அனுப்புவது சாத்தியமே இல்லை. உதாரணத்திற்கு கைப்பேசியில் எடுத்த (அதற்காக தரக்குறைவானதல்ல 1080p தரம் கொண்ட படங்கள்) எனது “மிச்சக்காசு“ (600/=), “தொடரி“ (400/=) போன்ற படங்கள் மிகச் சொற்பப் பணத்திலேயே எடுக்கப்பட்டவை. எனக்கு அந்தப் பெரிய தொகை கட்டிப் படம் அனுப்ப எப்படி மனம் வரும்.

4. இந்தியப் போட்டியாளர்களுக்கு அந்நாட்டுப்பணத்தில் 3000 ரூபாய் கட்டுப்பணம். யூரியுப்பில் ஒரு நாளைக்கே அங்கிருந்து பல பெரிய பட்ஜெட் படங்கள் உள்நுழைந்து கொள்கிறது. அதனுடன் எம் பாரம்பரியத்தை, பிராந்திய மொழிவழக்கை, உள்நாட்டு இசையை பின்பற்றும் படங்கள் போட்டி போட முடியுமா? என்ற ஐயம் எனக்கிருக்கிறது (இது தனிப்பட்ட கருத்து)

ஆகவே இப்போட்டியில் எல்லா வகையில் பார்த்தாலும் இலங்கையருக்கு சந்தர்ப்பம் குறைவாக இருப்பது போலவே இருக்கிறது. யாராவது வெளிநாட்டுக்காரர் காசு கொடுத்து எடுத்த இலங்கைப்படங்கள் மட்டுமே இந்தப் போட்டிக்குள் எட்டிப் பார்க்கும். என்னைப் போல கைப்பேசியில் படம் எடுத்து வைத்திருக்கும் யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத உச்சம் போலவே எனக்கு இப் போட்டி இருக்கிறது.

இவை தான் என் சந்தேகங்கள். அந் நிறுவனம் சார்ந்த யாராவது இந்த சந்தேகங்களை எனக்கு தீர்தருளி உங்கள் போட்டிக் காட்டுப்பாட்டை தளர்த்தி என் போன்ற சக கலைஞர்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

(உதாரணத்திற்காக எனது கைப்பேசிக் குறும்படமான “மிச்சக்காசு“ குறும்படத்தின் ட்ரெயிலரையும் “துலைக்கோ போறியள்“ படத்தையும் இணைக்கிறேன்)

AM 1:02 - By ம.தி.சுதா 2

2 கருத்துகள்:

வியாழன், 19 டிசம்பர், 2013

dialog வாடிக்கையாளருக்கு ஒரு எச்சரிக்கைப் பதிவு

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

நீண்ட நாட்களின் பின்னர் வலையமைப்புக்கள் பற்றி எழுதுகின்றேன். இதற்கு முன்னர் நான் எழுதிய ஆக்கங்களின் தொடுப்பை அடியில் இடுகிறேன்.
சரி விடயப்பரப்புக்குள் நுழைவோம் வாருங்கள்.
கடந்த சில நாட்களாக யாழ் நகரம் எங்கும் வீதியால் போகையில் யாராவது ஒரு பெண் பிள்ளை குறுக்கே திடீரென முளைத்து மோட்டார் சைக்கிளை மறிக்கிறது. (பொலிஸ் கூட அப்படி மறிப்பதில்லை)
என்னடா என்று பார்த்தால் புதிய வகை பிற்கொடுப்பனவு இணைப்புக்கான கட்டாயப்படுத்திய விளம்பரத் திட்டமே அதுவாகும்.
அதில் வருபவர்களுக்கு நாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது. “தங்கச்சி என்னிடம் இருப்பது blaster அதில் 1000 நிமிசம் மிச்சம் மிச்சமாக இருக்கிறது“ என்றால் உங்கள் வீட்டுக்காரருக்கு இதை வாங்கிக் கொடுங்கள் என்று கடுப்பேத்துகிறார்கள்.
பிற்கொடுப்பனவு இணைப்புக்கு பிற்பாடான சிக்கல்களை அறியாமல் மக்கள் அள்ளிக்கட்டி வாங்குகிறார்கள்.
வாங்குவது தப்பென்றோ அல்லது அவர்கள் திட்டம் தவறானதென்றோ நான் சொல்ல வரவில்லை ஆனால் பிற்கொடுப்பனவுக்கு அடிமையாதலில் உள்ள சிக்கலை சொல்ல வரும்புகிறேன்.
அத்திட்டத்தின் படி மாதம் 100 நிமிடம் இலவசம் அதற்கு 100 ரூபாயும் அரச வரிகளும் உள்ளடங்கும் (கிட்டத்தட்ட இது தான் முற்கொடுப்பனவு இணைப்புக்கும் செலவாகும்)
ஆனால் அவர்கள் முதல் 6 மாதத்திற்கும் அந்த 100 ரூபாய்க்கு 200 நிமிடத்தை வாரித் தருகிறார்கள். இருந்தாலும் பிற்கொடுப்பனவில் உள்ள சிக்கல் யாரும் சரியாக அவ்வளவு நேரத்தையும் பாவிப்பதில்லை அதே போல பெரும்பாலானவர்கள் தரப்படும் நேரத்தைக் கடந்ததும் தெரியாமல் பாவிப்பவர்கள். இதனால் வலையமைப்புக்கு மறை முக இலாபமே ஏற்படுகின்றது.
அதே போல பல மாதாந்த அடிப்படையிலான கட்டணச் சலுகைகள் முற்கொடுப்பனவுக்கும் பிற்கொடுப்பனவுக்கும் வேறுபட்டது. உதாரணத்திற்கு எமக்கு அழைப்பவர் பாடல் கேட்பதற்கான முற்கொடுப்பனவு மாதக் கட்டணம் 39 ரூபாய் ஆனால் அதே பிளஸ்டரில் என்றால் 107 ரூபாய் ஆகும் இது கூடத் தெரியாமல் தான் இன்றும் பலர் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதை விட இந்த நெட்வேர்க்காரர்களிடம் பெரிய சிக்கல் ஒன்றிருக்கிறது. முற்கொடுப்பனவு இணைப்பென்றால் அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாக வைத்தெடுத்தாலும் தேவையில்லை எனில் தூக்கி எறிந்து விட்டுப் போகலாம். ஆனால் பிற்கொடுப்பனவு இணைப்பானது உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டதால் நீங்கள் இடையில் கை விட்டாலும் எத்தனை வருடம் கடந்த பின்னரும் அதே அடையாள அட்டையுடன் இன்னொரு இணைப்புக்கு போய் நின்றால் காசை பிடுங் வைத்து விடும்.

உதாரணத்துக்கு இலங்கையில் சரியான வாடிக்கையாளர் சேவை செய்யாமல் இயங்கி கை மாறிய வலையமைப்பில் ஒன்றாக சண்ரெல் விளங்குகின்றது. அதன் குழறுபடிகளால் அப்படியே அதைக் கைவிட்ட பலர் இருக்கிறார்கள். ஆனால் அதை வாங்கிய நெட் வேர் டயலொக் என்பதால் ஏற்கனவே டயலொக்கில் அதே அடையாள அட்டை இலக்கத்துடன் இருப்பவர்களுக்கு 5 ஆயிரம் 6 ஆயிரம் என பற்றுச் சீட்டுக்கள் அனுப்பப்படுவதுடன் பணம் கட்டுமாறு அறிவுறுத்தவுமபடுகிறார்கள்.

இன்று யோசிக்காமல் அந்த 200 நிமிடத்துக்காக வாங்கும் நீங்கள் நாளை தேவையில்லை என தூக்கி எறிந்து விட்டுப் போனாலும் உங்கள் அடையாள அட்டை இலக்கம் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும். இது உங்களுக்குத் தேவையா?
ஏதோ என் மனதில் பட்டதை சொல்கிறேன் சிந்தித்து தங்கள் தேவைக்கு ஏற்றதாக வாங்கிப்  பயன்படுத்துங்கள் அவர்களின் வற்புறுத்தலுக்காக வாங்கி விட்டு முகட்டைப்பார்த்து முழிக்காதீர்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

பழைய பதிவுகள்
PM 11:53 - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

வெள்ளி, 15 நவம்பர், 2013

வன்னி மூலையில் ஒரு அதிசயக் கிராமம் (காணெளியும் இணைக்கப்பட்டுள்ளது)

எமக்குத் தெரியாமலே எமக்கருகில் ஆயிரம் விடயங்கள் பரந்து கிடக்கலாம். அதை அறிந்தவர் கூறும் போது பலருக்கு அதிசயமாக இருக்கும் சிலருக்கு கட்டுக்கதையாக இருக்கும் வாருங்கள் இக் கிரமத்தை நோக்குவோம்.


