Featured Articles
All Stories

ஞாயிறு, 29 நவம்பர், 2015

எம் குழந்தை ஒன்றுக்கு எம்மால் முடிந்த உதவி


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவு செல்வாநகா் கிராமத்தைச் சோ்ந்த எஸ். சுரேஸ் ஆனந் அவா்களுடைய 17 வயது மகள் ஜெனிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பளை மருத்துவமனையில் சிகிசைப் பெற்று வருகின்றாா்.

தற்போது ஜெனிகாவுக்கு உயிா் வாழ்வதற்கான சிகிசை மேற்கொள்வதற்கு 750000 ரூபா ( ஏழு இலட்சத்து ஜம்பதாயிரம்) தேவையென மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.
மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையான ஜெனிகாவின் மருத்துவச் செலவை தேட முடியாது சாரதியான தந்தை சுரேஸ் ஆனந்த போராடி வருகின்றாா். குடும்பம் மிகவும் வறியது .

தனது மகளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தந்தை பல இடங்களிலும் ஏறி இறங்கி வருகின்றாா். மகளை காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறாா்.மகளை காப்பாற்ற துடிக்கும் பாசமுள்ள தந்தையின் தவிப்பை இங்கு வாா்த்தையில் விபரிக்க முடியவில்லை.
இதுவரைக்கும் மகளின் மருத்துவச் செலவுக்குரிய பணம் கிடைக்கவில்லை.

அன்பான உதவும் உள்ளங்களே முடிந்தவா்கள் ஜெனிக்காவின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்

தொடா்புக்கு.
சுரேஸ்ஆனந்த இல.145 செல்வாநகா் கிளிநொச்சி. தொலைபேசி 075 7535050, 0770755050. 

Via - Murukaiya Thamilselvann
PM 8:04 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

வியாழன், 5 நவம்பர், 2015

வெளிநாட்டுப் பொதிப்பரிமாற்றமும் மறைமுகப் பணப்பறிப்பும்

முற்குறிப்பு - ஊடகங்கள் பிரசுரிக்க மறுக்கும் ஆக்கங்களில் இதுவும் ஒன்று. அதனால் என் சுதந்திர வலைத்தளத்தில் இட்டுக் கொள்கிறேன்..
பல்வேறுபட்ட தொடர்பாடலின் விளைவின் ஒரு பகுதியாக உள் நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் இடையிலான பொதிப்பரிமாற்றமும் அதிகரித்து வரும் இந்நிலையில் அதற்குள் கை மாறும் ஏமாற்று வித்தைகளும் அதிகரிக்கின்றது.

உதாரணத்துக்கு கனடாவில் இருந்து நீங்கள் ஒரு பொதி அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் அங்கிருந்து பரிமாறும் முகவர் முழுத்தொகையும் என்னிடமே செலுத்தினால் போதும் என்று ஒரு பெரும் தொகைப்பணத்தைப் பெற்றுக் கொள்வார். அவரிலிருந்து கொழும்பிலிருக்கும் ஒரு முகவருக்கு மாற்றப்படும். அம்முகவருக்கான பணத்தை கனடாக்காரரே செலுத்திக் கொள்வார். ஆனால் இந்த கொழும்பு முகவர் தான் நேரடியாக பெறுநருக்கு அளிப்பார் அல்லது தான் கிளை முகவருக்கு ஒரு தொகைப்பணத்தைக் கொடுத்து பொதியை விநியோகிப்பார்.

இவை தான் ஒரு பொதிப்பரிமாற்றத்தில் நடக்கும் படிமுறைகளாகும். இதில் எங்கெங்கு ஏமாற்றபடுகிறது என்றால் கனடாவில் இருந்து பொதியை பெறும் பிரதான முகவரோ அல்லது கிளை முகவரோ இங்கிருந்து பொதியை பெறுபவரிடம் தம் கை வரிசையைக் காட்டிவிடுவார்கள்.

இது எப்படி நடைபெறுகின்றது என்பதை பார்ப்போமானால் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் பொதிக்கு இங்கு பெறுவதற்கான பண பெறுதி ஒன்றை முன்வைப்பார்கள். ”அடடா இந்தளவு பெறுமதியான பொருளுக்கு இது ஒரு தொகையா” என நினைத்து செலுத்தி வாங்கிச் செல்பவரே அதிகம்.
பெறுநர் கொஞ்சம் சிக்கனப் பேர்வழி என்றால் அடுத்த கேள்வி கேட்பார். ”இதற்கு இவ்வளவு பணமா? ஏன் இப்படி சொல்கிறீர்கள்” என்றால் அதற்கு அளிக்கப்படும் பதில் ”பரவாயில்லை நீங்கள் எடுக்காவிட்டால் திருப்பி அனுப்பி விடுவோம்” என்பார்கள். அந்தப் பயத்தில் பொதியை பெற்றுச் செல்பவர்களே மிக மிக அதிகமாகும்.