அமைவிடம்
யாழ் - கண்டி வீதியில் மாங்குளம் சந்தியிலிருந்து ஒட்டி சுட்டான் போகும் பாதை வழியே சென்றால் 4 கிலோமீற்றரில் ஒலுமடுச் சந்தி வருகிறது. இதிலிருந்து வடக்கே பிரிந்து செல்லும் விமான ஓடுபாதைக்கான காட்டு வழிப்பாதை வழியே எட்டுக் கிலோமீற்றர் புலுமலுச்சிநாள குளம் மற்றும் அம்பகாமம் போன்ற காட்டுக் கிராமங்களைக் கடந்து சென்றால் நாம் அடையும் இடம் தான் மம்மில் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அதிசயக் கிராமமாகும். போரின் முன்னர் 155 குடும்பங்கள் இருந்த இவ்விடத்தில் தற்போது 115 குடும்பங்கள் வாழ்கிறது.
சிறப்பு
இவ்வூரின் சிறப்புக்குக் காரணம் அங்கிருக்கும் பிள்ளையார் ஆலயமாகும். அப்பிள்ளையாரின் பெயர் தான் மம்மில் என்பதாகும். இவ் ஆலய வாசலால் தான் பழைய யாழ் - கண்டி வீதி அமைந்திருந்தமை வரலாற்று உண்மையாகும். கண்டியின் ராஜசிங்கன் மற்றும் சங்கிலியனுக்கான தொடர்பாடல் பாதையாக இருந்தது இதன் வாசலாகும். இப்பாதையானது காட்டுவழியே கறிப்பட்ட முறிப்பை (கரி பட்ட முறிப்பு - கரி என்பது யானையாகும்) சென்றடைந்து கனகராயன் குளத்தைச் சென்றடைந்து இப்போதைய கண்டி வீதியுடன் இணைகிறது. இப்போது புதிய கண்டி வீதியில் செல்வோர் முறுகண்டிப் பிள்ளையாரை (முறிவண்டிப்பிள்ளையார்) வணங்கிச் செல்வது போல் பண்டைய காலத்தில் மம்மிலாரை வணங்கியே செல்வார்கள்.
ஊரின் சிறப்பு
இவ்வூர் மக்கள் வாழ்ந்த வாழக்கை முறையானது ஒரு சமூகத்துக்கு மிக மிக எடுத்துக்காட்டானது. ஆனால் நாகரீக உட்புகுத்தலாலும் வழிகாட்டியாக இருந்த பெரியவர் மறைந்ததன் காரணமாகவும் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை வித்தியாசமானது. இந்த ஊருக்கென்று ஒரு வைத்தியசாலை இதுவரை இருந்ததில்லை. இளைய சமுதாயம் நோய்கள் சார்ந்த விடயங்களுக்காக வைத்தியசாலை சென்றாலும் வயோதிபர்கள் யாருமே வைத்தியசாலை சென்றதில்லை. ஒரு வயோதிபர் குறிப்பிடும் போது சொன்னார் ”தடிமன் காய்ச்சலைத் தவிர வேறு வருத்தம் வந்ததாக தனக்கு நினைவில்லையாம்“ என்றார்.
இவர்களது உணவுமுறை இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். 3 நேரமும் சோறு தான் சாப்பிட்டார்கள். விசேட நாட்களில் எம் வீடுகளில் விதம் விதமான பலகாரம் சுடுவது போலத் தான் விசேட நாட்களில் அங்கே பிட்டு, தோசை போன்ற உணவுகள் சமைக்கப்படும்.
பொருட்களை பண்டமாற்று முறையிலேயே மாற்றிக் கொள்வார்கள். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மிளகாயை பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுத்தால் அவர் உங்களுக்கு தன் தோட்டத்தில் இருந்து வெங்காயம் கொடுப்பார்.
அதே போல வயல் வேலைகளுக்கு முன்னரே திட்டமிட்டபடி ஒவ்வொருவரது வயலுக்கும் மற்றவர் மாறி மாறி போய் உதவுவார்கள். அதனால் கூலியாளோ பணமோ அவர்களில் தாக்கம் செலுத்துவதில்லை.
அதை விட முக்கியமாக இன்னொரு பழக்கம் இவர்களில் இருக்கிறது. ஒரு வீட்டில் மரண நிகழ்வு நடந்து விட்டால் ஒரு மாட்டு வண்டிலில் சென்று ஒவ்வொரு வீடாக உணவுப் பொருட்களை சேகரிப்பார்கள் சேர்த்த பொருட்களை அவ்வீட்டுக்கு கொண்டு சென்று ஒரு மாதம் வரை  மாறி மாறி நின்று அவர்களே சமைத்துக் கொடுப்பார்கள்.
ஒரே ஒரு 5 ம் தரம் வரை அமைந்த பாடசாலை இருந்தாலும் உயர்தரத்திற்காக 14 கிலோமீற்றர் தள்ளியிருக்கும் மாங்குளம் வரை செல்வார்கள். ஆனால் இங்கிருந்தும் 4 மாணவருக்கு மேல் பல்கலைக்கழகம் சென்றமை ஒரு சிறப்பான விடயமாகும்.
இந்தளவு கட்டுக் கோப்பும் எந்த மன்னனால் எப்படி உருவானது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழக் கூடும்.
காரணம் யார்?
அக்கிராமத்தில் அமைந்திருக்கும் மம்மில் பிள்ளையார் என்ற நாயகனே இத்தனைக்கும் காரணம்.
சாதாரணமாக நாம் கல் தடுக்கினால் கூட அம்மா என்று தான் கத்துவோம் ஆனால் அங்கிருப்பவர்கள் கல் தடக்கினாலும் மம்மிலாரே என்று தான் சொல்வார்கள் அந்மளவுக்கு அவர் மீது நம்பிக்கை. இவ்வாலயத்தில் பெரும் திருவழாவாக சித்திராப் பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. அதற்கடுத்ததாக ஆவணிச் சதுர்த்தி கொண்டாடப்படும்.
இன்றும் கூட பாம்பு கடித்து நுரை வருபவரைக் கூட வைத்தியசாலை கொண்டு செல்வதில்லை. ஆலயத்தில் கொண்டு வந்து வீபூதி போட்ட விட்டு ஆளை அங்கேயே வைத்திருப்பார்கள். அவர் எழுந்ததும் ஒரு பொங்கல் போட்டு விட்டுச் செல்ல வேண்டியது தான்.
மாங்குளம் சூழலில் இருக்கும் ராணுவத்தளபதியிலிருந்து ஒவ்வொரு ராணுவ வீரனுக்குமே அவர் மேல் மிகுந்த பயம்.
நான் 2010 ஆண்டளவிலேயே செல்ல ஆரம்பித்து விட்டேன். 8 கிலோமீற்றருக்கு நடுக்காட்டுக்குளால் செல்லும் அப்பயணத்தில் ராணுவம் மறித்தால் மம்மில் போகிறேன் என்று சொன்னால் போதும் ஒரு பரிசோதனை கூட இருக்காது. இத்தனைக்கும் என்ன காரணம். மக்கள் மீள குடியமர்த்தப்படுவதற்கு முன்னர் ராணுவ வீரர்கள் சிலர் ராணுவ சீருடையுடன் கொயில் மரத்தில் பூ பிடுங்கச் சென்றிருக்கிறார்கள். கோயிலிலிருந்து 9 பேருக்கு பாம்பு கடித்ததாம். ஆனால் யாருக்குமே எதுவுமே நடக்கவில்லை.
இவ்வூரில் உங்களுக்க களவு ஏதாவது போய் விட்டால் ஒவ்வொரு வெள்ளியும் மக்கள் கூடும் நேரம் தொலைத்தவர் கோயிலில் சொல்வாராம் “மம்மிலாரிடம் கட்டப் போகிறேன்“ என்பார். இப்படி ஒரு ஊசி தொலைந்தால் கூட ம்மிலாரிடம் முறையிட்டால் களவெடுத்தவருக்கு மரணம் தான் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி களவெடுத்த பலர் திடீரென இறந்தும் இருக்கிறார்கள்.
சிறுத்தைகள் வசித்த பகுதியாகையால் பலர் தனியே சிறுத்தையிடம் மாட்டுப்பட்டிருக்கிறார்கள். அப்போது “மம்மிலாரே காப்பாற்றும்“ என்றால் சரியாம். அப்படி சொல்லி சிறுத்தை மற்றும் குழுவன் மாடு (மதம் பிடித்த யானை போன்றது) போன்றவற்றிடம் இருந்து தப்பியவர்கள் இருக்கிறார்கள்.
1998 ல் நடந்த ஜெயசிக்குறு போரால் இவ்வூரில் இருந்து இடம்பெயர்ந்தார்கள். அதன் பின்னர் இறுதி யுத்தத்தில் இடம் பெயர்ந்தார்கள். அந்த உக்கிர யுத்தத்தில் கூட இவ்வூரைச சேர்ந்த 4 பேர் தான் மரணித்திருக்கிறார்கள்.

ஆலயத்தின் புதுமைகள்

இவ் ஆலயமானது பல புதுமைகளைக் கொண்டிருந்தாலும் எனக்குத் தெரிந்த சிலதைப் பகிர்கின்றேன்.
1. யாழ்ப்பாணத்தில் பிரபலமான மகப்பேற்று மருத்துவர்  பவானி அவர்களை பலருக்குத் தெரிந்திருக்கும். இவருடைய குழந்தை ஒன்று நரம்பியல் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு 12 வயது வரை பேசவே இல்லை. அக் குழந்தையை அவர் இந்தியா போன்ற அந்நிய நாட்டுக்குக் கொண்டு சென்றும் குணமாகாத நிலையில் சக மருத்துவரான தர்மேந்திரா (முழங்காவில் வைத்தியசாலையில் நீண்டகாலம் வேலை செய்தவர்) அவர்கள் தனக்கு நடந்த அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்த போது அங்கே சென்று நேர்த்தி வைத்ததன் பின்னர் தான் குழந்தை பிறந்ததாம்.
இவரும் தனது குழந்தையை அங்கே கொண்டு சென்றிருக்கிறார். அங்கே இருக்கும் பூசகர் (பார்ப்பனியம் சார்ந்தவர்கள் அங்கு இல்லை) குழந்தைக்கு விபூதி இட்டு விட்டு “குழந்தை மம்மில் என்று சொல்லு“ என்றிருக்கிறார். பிறந்து 12 வருடம் பேசாத குழந்தை முதல் முதலாக மம்மில் என்ற சொல்லை கூறியதாம்.

2. என் இரு நண்பர்களுக்கு நடந்த கதையிது. இருவரும் வெற்றி பெற்றதால் பெயரை மறைக்க வேண்டிய தேவையில்லை. இன்று 3 பிள்ளைகளுடன் இருக்குமு் வாசுகி மற்றுமு் கலைச் செல்வன் என்பதே அவர்கள் பெயர்களாகும்.
இதில் வாசுகி அக்கா நான் மருத்துவம் படிக்கும் போது என்னோடு தாதியியல் கற்றவர். அதே போல கலைச்செல்வன் அண்ணா நான் பயிற்சியில் நின்ற முள்ளியவளை மாஞ்சோலை வைத்தியசாலையில் வேலை செய்தவர். இருவரும் மச்சான் மச்சாள் முறை தான். ஆனால் அவரது விருப்பத்துக்கு வாசுகி அக்கா நீண்ட நாட்களாக சம்மதிக்கவில்லை. வாசுகி அக்காவுக்கு வெளிநாட்டு வரண் ஒன்று தயாராக அவர் வெளிநாடு செ்லதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமானது (முன்னர் கள்ள பாதையால் என்றாலும் வெளிநாடு போய் அங்கே திருமணம் செய்வார்கள்).
கலைச் செல்வன் அண்ணா மனம் தளராமல் மம்மிலுக்கு 6 செவ்வாய் தொடர்ந்து சை்ககிளில் சென்றிருக்கிறார். வாசுகி அக்காவுக்கு பாஸ்போட் அலுவல் எல்லாம் முடிந்து கிளம்புவதற்கான முழு ஆயத்தமும் தயார். (அவர் அப்பா கண்டிப்பானவர்). 7 வது செவ்வயாவ் இவர் போய் வந்த பின்னர் பின்னேரம் இவாவே தானாகச் சென்று கேட்டாராம் என்னை எங்கையாவது கூட்டிக் கொண்டு போங்கள் என்றாராம். இன்றும் அவாவைக் கேட்டால் சொல்லுவா ”சுதா நான் பொய் சொல்லேலா எனக்கே என்ன நடந்தது என்று தெரியாது“ என்பார்.
இன்னும் பல புதுமைகள் இருந்தாலும் பதிவின் நீட்சி கருதி சுருக்கிக் கொள்கிறேன்.
கடந்த வருடம் சித்திரைப் பௌர்ணமி தினத்தன்று இடம்பெற்ற காட்சிகளின் ஒரு சின்னஞ்சிறு தொகுப்பு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதை விட பன்மங்கான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

PM 2:22 - By ம.தி.சுதா 4

4 கருத்துகள்:

இணைய தமிழ்த் தட்டச்சிடுவோருக்கு வந்துள்ள பிரச்சனையும் தீர்வும்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நீண்ட நாட்களின் பின்னர் தொழில் நுட்பப் பதிவு ஒன்றுடன் சந்திக்கின்றேன்.
நேற்று முழுவதும் என்னால் இணைத்தில் தமிழில் தட்டச்சிட முடியாத குழப்பம் ஏற்பட்டது.
இணையத்தில் தமிழில் தட்டச்சிட இலகுவான மென்பொருளாக நாம் பயன்படுத்துவது nhm writter ஆகும். இதில் இணையத்தில் தட்டச்சு செய்து விட்டு ஒத்தி ஒட்டும் (copy paste) விளையாட்டெல்லாம் செய்யத் தேவையில்லை எங்கு தட்டச்சிடவேண்டுமோ அங்கேயே தட்டச்சிடலாம். இதுபற்றியும் இதை நிறுவுவது பற்றியும் 2 1/2 வருடங்களுக்கு முதல் எழுதியிருந்தேன் அதை படிக்க இங்கே செல்லுங்கள்.

இப்போது தோன்றியுள்ள பிரச்சனை என்னவென்றால் avg anti virus பாவிப்பவர்களுக்கு அதன் புதிய தரவேற்றம் ஆனது சிக்கலைக் கொடுத்துள்ளது.  nhm writter ல் உள்ள கோப்பு ஒன்றை trojen virus என அடையாளம் காட்டி அதை இயங்க விடாமல் தடுக்கிறது.

ஆனால் அதற்கும் தீர்வு இருக்கிறதா என குழம்பிப் போய் பார்த்தால் அவர்கள் தளத்தில் புதிய தரவேற்றத்தின் மூலம் எமது பிரச்சனைக்கு தீர்வு தந்திருக்கிறார்கள். ஆகவே கீழே உள்ள தொடுப்பில் உள்ள உரலுக்கு சென்று தரவிறக்கி அதை நிறுவிப் பயன்படுத்துங்கள்.

http://software.nhm.in/products/writer

மீண்டும் உங்கள் விரல்கள் தமிழோடு மொழி பேசட்டும்

நன்றிச் செதுக்கலுடன்

அன்புச் சகோதரன்

ம.தி.சுதா

AM 11:44 - By ம.தி.சுதா 4

4 கருத்துகள்:

புதன், 6 நவம்பர், 2013

மொபைல் போனில் ஒரு தரமான ஈழக் குறும்பட முன்னோட்டம் - “மிச்சக் காசு“

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
எம்முடைய miraa creation முயற்சியில் மீண்டும் ஒரு படைப்போடு சந்திக்கிறேன்.
இம்முறை முற்று முழுதாக samsung s3 கைப்பேசியின் மூலம் உருவாக்கப்பட்ட zero budget film ஒன்றுடன் என் நண்பர் குழாமுடன் இணைகிறேன். இக்குறும்படத்துக்கான இசையும் samsung galaxy tab ன் மூலம் தான் இடப்பட்டு ஒலிக்கலவை செய்யப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறும்படத்துக்கான teaser இணைக்கப்பட்டுள்ளது. படத்துக்கான முழு வேலைகள் முடிவடைந்தாலும் வேறு ஒரு நிறுவனம் படத்தை கையகப்படுத்தியுள்ளதால் அவர்களின் வெளியீட்டக்காக இப்படைப்பு காத்திருக்கின்றது.
எமது பக்கத்துடன் இணைவதன் மூலம் எம்முடைய புதிய படைப்புக்களையும் கண்டு களிக்கலாம்.