ஆனால் அங்கு பொதியிட்டவர் தான் முழுப்பணத்தையும் செலுத்திவிட்டதாக பெறுநருக்கு பற்றுச்சீட்டுடன் அறிவுறுத்தியிருந்தால் இங்கிருக்கும் முகவர் வழங்கும் அறிவுறுத்தல் ”அது சரி அங்கு கட்டித் தான் இருக்கிறார்கள் ஆனால் இங்கு சுங்க வரி விதிக்கப்பட்டிருக்கிறது” என்பார். விசயம் தெரியாதவர் என்றால் இந்த இடத்தில் ஏமார வேண்டியது தான். ஆனால் கொஞ்சம் விசயம் தெரிந்தவர் சுங்கவரிப்பற்றுச்சீட்டைக் கேட்டால் அதற்கும் ஒரு பதில் தயாராக இருக்கும்.
”கப்பலில் வந்த பொதி என்பதால் மொத்த பொதிகளுக்கும் சேர்த்துத் தான் பற்றுச்சீட்டு உள்ளது” என்று மேசை அறையில் கிடக்கும் ஒரு பற்றுச்சீட்டைத் தூக்கிப் போடுவார்கள். இந்த இடத்திலும் நீங்கள் ஏமாரவில்லையானால் உங்களிடம் எழும் கேள்வியில் தான் நீங்கள் தப்பிப்பதற்கான வழி புலப்படும்.
அதாவது உங்களது பொதி இலங்கையில் சுங்க வரிக்குட்படாதவையாக இருந்தால் நீங்கள் அதைக் கூறுகையில் இங்கிருந்து சில தொலைபேசி அழைப்புக்கள் மாறும் அதன் படி அங்கிருந்து திரும்பும் பதிலில் ”ஓம் சரி அண்ணை உங்களது பணம் அங்கேயே செலுத்திவிட்டார்கள். இப்பற்றுச்சீட்டு உங்கள் பெயரில் மாறி வந்து விட்டது” என்ற சின்ன இற(ர)க்கத்துடன் உங்கள் பொதி கையளிக்கப்படும்.
இச்செயற்பாடனது ஒட்டு மொத்த பரிமாற்ற முகவர்களாலும் இடம்பெறாவிட்டாலும் சிலரால் ஈவிரக்கமின்றி பகல் கொள்ளையாக பெருமளவான பணம் அறவிடப்படுகிறது.
ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனில் தான் குற்றம் என்ற மொழியை நாம் உண்மையாக்கமல் இருப்பதற்காவது முயற்சிப்போமே.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

குறிப்பு - இந்த தகவல் பலரைச் சென்றடைய வேண்டும் என்று கருதினால் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
PM 9:00 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

வியாழன், 24 செப்டம்பர், 2015

ஈழத்துத் திரைப்படமான முற்றுப்புள்ளியா? என்ன சொன்னது

வணக்கம் உறவுகளே நலம்
எப்படி?

அண்மையில் நடந்து முடிந்த யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவானது பலதரப்பட்ட திரைப்படங்களை எம்மவர்க்கு அறிமுகப்படுத்தியதுமல்லாமல் தணிக்கைக் குழுவால் திரையரங்கத் திரையிடலுக்கு தடைசெய்யப்பட்ட படங்களை பார்க்க அனுமதியும் வழங்கியிருந்தது.
அந்த வகையில் எமக்கு பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்த திரைப்படங்களில் ஒன்று தான் மனிதநேயச் செயற்பாட்டளாரான இயக்குனர் ”செரின் சேவியர்” ன் ”முற்றுப்புள்ளியா” என்ற திரைப்படமாகும்.
பல்வேறுபட்ட விமர்சனங்களை எதிர் கொண்ட இந்த திரைப்படத்தை நான் ஒரு விமர்சகனாகவோ திறணாய்வாளனாகவோ எடுத்துரைக்க வரவில்லை. வன்னிப் போரில் வாழ்ந்த ஒரு குடிமகனாகவும் ஒரு படைப்பாளியாகவுமே அணுகுகின்றேன்.
அரசியல் ரீதியாக பெற்ற முன்னுரைக்கு மேலாக செரின் சேவியர் யார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு மனிதநேய ஆர்வலராகத் தான் இந்தப்படத்தை எடுத்திருக்கிறார் என்றால் அதில் சொல்லப்பட்ட கருத்துக்களும் வசனங்களும் அவரது பெயரைக் காப்பாற்றியே இருக்கிறது என்பதை ஆணித்தரமாக ஏற்றுக் கொள்வேன்.
பொதுவாகமே எம்மவர்கள் எங்களுக்கென்று தனித் தனி அரசியலுக்கான ஒரு கண்ணாடியை வைத்துக் கொள்வோம் அப்படி போடப்பட்ட கண்ணாடியால் பார்க்கப்பட்ட ”செரின் சேவியர்” பலதரப்பட்ட கருத்துக்கணைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஒரு படைப்பாளிக்கு தனது குழந்தையை சிலாகித்தால் எவ்வளவு கோபம் வருமோ அதே அளவுக்கு தன் படைப்பபை சிலாகித்தாலும் பொறுக்க முடியாது. ஆனால் இந்த இடத்தில் இதை சர்வசாதாரணமாக அவர் எதிர் கொண்டமை அவரது ஆளுமையை வெளிப்படுத்தியிருந்தது.
படத்தில் எம் பிரச்சனைகள் பச்சைப்படி அப்பட்டமாக வெளிக் கொணரப்பட்டிருந்தது. ஆனால் இப்படி காட்டப்பட்டதற்கு ஒவ்வொருவரும் பகிரும் கருத்துக்கள் அவரவர் தனிப்பட்ட அரசியலாகவே பார்க்க முடிகிறது.

1. எம்மால் பேசவோ/ எழுதவோ/ எடுக்கவோ முடியாத பரப்பு ஒன்றை இயக்குனரால் தொட முடிந்திருக்கிறது 2. செரின் தன்னை ஒரு மனிதநேய செயற்பாட்டாளராக காட்டவே இப்படம் எடுத்தார்.
3. இப்படியான படம் எடுக்கப்பட்டால் கருத்து சுதந்திரம் இங்குள்ளது எனக் காட்ட முடியும்.
4. 50 இலட்சத்துக்கு மேல் செலவளிக்க வேண்டியிருந்திருக்கும் அப்படியானால் அந்த பணத்தை வைத்து தயாரித்தது யார்?

இப்படி பல்வேறு விமர்சனங்கள் இப்படைப்பு மேல் முன்வைக்கப்பட்டாலும் பல படைப்பாளிகள் இப்படைப்பை கருத்தியலுக்கப்பால் எதிர் கொண்ட விதம் வேறு. அந்த இடத்தில் தான் திரைப்படம் பலரை திருப்திப்படுத்தாமல் விமர்சனத்துக்குள்ளாகிக் கொண்டது. மேற் சொன்னவை எல்லாம் தனிப்பட்ட அரசியல் கருத்துக்களாகப்பட்டாலும் ஒரு படைப்புக்கு கட்டாயம் கிடைக்கும் விமர்சனம் தான் அவை ஆனால் ஒரு 10 வருடத்தில் செரின் சேவியர் தனது உண்மையான நிலைப்பட்டை வலுப்படுத்திய பின்னர் சொன்னவர்களே வெட்கித் தலை குனியலாம்.
ஆனால் படைப்பாக இப்படம் சில சிக்கல்களை எதிர் நோக்கியது அது என்ன?
ஆரம்பத்தில் சாதாரணமாக போடி போக்ககத் தான் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தில் திரையரங்கு போன எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. காரணம் வெளிநாட்டில் வசித்த ஒருவரால் இப்படி ஒரு படத்தைக் காட்டுவதென்றால் எவ்வளவு தேடல்கள் செய்திருக்க வேண்டுமே அந்தளவுக்கு செய்திருந்தார் (சில ஜதார்த்த மீறல்கள் தவிர). சாதாரணமாக ஒரு ஆவணப்படம் எடுக்கும் எனக்கே அனுமதி உள்ள விடயங்களைத் தேடவே எவ்வளவு காலம், நேரம் எடுக்கும் என்பது தெரியும்.
உதாரணமாக தமிழீழ அடையாள அட்டை, தமிழ்த்தாய் நாட்காட்டி, அதில் தமிழீழ வைப்பக விளம்பரம், அண்ணையின் வசனம், போராளிகளுக்குப் பின்னுக்கிருக்கும் படங்கள் இப்படி பலதைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் நல்லூருக்குள் அப்படி புலிப்படம் முதுகில் போட்ட ஒருவர் எப்படி என்பது எனக்கிருக்கும் கேள்வியே?