தொடுப்பு - www.facebook.com/miraacreation

குறும்பட பெயர்- மிச்சக் காசு
நடிப்பு - சிவசங்கர் மற்றும் சிலர்
கதை & இயக்கம் - ம.தி.சுதா
உதவி இயக்கம் - துவா
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - மதுரன்
இசை - மதீசன்
திரைக்கதை உதவி - சுதேசினி, சுஜித்தா

AM 12:51 - By ம.தி.சுதா 4

4 கருத்துகள்:

வியாழன், 31 அக்டோபர், 2013

ஒளிப்பதிவாளர் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைக் காட்சி அமைப்புக்கள் - குறும்பட ஆர்வலருக்காக

extreme long shot
medium close up
long shot
extreme close up
medium shot
medium long shot
cut in
close up

PM 8:40 - By ம.தி.சுதா 2

2 கருத்துகள்:

சனி, 28 செப்டம்பர், 2013

கவிஞர் அஸ்மினிடம் சில சந்தேகங்கள்,,,, நீங்கள் நிறை குடமா? குறை குடமா?

எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் அத்துறையில் மேலே வருவதற்கு பெரும் போட்டிகளைச் சந்திக்க வேண்டிவரும். அதிலும் எதிர் போட்டியாளனை போட்டியாளனாக மட்டும் பார்த்து போட்டியிடுபவனது வெற்றி மட்டுமே வெற்றியாகக் கருதப்படும். மற்றவைக்கெல்லாம் வேறு பெயர் கொண்டே அழைக்கப்படும்.
நான் இணையவெளிக்குள் நுழைவதற்கு முன்னமே ரசித்துப் படிக்கும் கவிஞர்களில் ஒருவராக இருப்பவர் அஸ்மினாவார். ஆனால் அண்மையில் நடந்ந்து முடிந்த அரச இசை விருது வழங்கள் விழாவின் பின்னர் அவரது பேஸ்புக்கை பார்ப்பவருக்கு பல கேள்விகள் எழலாம். எழாமலும் விடலாம் ஆனால் எனக்கெழுந்ததையே இங்கே முன்வைக்கிறேன்.
இலங்கையில் நடைபெறும் விருது வழங்கல்கள் யாவும் தகுதியானவர்களால் தான் இடம்பெறுகிறது என்ற வாதத்தை நான் இங்கு முன் வைக்க முனையவில்லை.
ஆனால் “பாம்புகள் குளிக்கும் நதி“ எனும் கவிதைத் தொகுப்பில் ஒரு விருது விழாவுக்க வந்த அனைவரையும் (நடுவர், பேச்சாளர் உட்பட) அனைவரையும் மிருகங்களோடு ஒப்பிட்டு கவி புனைந்திருந்தீர்கள் நினைவிருக்கிறதா? அதை ஓரளவு ஏற்றுக் கொண்டேன் காரணம் உங்கள் உழைப்பிற்கு சரியான ஊதியம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் நீங்கள் எழுதியிருக்கலாம்.

ஆனால் அதன் பின்னர் இந்த வருடம் நடந்த அரச இசை விருது வழங்கல் விழா பற்றிக் குறிப்பிடும் போதும் அதே தோரணையில் குறிப்பிட்டுள்ளீர்கள். என்னிடம் இருக்கும் கேள்வி என்னவென்றால் இந்தளவு காட்டமாக இருந்து இத்தனை ஆக்கங்களில் இந்தளவு ஆதங்கத்தை வெளியிட்ட நீங்கள் ஏன் அந்தப் போட்டிக்கு பங்கு பற்றினீர்கள் என்பதே?
அப்போட்டியில் விருது பெற்றவர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் தகுதியற்றவர்களுடன் போட்டியிட்டதாகவும் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படி சக போட்டியாளனை அவமதிக்கும் நீங்கள் எதைத் தகுதி எனக் கருதுகிறீர்கள். அந்தத் தகுதி எங்கிருந்து எப்படி வருகிறது என அறியலாமா?

இதை நான் உற்று நோக்கியமைக்கான காரணம் அவ் விருது விழாவில் முதல் விருது பெற்றது ஒரு யாழ்ப்பாணத்து மாணவன் (மதீசன் தனபாலசிங்கம்) என்பதனாலாகும். அவனுக்கு ஒரு சொல்லாவது வாழ்த்து சொல்லியிருப்பீர்களா? அல்லது ஒரு சக கவிஞருக்கு எங்காவது ஒரு இடத்தில் வாழ்த்துரைத்திருக்கிறீர்களா? இவையனைத்தையும் கடந்து எப்படி ஒருவருக்கு தகுதி கிடைக்கும்.
சரி நண்பர்கள் வட்டாரத்தில் பேசிக் கொண்ட ஒரு விடயத்தை பகிர்கிறேன் கேளுங்கள் காரணம் தாங்கள் இது பற்றி அறிந்தீர்களோ தெரியாது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பாடலுக்கு தாங்கள் வரிகள் எழுதியது பற்றியதாகும்.
விஜய் ஆண்டனி அவர்கள் சிங்களப்பாடல் ஒன்றுக்கு இசையமைத்ததற்காக தமிழ் நாட்டில் பல சல சலப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்தது அறிந்ததே. விஜய் ஆண்டனிக்கு தன் இடத்தை தக்க வைக்க ஈழத்தோடு சேர்ந்து ஒரு பாடல் செய்ய வேண்டிய தேவையேற்பட்டது. அப்போது ஈழ அடையாளத்தைக் கொண்டு தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டதாகவே பொது முகநூலில் கூட பேசிக் கொண்டார்கள்.
இப்படியான தங்களது நடத்தை கலைஞர்களுக்குள் ஆரோக்கியமானதல்ல. ஏனென்றால் இப்போது தொடர்பாடல் என்பது நொடிக்குள் நடந்தேறி முடிந்து விடுகிறது. இச் செயற்பாடுகளால் நீங்கள் என்போன்ற நல்ல ரசிகர்களை இழப்பதோடில்லாமல் பலரால் புறம்தள்ளப்படுவீர்கள்.
இனியாவது புரிந்து நடந்து கொண்டு ஆரோக்கியமான கலைஞர் உலகத்தை உருவாக்க தாங்கள் ஒரு சீனியராக பாதைகாட்டுவீர்கள் என நம்புகிறேன்.
(உங்கள் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருப்பேன் முன்னொரு காலத்தில் நட்பு வட்டத்தில் லைத்திருந்த நீங்கள் ஒரு உயரத்தை அடையும் போது என்னையும் வட்டத்திலிருந்து நீக்கிவிட்டீர்கள். அதன் பின்னர் தங்களுடன் நான் இணையவில்லை)


PM 10:29 - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

புதன், 28 ஆகஸ்ட், 2013

துலைக்கோ போறியள் குறும்படம் உங்கள் பார்வைக்கும் விமர்சனங்களுக்குமாக..


வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
என் குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக இருக்கும் வளங்கள் பொருளாதாரா வசதிகளைக் கொண்டு என்னால் இயன்ற அளவுக்கு இப்படைப்பை படைத்திருக்கிறேன்.
இது சம்மந்தமான வெளிப்படையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தங்களிடம் எதிர் பார்ப்பதற்காகவே இப்படைப்பை துணிந்து வெளிக் கொணர்கிறேன்.
இன்னுமொரு படைப்பை படைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இப்படைப்பை படைப்பதற்காக என்னோடு எந்தவித எதிர் பார்ப்புமின்றி உழைத்தவர்கள் தொடர்பாக முன்னோட்ட வெளியீட்டுப் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன் (பதிவுக்கான தொடுப்பு இங்கே)

சில தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக இக்குறும்படத்தை குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிக்கொணர முடியாமல் போனமைக்காக சிரம் தாழ்ந்து அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.