ஆனால் படமாக போன எமக்கு இவை அதிசயத்தைக் கொடுத்தாலும் ஒரு திரைப்படத்துக்கான திரைக்கதையாக பெரும் ஏமாற்றம் காத்திருந்தது ஏனென்றால் ஆரம்பம் முதல் திரைப்படம் என விளம்பரப்படுத்தியிருந்தாலும் அங்கே முற்று முழுதாக ஆவணப்படம் ஒன்றின் தோற்றப்பட்டில் ஒரு கதையை மட்டும் கொண்டு அத்தனை மணித்தியாலம் படமாக எதிர் பார்த்துப் போனவனுக்கு திருப்தி ஏற்பட்டிருக்காது அது தான் பலரது கருத்து வெளிப்பாடகும் ஒரு ஆவணத்திரைப்படம் என முதலே விளம்பரமிட்டிருந்தால் நிச்சயம் இந்தக் கருத்து நடத்திருக்காது. இத்தனைக்குமப்பால் ”செரின் சேவியர்” என்ற அறிமுக இயக்குனர் முதல் படம் இப்படியாவது செய்திருக்கிறார் என்பதை எந்த ஒரு படைப்பாளியாலும் வியப்பாகவே தான் பார்க்க முடியும். காரணம் படத்தில் அந்தளவுக்கந்தளவு Research செய்யப்பட்ட உழைப்புக்கள் கொட்டப்பட்டிருந்தது.

இதை விட படத்தின் மொழி அவ்வளவாக எம்மோடு ஒட்டாமல் போனதும் ஒரு காரணம் இலங்கையில் டப்பிங் செய்ய முனைந்த போது 6 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னமே சில ஊடகவியலாளர்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.
படம் முழுக்க எனக்கு உறுத்தலாக இருந்த விடயம் அந்த தளபதியின் ஜீன்ஸ் தான் (என் தனிப்பட்ட கருத்து). அப்படிப் பிட்டத்துக்கு கீழ் வரும் ஜீன்சை எந்த ஒரு போராளி அணிந்தும் நான் கண்டதில்லை மிக மிக உறுத்தலாக இருந்ததுடன் அவர் சீருடை கழட்டி விட்டு அணியும் மினுக்கிய சேட் அவர் கதை, இந்திய பாத்திரங்களை நினைவுட்டம் மிடுக்கற்ற அந்த மீசை என முற்று முழுதாக அந்த பாத்திரம் என்னில் இருந்து அந்நியமானாலும் நடிகையான அன்னபூரணி போராளியாகவும் சரி முகாம் வாழ் பெண்ணாகவும் சரி என்னை திருப்திப்படுத்தியிருந்தார்.
தேடலுக்கு போன இடத்தில் பல தவறான தகவல்களும் செரினுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. ஒரு திருமணவீட்டிலும் பெண்ணுக்கு golden மணிக்கூடு கட்டப்படுகிறது. அவதானித்த வரை casio மணிக்கூடு தான் கட்டப்படுவதுண்டு.
அத்துடன் போராளியின் கை நூலை வைத்து பிரிவு அடையாளம் காணும் முறை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இருவர் கையிலும் தகடு இல்லை. கையில் தகட்டுக்காக மட்டுமே நூல் கட்டியிருக்க முடியும் என்பது தான் விதிமுறை மீறினால் கடுமையான punisment எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.
இப்படி சில மீறல்கள் வன்னித் தள வாசிகளை படத்துக்கு வெளியே அடிக்கடி இட்டுச் சென்றாலும் ஒரு இடத்தில் வன்னிவாசிகளை மட்டுமல்லாமல் போரியல் வாழ்வோடு ஒட்டியிருந்த அனைவரையும் கட்டிப் போட்டார். அந்த இடம் எமது துயிலுமில்லப்பாடலாகும் (பாடல் இசை தான் வந்தது) எத்தனை தரம் அதைக் கேட்டாலும் எத்தனை பேருக்கு மண் போட்டோமோ அத்தனை பேரது முகங்களும் வரிசையாக வந்து போகும் சக்தி அந்தப்பாடலுக்குண்டு.