என சிலவற்றை பூரண திரைக்கதையுடன் கைவசம் வைத்திருந்தாலும் காலம் நேரம் அதற்கான பொருளாதார வசதி கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு படைப்புடன் சந்திக்கிறேன்.
குறிப்பு - படைப்புகளுக்காக இணைய விரும்புவோர் இணைந்து கொள்ளலாம். அத்துடன் மேற்குறிப்பிட்ட திரைக்கதை தேவைப்படுபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

குறும்படத்திற்கான தொடுப்பு இது தான்
http://www.youtube.com/watch?v=ocIKF_H1q_E&feature=player_embedded

படம் இதோ
PM 4:09 - By ம.தி.சுதா 9

9 கருத்துகள்:

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

யாழ் கொழும்பு வழி பயணத்திற்கான வாகன வசதிகளின் ஒரு ஒப்பீடு

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

இலங்கையின் இரு வேறு அந்தங்களில் காணப்படும் பகுதியாக இருந்தாலும் இரு கண்டங்களை அடைவது போன்ற மன நிலைப்பாட்டைக் கொடுத்திருந்த யாழ் கொழுப்பு பிரயாணமானது சுமூக நிலைக்கு வந்ததன் பிற்பாடு பல்வேறு வகையான போக்குவரத்து மார்க்கங்கள் வந்த பின்னரும் சராசரி மக்களின் மார்க்கமாக இருப்பவை ஏசி பொருத்திய சொகுசு பேருந்து, இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, ஹையெஸ் வாகனம் என்பனவாகும்.

இதில் குறிப்பிட்ட மூன்றிலும் பயணித்தவன் என்ற ரீதியில்  பொதுவான ஒப்பீட்டை வரைகிறேன் (இங்கு குறிப்பிடப்படும் பெரும்பாலான ஒப்பீடுகள் வடமராட்சி கொழும்புக்கானது).
செலவு குறைந்த சிக்கனப் பயணத்திற்கு நாங்க பாவிக்கும் வழிமுறை ஒன்றிருக்கிறது பதிவின் இறுதியில் படியுங்கள்.

சொகுசுப் பேருந்து
சராசரியாக 1250 ரூபாவிலிருந்து 1400 ரூபாய் வரை அறவிடப்படும் இச்சேவையில் கிடைக்கும் பெரிய அனுகூலம் அலுவலக நாள் அன்று காலை கொழும்பு போய்ச் சேர்ந்தாலும் ஏதோ படுக்கையில் இருந்து எழுந்து போகும் மனநிலையே இருக்கும்.
ஆனால் பலருக்கு இருக்கும் பிரச்சனை கிட்டத்தட்ட அரை நாட்களை தின்று விடும் என்பதேயாகும். யாழ்ப்பாணம் பட்டணப்பகுதியில் இருந்து இரவு 7.30 ற்கு வெளிக்கிடுபவருக்கு அதன் பாதிப்பு தெரிவதில்லையானாலும் வடமராட்சி போன்ற இடங்களில் இருந்து 5 அல்லது 5.30 ற்கு வெளிக்கிடுபவர் நிலை தான் கவலைக்கிடமானதாகும். ஆனால் முடிவிடத்துடன் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் காலை சரியான நேரத்திற்கு நீங்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்திருப்பீர்கள்.
அனால் இதிலும் CTB (SLTB) பேருந்துகளிலும் இருக்கும் உணவுப்பிரச்சனை ஒன்றிருக்கிறது. ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் எந்தக்கடையில் சரியான சலுகையும் உபசரிப்பும் கிடைக்கிறதோ அங்கேயே பேருந்துகள் நிறுத்தப்படும்.

நொச்சிகாமத்தில் உள்ள ஒரு கடையில் நின்றால் ஓட்டுனரின் முன்பக்கக் கண்ணாடியைக் கூட துடைத்து விடுவார்கள். அதே போல இன்னொரு இடத்தில் (பெயர் குறிப்பிடவில்லை) உள்ள முஸ்லீம் கடை ஒன்றில் நிறுத்தும் பேருந்துகளுக்கு பொலிஸ் தரப்பிலிருந்து ஏதாவது சிக்கல் வந்தால் (வேக கட்டுப்பாட்டை மீறல் தொடர்பான) அவர்களே சுமூகமாககி வைப்பார்கள்.

CTB (SLTB) பேருந்து
இங்கே குறிப்பிடப்படுவது சாதாரண பேருந்து பற்றியதாகும். ஆனால் உள்ளுரில் ஓடும் சாதாரண பேருந்துகள் ஓடப்படுவதில்லை எல்லா இருக்கைகளும் தலை சாய்கக் கூடியவையே (இருக்கைகள் நகர்த்த முடியாது) அத்துடன் தொலைக்காட்சியும் இருக்கிறது. 675 ரூபா வுடன் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் பயணமானது காலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும் அதே போல காலை 5.30 ற்கு ஆரம்பிக்கும் பயணமும் மாலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும்.
இரு இருக்கைகள் உள்ள பக்கம் உங்களால் முற்பதிவு செய்ய முடிந்தால் பெரிய உடல் அசதியிருக்கப் போவதில்லை.
இங்குள்ள சிக்கல் என்னவென்றால் அதிகாலை 3.30 ற்கு கொழும்பு வீதிகளில் ஒரு பெண்ணால் நிற்க முடியாது என்பதேயாகும். உங்களுக்கான வாடிக்கையான ஒரு ஆட்டோக்காரர் இருப்பாரானால் எந்த சிக்கலுமில்லை.
சிலதடவை நான் இரவு கொழும்பு போய் எனது வேலையை முடித்துக் கொண்டு காலை பேருந்தில் திரும்பியிருக்கிறேன் (24 மணி நேரத்திற்குள்).

ஹையெஸ் வாகனம்
சராசரியாக 1200  ரூபாய் அறவீட்டுடன் ஆரம்பிக்கும் இப்பயணத்தில் உள்ள மிகப் பெரும் சாதகமான விடயம் என்னவென்றால் வீட்டு வாசலில் ஏற்றப்பட்டு நாம் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கப்படுவோம். இதைப் போல பாதுகாப்பான பயணம் எதிலும் கிடைப்பதில்லை. ஆனால் மற்றையதில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து தப்புவதற்கு கிடைக்கும் சந்தர்ப்ப விகிதம் இதில் மிக மிகக் குறைவு.
அத்துடன் என் போல சற்று கால் நீளமானவருக்கு ஏதுவான இருக்கை கிடைக்காவிடில் விடிய இறங்கும் போது தேநீர் குடிப்பதற்கு இரண்டு சிரட்டைகள் கையில் இருக்கும்.
ஆனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனை உள்ளவருக்கு சிறந்ததாகும் (super luxary சொகுசுப் பேருந்துகளுக்கு கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது)
அதே போல நல்ல கடைகளில் சாப்பிடலாம்.

இதை விட தனியார் அரைச் சொகுசு பேருந்துகளும் போகின்றன அவை பற்றி நான் விபரித்துத் தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை.

சரி நாம் பாவிக்கும் சிக்கன வழி இது தான். தயவு செய்து பேருந்து முதலாளியிடம் போட்டுக் கொடுத்திட வேண்டாம். பிற்பகல் 5 மணிக்கு வவுனியா பஸ் எடுத்திடவேண்டும். அங்கே 9 அல்லது 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்து சொகுசுப் பேருந்துகள் வரும். அதற்கு முன்னர் நல்ல கடையில் சாப்பிட்டு விட்டு 10 ரூபாயை வவுனியா பஸ்நிலைய கழிப்பறைக்கு கொடுத்து மதியப் பாரத்தை இறக்கி வைத்து விட்டு நின்றால் பேருந்துகள் வரும். நடத்துனரிடம் சென்று “அண்ணே ஏதாவது சீட் இருக்கா“ என்று கேட்டால் அவர் பதிலளிப்பார் இருந்தால் 500 அல்லது 600 ஐ அவரிடம் கொடுத்து விட்டு அலுப்பற்ற சந்தோசப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். 400 கொடுத்து பயணிக்கும் என் நண்பர் ஒருவரும் இருக்கிறாரென்றால் பாருங்களேன். இப்ப சொல்லுங்கள் நாம் பழம் தின்று கொட்டை போட்டவரா இல்லையா?