மற்றைய விடயம் தாலியாகும்...... எனக்கு மட்டுமல்லாமல் இன்னுமொரு சக படைப்பாளிக்கும் குழப்பமளித்த இடமாகும் காரணம் தாலியை அவர் கப்பல் ஏறும் போது கழட்டிக் கொடுத்தார் (பகல்) என்றே கதை நகர்ந்தது. ஆனால் முடிவில் இந்த இரவு நேர கூடாரத்தில் கொடுப்பதாகவும் கதை நகர்கிறது.

ஆனால் மீண்டும் குறிப்பிடுகிறேன் பல விடயங்களில் இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும் காரணம் விடுதலைப்புலிகள் எடுத்த படங்களைத் தவிர அவர்களை அதிகபட்சம் சரியாகக் காட்டி வெளித்தளத்தில் இருந்து ஒருவரால் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தானிருக்கும் (எல்லாளன் இந்திய ஈழ இயக்குனர்களின் கூட்டுத் தயாரிப்பாகும், ஆணிவேர் ஜான் இயக்கினாலும் முற்றுமுழுதாக போராளிகளின் பங்கே இருந்தது)

படத்தில் தளபதிகளின் வாழக்கை சமாதானகாலத்தில் மாறியமையும் தோல்விக்கு காரணம் எனப்பட்டிருந்தது. இயக்குனர் எப்படியான வாழ்க்கை என தெளிவாக காட்டவில்லையே எனக் கூட நினைத்தேன். ஆடம்பர வாழ்க்கை தொற்றிக் கொண்டமை காரணம் என்றால் நானும் ஏற்றுக் கொள்ளத் தயார். (அதற்கு உதாரணமானவர்கள் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் குறிப்பிட்ட சிலர் தான் அப்படியானார்கள்) ஆனால் திருமணம் தொடர்பாக முற்று முழுதாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழனின் முற்று முழுதான போர் வாழ்வியலில் திருமணம் தடை செய்யப்பட்டிருப்பதாக வரலாறிருக்கவில்லை.
ஆனால் ஆடம்பர வாழக்கை தொற்றிக் கொண்டதும் ஒரு வகை காரணமே தவிர தோல்விக்கு அது தான் காரணம் என்பது தவறு.

கருத்தியல் காட்சிகளுக்குப்பால் ஒரு திரைப்படமாக இப்படத்தை எதிர் கொள்ள முடியாமல் போய்விட்டது. சொல்ல வந்த கதை தொங்கிப் போய் நிற்க சென்னைவாசிகள், செய்ற்பாட்டாளர்கள் என இடையில் வந்தாலும் கதைக்கு தேவையானது என வைத்தாலும் தேவையற்ற அவர்களது இழுவையான காட்சிகள் படத்தின் மையக் கதைக்கு வெளியே அதிக நேரம் தரிக்க வைத்து படம் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற கணிப்பீட்டை எமக்கு கொடுத்து விடுவதை இயக்குனரால் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.
ஆனால் ஈழத்திரைத்துறையில் ”முற்றுப்புள்ளியா?” என்ற திரைப்படமானது ஒரு பெரும் முயற்சி அதுவும் ஒரு பெண் இயக்குனரின் முனைப்பு என்பது எமது வளர்ச்சிப்படியின் ஒரு பெரிய அத்திவாரமே. இத்தனை கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து ஒரு தரமான துணிவான திரைப்படத்தை ”செரின் சேவியர்” எமக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் என் விருப்பமாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
PM 9:17 - By ம.தி.சுதா 2

2 கருத்துகள்:

வெள்ளி, 22 மே, 2015

ஐபிஎல் போட்டிகளும் நான் வாங்கிக் கட்டும் சாத்திரங்களும்..