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
PM 11:13 - By ம.தி.சுதா 4

4 கருத்துகள்:

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

இந்திய ஈழ உணர்வாளருக்கு ஈழத்தில் இருந்து ஒரு விழிப்புணர்வு மடல்

முற்குறிப்பு - இம்மடலானது எந்தவொரு உணர்வாளர் மனதையோ புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. நிகழ்கால களத்தில் இல்லாமையால் தங்களால் உணர முடியாமல் போன சில யதார்த்தங்களை உணர வைப்பதற்காகவே... முக்கியமாக இத்தீர்மானத்துக்கு காரணமாக இருந்த சகோதரன் திருமுருகன் காந்தியின் பார்வைக்காகவே இம்மடல் வரையப்படுகிறது.

வணக்கம் சகோதரம்
சேமம் எப்படி?
தங்களின் ஈழ உணர்வு பற்றி மிக மிக தெள்ளத் தெளிவாக அறிந்தவன் நான். ஆனால் தாங்கள் எடுத்திருக்கும் இம் முடிவில் உடன்பாடில்லாததால் இம்மடலை வரைகிறேன். தனியாக வரைய வேண்டிய மடலை பகிரங்கமாக வரைவதாக நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். இங்குள்ள விடயங்களை படித்த பின்னர் நீங்களே யோசிப்பீர்கள் இது பலர் அறிய வேண்டியது தான் என்பதை...

முதலில் வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். புறக்கணிப்பதற்கான காரணமாக உலகநாடுகள் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது என காரணம் பயிலப்பட்டிருக்கிறது.
இங்கு என்ன நடக்கிறது என்பதை தேர்தலால் தான் உலக நாடுகள் அறிய வேண்டுமென்பதில்லை. அந்தளவு விஸ்திரணப்படுத்தப்பட்ட புலனாய்வுகள் முழு நாட்டிடமும் இருக்கிறது. சில வேளை புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தவரை உள்நாட்டுக்கு விடுமுறைக்காலத்தில் வர வைப்பதற்கான ஒரு நிழல் திரையாக இது அமையலாம் என்றால் நிச்சயம் நானும் ஏற்றுக் கொள்வேன்.
ஈழத்தமிழராகிய நாம் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்ததால் தான் இன்று பூண்டோடு அழிக்கப்பட்டு நிற்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா?
இதையும் புறக்கணிப்பதால் பிச்சைக்காரராகத் தான் திரிவோம் என்பது மிக மிக திடமாக அடித்துக் கூறிக் கொள்வேன்.
உதாரணத்துக்கு மற்றவரை எடுக்காமல் என்னையே எடுத்துக் கொள்கிறேன்... வன்னியால் மீண்டபின் இந்திய வீட்டுத் திட்டத்திற்கு எமது பெயரையும் பரிந்துரைத்தார்கள் அதை நேரே வந்து பார்த்து எமக்கு புனரமைப்புக்கு பணம் வழங்குவதாக உறுதிப்படுத்திப் போனார்கள். 3 வருடமாக அந்தப் பேச்சே இல்லை. இது தொடர வேண்டுமா?

இலங்கையில் தமிழருக்கு என்று இருக்கும் ஒரே பிரதிநிதித்துவம் தமிழ்க் கூட்டமைப்பென்ற ஒரு கட்சி தான்.. அதற்கு வாக்களிக்காவிட்டால் வடக்கின் ஆளுநராக சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் இது எந்தளவு பாரதூரமானது என்பது நான் சொல்லியா உங்களுக்கு விளங்க வேண்டும்.

13 வது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்... நான் அரசியல் ஞானத்தில் பழுத்தவன் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் எது சிறந்தது என வகைப்பிரிக்கத் தெரிந்தவன்... அந்தச் சட்டத்தில் உளள விபரணங்கள் யாருக்காவது முழுமையாகத் தெரியுமா?
உதாரணத்திற்கு அதில் தனிப் பொலிஸ்படை அமைப்பதற்கான அதிகாரம் மற்றும் காணி தொடர்பான அனைத்துச் சட்டங்களும் வழங்கப்படுவதாக இருக்கிறது.
இன்றைய நிலையில் அதை புறக்கணித்தது எந்தளவு தவறானது என்பதை எத்தனை பேர் ஒத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அதை குழப்புவதற்கு முனைப்பாக இருந்தது அரசாங்மே காரணம் அது வழங்கப்பட்டால் உள்ளுர் புரட்சி மூலம் நாங்கள் தமிழீழத்தை அடைந்து விடுவோம் என்பது அவர்களுக்கு அப்போதே விளங்கிவிட்டது. அது பற்ற சிந்திக்காமல் போனது எம் தவறு தானே...

தயவு செய்து யதார்த்தங்களை விளங்கிக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் தற்போது நடுத்தர மக்களால் வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலையே காணப்படுகிறது. கொள்கைகள் கொள்கைகள் என்றும் நடை முறை வாழ்க்கையை நாமே இழக்க போகிறோம்.

இதைப் படிக்கும் சிலர் என்னை அரசாங்க ஆள் என்றொ அல்லது தேசத் துரோகி என்றோ பட்டமளிப்பு விழா நடத்தலாம் எனக்கு அதில் எள்ளளவும் கவலை இல்லை ஆனால் இன்னும் ஒரு போரை இங்கே உருவாக்க வேண்டாம் என்பதே என் ஆசை

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


14 கருத்துகள்:

வியாழன், 11 ஜூலை, 2013

பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் ஆன்மீகம் கடந்த சமூக சாதனைகள்

 வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


உலக சுழற்சியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல்வேறு நபர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் மீது நாம் நோக்கும் பக்கமே அவர்கள் மீதான தோற்றப்பாட்டை எம் மீது உட்செலுத்துகிறது.
தகவல் தொடர்பாடல் வளர்ச்சியின் பின்னர் சாதகமான கருத்துக்கள் செய்திகளின் பரம்பல் வேகத்திற்கீடாக எதிர்மாறான பரப்புரைகளும் வாதந்திகளும் சம வேகத்தில்  பரவவிளைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் சிலரது நல்ல பக்கங்களும் மெது மெதுவாக மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு செல்கிறது.
இந்த நூற்றாண்டில் உலகை விட்டுப் பிரிந்தவர்களில் மிக முக்கியமான சரித்திர நாயகர்களில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவும் ஒருவராகத் திகழ்கின்றார். இவரை ஒரு ஆன்மீகவாதியாகவும், மத பரப்புரையாளராகவும், மதச் சிந்தனையாளருமாகவே பலர் நோக்குகையில் ஒரு பெரும் தேசத்தின் மூலையில் இருந்து கொண்டு ஒரு தனிமனிதன் இந்தளவு வளர்ச்சி கண்டு இவ்வளவு சாதித்திருப்பது என்பது வியக்க வேண்டிய விடயமொன்றாகும். பணம் எதுவும் செய்யும் என்ற ஒரு வாக்கியத்தால் மறுவாதங்களை பிரயோகித்தாலும் உலகில் எவருமே எட்ட முடியாத ஒரு எல்லையைத் தான் அவர் எட்டியிருக்கிறார்.
இவருக்கு உலகமெங்கிலும் 114 மையங்களில் 1200 சத்யசாய் அமைப்புக்கள் உள்ளன. அவரது பக்தர்கள் 100 கோடி பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுப்புக் கூறுகின்றது.
அவருடைய நிறுவனங்கள் உலகமெங்கிலும் 136 நாடுகளில் சமூகசேவையாற்றுகின்றது. அதன் ஒரு பகுதி அமைப்பான விழுமிய சமூக அமைப்பானது ஒரிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தது.
விழுமிய கல்வி அமைப்பானது பல மாணவருக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறது. அதே போல விழுமிய மருத்துவ நிறுவனம் பல இலவச வைத்திய முகாம்களை அமைத்து உலகின் பல்வேறு இடங்களிலும் இலவச மருத்துவ உதவியை அளித்து வருகிறது. அத்துடன் புட்டர்பத்தியிலும் பெங்களுரிலும் மிகப் பெரும் மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டு மருத்துவ வசதியளிக்கப்படுகிறது.
இவரது மிகப் பெரும் சாதனையாகக் கருதப்படுபவற்றில் பிரதானமானது இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ்காரர் ஆட்சியிலிருந்தே ஆந்திராவில் ஆனந்பூர் மற்றும் கோதாவாரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முடியாமல் வறட்சியில் காணப்பட்டது. இப்பிரச்சனை இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் பல் ஆட்சியாளர்களால் தீர்க்க முடியாமல் இருந்த நிலையில் ஒரே வருடத்தில் அவ்வளவு இடத்திற்கும் குடிநீர் கிடைக்கச் செய்து வழி செய்தார்.
சென்னையில் இருந்த குடி நீர் பஞ்சத்தைத் தீர்க்க ஆந்திர அரசுடன் இணைந்து இரு அரசும் முயற்சித்த தெலுங்கு கங்கை நீர்த்திட்டத்தை சுமார் 200 கோடி செலவழித்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.
இவை இப்படியிருக்கையில் பகுத்தறிவு பேசியும் ஆன்மீகவாதிகளை கீழ்த்தரப்படுத்தியும் அரசியல் நடத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் கூவம் நதியை துப்பரவு செய்து தரும்படி பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் வேண்டு கோள் விடுத்திருந்தார்.
இவர் மரணம் அடைந்த பொழுது உலகமெங்கிலும் இருந்து 4 லட்சம் பக்தர்கள் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவரது இறுதி நேரம் உறுதியாகிவிட்ட நிலையில் 6000 போலிஸ்காரர்கள் புட்டர்பத்தியில் குவிக்கப்பட்டிருந்தார்கள். ஆந்திரா அரசு 4 நாட்கள் துக்கதினமாக அறிவித்து அனுஸ்டித்து அவரை கௌரவித்தது.
எல்லாம் தெரிந்தவருக்கு தன்னைக் காப்பாற்றத் தெரியவில்லை என சில பகுத்தறிவு பேசும் அரைகுறை அறிவாளிகள் கூறிக் கொண்டாலும் சித்தர்களைத் தவிர சமூக மாயைக்குள் வாழ்ந்த எந்த மனிதனும் மரணச் சக்கரத்தைக் குழப்பி வாழவில்லை என்பது அறிவுறுத்தியும் எடுபடப் போவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் என தம்மை அடையாளப்படுத்தி வாழ்பவர்கள் தம்மை ஒரு குழுவிற்குள் வேறுபடுத்திக்காட்டவும் தம் நிலைப்படுத்தலை உறுதிப்படுத்தவுமே பகுத்தறிவு பேசுகிறார்கள்.
ஒரு தனிமனிதனால் 100 கோடி பேர் நல்லவர்களாக வாழ்கிறார்கள் என்றால் அதைப் போல சாதனை இந்த பாதக உலகத்தில் வேறெதுவாக இருக்க முடியும். அப்படி நம்பி வாழ்பவரை கீழ்த்தரப்படுத்துவதால் பாவிகள் உலகத்தை சிருஸ்டிக்கும் நீங்களே பாவிகளாக மாறிக் கொள்கிறீர்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

AM 7:53 - By ம.தி.சுதா 6

6 கருத்துகள்:

வெள்ளி, 28 ஜூன், 2013

என் 200 வது பதிவும் குறும்பட விபரங்களும் (THULAIKKO PORIYAL TRAILER)

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முற்குறிப்பு- இக்குறும்படமானது எனக்குள் இருந்த குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக உருவாக்கப்படுவதே தவிர இது எனது தொழில் முறை ரீதியான முயற்சியல்ல என்பதை கூற விரும்புகின்றேன். இதற்குப் பிறகும் எனது படைப்புக்கள் வருமா என்பது என் தொழில் தான் தீர்மானிக்கும்.


எப்போதுமே முதல் முயற்சிகள எல்லோருக்கும் வெற்றியளிப்பதில்லை ஆனால் அம் முயற்சி மீதிருக்கும் தீவிரம் அதை கைவிடாமல் வைத்திருந்தால் என்றோ ஒரு நாள் ஆரம்பத்தில் இருந்த அதே உற்சாகத்துடன் அவ் இலக்கை அடைய உதவும் அந்த வகையில் எனக்குள் இருந்த ஆர்வத்திற்கு எனது மைத்துனர் ரஜிகரன் கொடுத்த உதவி தான் இப்படைப்பு.

படைப்பு பற்றிய ஒரு சிறு விபரம்
ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் அமுக்கி வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைத்துக் கொள்ளும் நான் இம்முறை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும்.
இத்தலைப்பானது எமது பிரதேசங்களில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள். 

உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது.
படம் தொடர்பான பணிகள் முடிவடைந்துள்ள போதும் வரும் மாதம் அளவில் தான் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மனம் சற்றும் கூட சலிக்காமல் கமராவுடன் ஒத்துழைத்த செல்லா அண்ணா கணணியுடன் போராடிய செல்வம் அண்ணா நேர காலம் பாராமல் ஓடி வந்து ஒத்துழைத்த ஜெயதீபன், செல்வம் அண்ணா, ஏரம்பு ஐயா, ஆசிரியை சுதேசினி போன்றோர் என்றும் என் நன்றிக்குரியவர்கள்.
என்ன படைப்பு எப்படியானது என்று கூட அறியாமல் ”மதிசுதாவா செய்தவன் அப்படியென்றால் சரி” என்று சம்மதம் சொல்லி இசையமைத்து தந்த அற்புதன் அண்ணா.
பலவகையான தொடர்புகளுக்கு உதவிய வேல் முருகன்.
அதுமட்டுமல்லாமல் நேர காலம் பாராமல் என்ன வடிவத்தில் கேட்டாலும் மாற்றி மாற்றி வடிவமைத்துத் தந்த பதிவர் மதுரன் மற்றும் ஆலோசனைகள் தந்த அண்ணர் மௌனரூபன் ஆகியோருடன் சகல விதத்திலும் ஒத்துழைப்புத் தந்த செல்லா வீடியோ அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் ஆரம்பத்திலேயே நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


என் 200 வது பதிவு பற்றியது

வன்னியில் இருந்து மீளும் போதே (நலன்புரி முகாமில் இருக்கும் போது) வலைத்தளம் ஒன்று அமைத்து எழுத வேண்டும் என்ற ஒரு லட்சியத்தோடு பொழுது போக்காக எழுத ஆரம்பித்த இத்தளத்தில் நான் பெற்ற வெகுமதிகள் நான் எதிர் பார்க்காதவையே. அதன் பின்னர் அடைந்த வேலைப்பழுக்கள் எனது பதிவிடுதலுக்கான நேரத்தைப் பிடுங்கிக் கொண்டாலும் 3 வருடத்தில் 200 வது பதிவைத் தொடுகிறேன்.
ஆனால் இத்தனைக்குள்ளும் 467,000 என்ற பார்வைகளின் எண்ணிக்கையானது ஒரு பதிவுக்கான சரசரி பார்வைகள் 2300 என்பதைக் கொடுத்துள்ளது அந்த வகையில் எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை எண்ணிக் கொள்கிறேன்.
ஆரம்ப காலத்தில் இருந்து என் பதிவுலக வளர்ச்சிக்கு உதவியவர்களில் ஒருவரான ஜனா அண்ணா தனது பதிவில் குறிப்பிட்டவை இந்த தொடுப்பில் உள்ளது.

இந்தவாரப் பதிவர் - திரு -மதி.சுதா

 நன்றிச் செதுக்கலுடன் 

அன்புச் சகோதரன் 

ம.தி.சுதா


18 கருத்துகள்:

வியாழன், 20 ஜூன், 2013

2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை

கடந்த 15.6.2013 அன்று வீரகேசரியில் வெளியாகிய எனது ஆக்கம்.....


வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் குறும்படப் போட்டி 2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை

தொழில் நுட்பம் என்பது இலகுவாக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதன் கைகளுக்குள்ளும் புகுந்து கொண்டதன் பலனை திரைப்படங்கள் மேல் அதீத ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ரசிகனையும் உசுப்பேற்றி குறும்படம் என்னும் ஒரு திரைப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு ஏதுவாக அத்துறையை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் கடந்த 31.5.2013 அன்று யாழ்ப்பாணத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சால் வடமாகாணத்திற்குற்பட்டவர்களுக்கான குறும்படப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
முதற்கட்டத் தெரிவுப் போட்கள் வவுனியாவில் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்பட்ட 15 குறும்படங்கள் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் நடுவர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டது.