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?
ipl இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில் ஒவ்வொரு ஐபில் க்கும் நான் ஏதாவது சொல்லப் போய் வங்கிக் கட்டுவதுண்டு இந்த முறை இன்னும் வாங்கிக் கட்டாத காரணத்தால் இந்த பதிவு....
கடந்த இரண்டு வருடமாக நான் வாங்கிக் கட்டியவையில் முக்கியமானது சென்னை அணியாகும். அதற்கு முதல் வருடம் சென்னையின் மஞ்சள் மற்றும் வெற்றிக்கு அதிக சாத்தியமான நிறம் மஞ்சள் என்றும் பலரை கவர்ந்திழுக்க கூடிய நிறம் மஞ்சள் அது தான் சென்ன ஆதரவுக்கு காரணம் என கூற வரிசை கட்டி வந்து அடி விழுந்தது.
(மஞ்சளின் ஆதிக்கம் மற்றும் சிறப்பு பற்றி ஒக்டோபசை வைத்து நான் எழுதிய பழைய பதிவு ஒன்று தொடுப்பு இதோ - ஒக்டோபஸ் சாத்திரம் உண்மைதானா? ஆய்வாளர் பார்வையில்... )
அதே போல போன வருடம் கூறியிருந்தேன். அதிக வருவாயை ஐபிஎல் லில் அள்ளிக் கொடுக்கும் அணி சென்னையணியாகும் அதனடிப்படையில் தான் அரையிறுதிவரையுமாவது உள் வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னைக்கான அதிகளவான* போட்டிகளைப் பாருங்கள் இரவுப் போட்டியாகவே இருக்கும் பகல் என்றால் அதிகளவில்* சனி ஞாயிறு தினங்களிலே தான் வருகிறது.
இவை எல்லாம் என் கணிப்பு எனக்கு அது சரியாகவே படுகிறது.. படும்....

அதே போலத் தான் இம்முறை ஒன்றை உளற விரும்புகிறேன்.
சென்னை என்பது கிழட்டு அணியாகி விட்டது. காரணம் டோனி என்ற சிங்கம் கிரிக்கேட்டின் இறுதிக் கட்டத்தில் நிற்கிறது. இனி இந்திய அணியின் தலைமைக்கு வரப் போபவர் கோலி தான் அதே போல அதிகளவு பெண்கள் பட்டாளம் ஒன்றை பின்னுக்கு வைத்திருப்பவர்.
இவையே போதும் ஐபிஎல் பணம் கொழிக்க. அதனால் ஏற்கனவே இந்திய அணியின் ரசிகர்களாலேயே வெறுக்கும் அளவுக்கு நடத்தையுள்ள விராட் கோலியை நாயகனாக்க வேண்டிய தேவை கட்டுப்பாட்டு சபைக்கு இருக்கிறது. ஏனென்றால் வரும் வருடம் கூட்டம் திரண்டு வருவதென்றால் அது கோலிக்காகத் தான் இருக்கும்.
அதனடிப்படையில் கோலியை கிண்ணம் வெல்ல வைக்க வேண்டிய தேவை ஒன்று உருவாகிறது. ஆனால் கோலி கிண்ணம் வென்றாலும் பெங்களுருக்கு இருக்கும் பார்வையாளர் பட்டாளத்தை விட சென்னைக்கான பட்டாளமே மிக மிக அதிகம்.
இதனடிப்படையில் கோலி இம்முறை தவற விட்டாலும் பெரும்பாலும் டோனிக்கு பின்னர் சென்னைக்குள் இழுத்து வரப்படப் போகும் ஒரு ராஜாவாக கோலி இருப்பார் என்பது என் நம்பிக்கையாகும்.
ஏனென்றால் கட்டுப்பாட்டுசாபைக்கு தேவைப்படுவது பணம் பணம் பணம்...

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
AM 11:06 - By ம.தி.சுதா 1

1 கருத்துகள்:

வியாழன், 7 மே, 2015

குறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?
முற்குறிப்பு - இப்பதிவை விறைத்த முகத்துடன் சீரியஸ் ஆக படிப்பவர்களது மன உளைச்சலுக்கு நான் பொறுப்பல்ல...


ஒரு இயக்குனர் தான் அமைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் முழுக்கவனமாகவே இருப்பான். அண்மையில் திரைவெளியில் உலாவிய ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சியை வைத்து பலவிதமான கருத்துக்கள் உலாவித் திரிந்தன.
எவ்வகையில் பார்ததாலும் அவ் இயக்குனரின் சிந்தனை வளத்தை பாராட்டியே பலர் கருத்திட்டிருந்தார்கள். ஆனால் எல்லோரும் பார்த்த பக்கம் காதல்மயமானதாகவும் ஆபாச வகையறாக்களுமானதாகவே இருந்தது. குறிப்பாக இவையை வைத்தே படத்துக்கு நிச்சயம் 'A' சான்றிதழ் கிடைக்க வைத்து விடுவார்கள்.
ஆனால் நான் சொல்கிறேன் அது ஒரு குறியீட்டுக் காட்சியாகும். அதாவது இவ்விளக்கத்தின்படி பார்த்தால் அது ஒரு காதல் படம் என்பதற்கப்பால் அது ஒரு science fiction திரைப்படமாக ஏற்றுக் கொள்வீர்கள்.
எதற்கும் இன்னொரு தடவை மேலே இட்டிருக்கும் படத்தை பார்த்து விட்டு கீழ் உள்ளதைப் படிக்கவும்...