அப்படங்கள் தொடர்பான ஒரு சுருக்கப் பார்வை இதோ….
1. பாடங்கள்
வாழ்க்கையில் தலை முறை கடக்கவேண்டிய சில பாடங்களை படங்களாகக் கொண்டிருந்த ஒரு குறும்படமாக இருந்தாலும் ஆவணப்படம் ஒன்றின் சாயலை பிரதிபலித்ததால் மற்ற குறும்படங்களில் இருந்து சற்று வேறுபட்டதாகத் தோற்றமளித்தது.

2. சலனங்கள்
முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மீது மற்றவர் வைத்திருக்கும் பார்வை நிலையைத் திசை திருப்ப வைக்கும் கதைச் சுருக்கத்தைக் கொண்டு அமைந்திருந்தது. அத்தனை காட்சிகளும் இரவில் படமாக்கப்பட்டது இயக்குனரின் தற் துணிவைக் காட்டியிருந்தாலும் பல இடங்களில் பாத்திரங்களது முகபாவனை இருளால் மறைக்கப்படடிருந்தது.

3. அப்பு
வன்னியின் முழங்காவிலில் இருந்து தேர்வாகியிருந்த இக்குறும்படமானது ஈழத்தின் முக்கிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டிருந்தது. இக்குறும்படமானது முதுமையின் இடர்பாடுகளைக் கொண்ட கதைக்கருவையும் கை தேர்ந்த பாத்திரத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் பிறழ்வடையாத நாடகச் சாயலானது குறும்படம் என்ற எல்லைக்குள் உள் இழுக்கத் தவறி விட்டது.

4. தண்ணீர்
5 ரூபாய் தபால் முத்திரையில் எழுதிவிடக் கூடிய ஒரு அழுத்தமான கதையை மட்டும் கொண்டு காட்சிகளையும், யதார்த்தமான பாத்திரம் மற்றும் உணர்வைப் பிரதிபலிக்கும் இசை இவை மட்டும் கொண்டு தத்ரூபமாக வார்த்தெடுக்கப்பட்ட படமாகும்.

5. வேகம்
இளமையின் வேகம் எந்தளவு பாரிய விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை உணர வைக்கும் குறும்படமாகும். இதில் கதை மற்றும் பாத்திரங்களின் வேகத்தை விட ஒளிப்பதிவாளரின் வேகம் தான் அதிகம் ரசிக்க வைத்தது.

6. வல்லூறு
போதை தரும் உறவுப் பிரிகையும் சிறுவர்களிடையேயான உணர்வுர்ச் சேர்கையையும் தத்ரூபமாக கூறிய படம். இக்குறும்படத்தின் வெற்றிக்கு இயற்கைச் சூழலும் அத்துடன் ஒளிப்பதிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட இயற்கை ஒலிகளும் சாதகமாக அமைந்திருந்தாலும் திரைக்கதையின் வேகம் சற்று ரசனையையும் தாமதப்படுத்தியிருந்தது.

7. தோள் கொடு
நியமாகவே வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாற்றுத் திறணாளியைக் கொண்டு அவன் மனநிலையையும் மனித நேயத்தையும் பொறுப்பற்ற மனிதருக்கு உணர்த்தும்படமாகும். சாதாரண கமரா மற்றும் ஒளித்தொகுப்பு தொழில்நுட்பத்துடன் உருவான நல்ல படங்களில் ஒன்றாகும்.

8. சாம்பல்
நாம் பயன்படுத்தும் பெறுமதி குறைந்த ஒரு அற்ப பொருளுக்குப் பின்னும் எத்தனை ஏழைகளின் உதிரம் ஒளிந்திருக்கிறது என்பதைக் கூறியுள்ள படம் சாம்பலாகும். சிறந்த ஒளிப்பதிவோடும் இசையோடும் மட்டும் பயணித்திருக்கும் இப்படத்திற்கு வசனங்களும் இணைந்திருந்தால் உணர்வுகள் மேலோங்கியிருக்கும்.

9. மரண அறிவித்தல்
பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க எண்ணி புலம்பெயர் தேசமனுப்பும் பெற்றோரின் வாழ்வு எவ்வளவு இருள்மயமானது என்பதற்கு நல்ல உதாரணமாக அமைந்த படமாகும். நிறப்பிரிகையோ காட்சி மாற்றமோ சரியாக அமையாத flash back காட்சிகள் இப்படம் தொடர்பான சிறு குழப்பத்தை ஏற்றுடுத்தியது.

10. விட்டில்கள்
இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி இளைய தலைமுறையின் வாழ்வை எப்படி சீரழிக்கிறது என்பதை மட்டக்களப்பு கொலைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்துக் கூறும் படமாகும். சிறந்த படத் தொகுப்பும் ஒளி நிறக்கலவையும் படத்தின் தரத்தை மற்றைய படங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டியதுடன் பின்னணி குரல் முயற்சியிலும் மற்றைய படங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. கதையின் கனதியற்ற தன்மையும் நாயகியின் நடிப்போடு ஒட்டாத தன்மையும் படத்திற்கு மறையாக அமைந்திருந்தது.

11. நோ
பல குடும்பங்களின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிப் போகும் பெண்களின் வேதனையை கமராவுக்குள் கொண்டு வந்த குறும்படமாகும். ஆனால் அளவுக்கதிகமான வன்முறை சார்ந்த ஒரே காட்சிகள் மீள மீள வந்து போனது உறுத்தலாகிப் போனது.

12. எழுத்துப்பிழை
ஒரு விலைமாதுவுக்கும் அவள் குழந்தைக்குமிடையேயான பாசப் பிணைப்பையும் உணர்வுகளையும் உணர்வு பூர்வாமாகக் கூறிய குறும்படமாகும். கதையில் வந்து போன அத்தனை பாத்திரங்களும் கதையோடு ஒன்றித்துப் போனது படத்தின் சிறப்பை மென்மேலும் அதிகரித்திருந்தது.

13. பாதினியம்
இன்றைய சூழலில் சமூகத்தில் இடம்பெறும் இளைஞர் தொடர்பான பிரச்சனைகளை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படமாகும். ஆனால் படத்தில் கவனிக்கத் தவறிய எழுத்துப்பிழைகளும் முன்னுக்குப் பின் முரணான திரைக்கதையும் படத்தின் கனதியைக் குறைத்திருந்தது.

14. ஏ கோல் (a call)
இக்குறும்படப் போட்டியில் ஒரு முற்போக்கான திரைக்கதையுடன் களமிறங்கிய ஒரே ஒரு படம் இது தான். 12பி திரைப்படத்தின் அடிப்படைக் கதை அமைப்பைக் கருவாகக் கொண்டு உருவான வித்தியாசமான படமாகும். ஆனால் மொழி ஆளுகை இழந்த தலைப்பு உறுத்தலாக இருந்ததுடன் இறுதிக் காட்சி ஏதோ ஒரு ஹெலிவுட் படத்தை நினைவுபடுத்துவது போல அமைந்திருந்தது.

15. விழித்திடு
இன்றைய சமூகத்தில் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூறியுள்ள ஒரு படமாக அமைந்திருந்தது. ஆனால் எதற்கெதிராக ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறதோ அதையே அளவுக்கதிகமாகக் காட்டக் கூடாது கோட்பாட்டை கவனிக்கத் தவறியது படத்தின் மீதான பார்வையை வேறு திசைகளுக்கு மாற்றியிருந்தது.

சிறப்பாக திரையிடப்பட்டிருந்த குறும்படங்களானது ஈழத்தின் குறும்பட வளர்ச்சியை தெளிவாகப் புடம் போட்டுக் காட்டியிருந்தது. சில படங்கள் குறும்படங்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படாதவை என்ற ஒரு விமர்சன நோக்கெழுந்தாலும் இவை ஆரம்ப கட்ட வளர்ச்சிப்பாதை என்பதால் அடுத்தடுத்த காலப்பகுதிகளில் பெரும் மாற்றத்துடனான குறும்பட வளர்ச்சிப் போக்கு உருவாகும் என்பது அனைவரதும் திடமான நம்பிக்கையாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
உடுப்பிட்டியூர்
ம.தி.சுதா

AM 10:22 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top