1. இளநீர் என்பது உலகத்திலேயே கிருமிகள் அற்ற ஒரு திரவகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
அதாவது வன்னியில் வேலை செய்த பல மருத்துவர்களுக்கு இவை பரிசோதனை ரீதியாகத் தெரியும் காரணம் சேலைன் பற்றாக் குறையான நேரங்களில் அதற்கு பதிலாக இளநீர் ஏற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு.

2. ஒரு மனிதனின் வாயிற்குள் (இது பெண்களுக்கு மட்டுமென்றல்ல) உலக சனத்தொகைக்கு இணையான மக்கள் தொகை கொண்ட கிருமிகள் அடங்கிக் கிடக்கிறது என மருத்துவம் சொல்கின்றது.

இதில் என்ன குறியீடு ?

இளநீர் தான் இந்த உலகமாகும் அந்தளவு தூய்மையான இன்பங்கள் கொட்டிக்கிடக்கும் பொருளை நேரடியாகப் பருகாமல் ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்குள் தான் இன்பம் இருக்கிறது எனக் கருதி அந்த தூய்மையான இன்பங்களை பெண்களுக்கூடாகப் பருக நினைத்து அழிந்து போகிறான். இதைத் தான் நேரடியாகச் சொல்லாமல் அவ் இயக்குனர் குறியீடாகச் சொல்கிறார். ஏன் யாரும் இப்ப சிந்திக்கிறீர்கள் இல்லை.

(இப்போது எத்தனை பேர் என்னை நோக்கி செருப்பெடுத்திருப்பீர்கள் என்று தெரியும் அதனால் அடியேன் தொலைகிறேன். விட்டு விடுங்கள் ஹர ஹர மகா தேவ கீ)

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

என்னுடைய பக்கத்துடன் LIKE செய்து இணைந்திருப்பதனூடு பதிவுகளை தொடர்ந்து பெறுங்கள்
https://www.facebook.com/actormathisutha/
PM 12:07 - By ம.தி.சுதா 7

7 கருத்துகள்:

செவ்வாய், 5 மே, 2015

என் விருது வென்ற குறும்படம் ”தழும்பு“ ன் திரைக்கதையின் முழு வடிவமும் மூலக்கதையும்

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

ஒரு படைப்பானது படைப்பாளியின் பிரதிபலிப்பாக இருந்து அவனுக்கு மட்டும் திருப்தியளிப்பது போதுமானது என்ற பார்வைகளும் ஒரு பக்கம் இருந்தாலும் விருதுகளும் அவனுக்கான ஒரு அங்கீகாரம் தான்.

விருது விபரம்
என்னுடைய இயக்கத்தில் சென்ற வருடம் உருவாக்கப்பட்ட தழும்பு குறும்படம் ஆனது கனடாவில் இடம்பெற்ற சர்வதேச விருது விழா ஒன்றில் சிறந்த நடிகருக்கான விருது ஒன்றைப் பெற்றுத் தந்திருக்கிறது. இதற்கு முன்னர் இக்குறும்படம் ஆனது பிரான்சின் நாவலர் குறும்பட விழாவில் தெரிவாகியதுடன், அதன் பின்னர் நோர்வே சர்வதேச திரை விழாவிலும் தெரிவாகியிருந்தது. அதன் பின்னர் கனடாவின் சர்வதேச தமிழத் திரைப்பட விழாவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததுடன் இவ்விருதை பெற்றுத் தந்திருந்தது.

கதை தெரிவு நடந்த விதம்..
இதன் மூலக்கதையை எழுதியவர் தற்போது பிரான்சின் ஆட்காட்டி இதழின் எழுத்தாளர் குழாமில் இருக்கும் முக்கிய எழுத்தாளரில் ஒருவரான நெற்கொழுதாசன் என்பவராகும். சருகுகள் என்ற அச்சிறுகதையை கண்டவுடனேயே ஏதோ எங்கள் சொந்த வாழ்க்கையுடன் ஒத்துப் போனதாலும் அவ் எழுத்தாளர் என் ஊரைச் சார்ந்த சிறு வயது அண்ணர் என்பதாலும் திரைக்கதையை முடித்து விட்டு தான் ஒரு முறைக்காக அவருக்கு தெரிவித்தேன்.... அதன் பின்னர் ஒரு நாள் திடீரென பார்த்த போது எமது மூத்த திரைத்துறையாளரான ஞானதாஸ் ஐயா அவர்களும் இக்கதையை பகிர்ந்து அருமையான கதை என எழுதியிருந்தார்.
மூலக்கதையை கீழே இணைக்கிறேன்.

குறும்படம் இது தான்..
படத்துக்கான ஒளிப்பதிவை பாலமுரளியும், படத்தொகுப்பை மதுரனும், இசையை தர்சனனும் வழங்கியிருக்கிறார்கள்.
படத்துக்கான ஒலியமைப்பை சன்சிகள் மேற்கொள்ள சீனா உதயகுமார், தினேஸ் ஏகாம்பரம், லக்ஸ்மன், குமணன், தீபன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
குறும்படத்துக்கான முக்கிய உதவிகளை மாதவனும், துவாரகனும் வழங்கியிருக்கிறார்கள்.




திரைக்கதை வடிவம்....
நான் சினிமாத்துறையில் எந்தத் துறையையும் முறையாகக் கற்றவன் அல்ல. நான் ரசித்த சினிமாவில் எனக்கு சரி என்று பட்டதையே தான் படைப்பாக செய்கிறேன். அதனால் இத்திரைக்கதை வடிவம் கூட இத்துறையை முறையாகக் கற்றவருக்கு தவறுகளுடன் தெரியலாம். ஆனால் இவற்றை எல்லாம் நான் கருத்தில் எடுக்கப் போவதில்லை.
கதைகளைக் கையில் வைத்துக் கொண்டு எப்படி திரைக்கதையை எழுதுவது என ஓடித் திரியும் பலரைக் கண்டிருக்கிறேன். அதை இப்படி எழுதிவிட்டு இப்படியும் உருவாக்கலாம் என்ற ஒரு நோக்குடனே பகிர்கிறேன்.
மிக முக்கியமாக இங்கு குறும்படத்தில் நீக்கப்பட்ட பல காட்சிகள் திரைக்கதையில் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இதைப் போன்னு என் மீதமுள்ள 8 குறும்படங்களின் திரைக்கதையையும் அடுத்த கட்டமாகப் பகிர்கிறேன்.

“தழும்பு” திரைக்கதை..

காட்சி 1
களம் - நாயகன் வீடு
(கமராவில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது அதே பிறேமில் கமரா இருக்க வேண்டும்)
ஒரு சில சாவிகள் ஒரு மேசையில் இருப்பது போல 4 செக்கன் காட்சி நகர ஒரு ஆணின் கை அதை எடுக்கிறது. அதன் பின்னர் ஒரு பெண்ணின் கை (தாயின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்) ஒரு ரொபி (சொக்லட்) யுடன் தேநீரை வைக்கிறது.
அதே கை சாவியை திருப்பி வைத்து ரொபியை எடுக்கிறது.
(இதன் பின்னர் குளோசப்)  வாயால் பிய்த்து வாயினுள் போட்டு விட்டு தேநீரை அருந்துகின்றது.
அடுத்த காட்சியில் அவன் தனது சைக்கிள் ரிம்மை நேராக்குகிறான். அப்போது தான் அவனுக்கு கை இல்லாதது பார்வையாளருக்கு தெரிய வேண்டும். (இரண்டு கால்களுக்குள் சில்லை வைத்து நிமிர்த்துதல்)

காட்சி 2
சைக்கிளில் பயணிக்கிறான். பின் கரியலில் ஒரு கைவிளக்குமாறு இருக்கிறது. ஒவ்வொரு பூட்டிய கடை வாசலாக நின்று கடையை ஏக்கத்தோடு பார்க்கிறான்.
ஒரு கடை வாசலைப் பார்க்கும் போது “கடை திறந்திருக்குறதும் பூட்டியிருக்கிறதும் என்ர விருப்பம். தம்பி 3 லட்சம் அட்வான்ஸ் வை கடை தரலாம்.“
மற்றைய கடை வாசலில் “தம்பி தடுப்பால வந்த உங்களிட்டை கடையை தந்தால் எனக்கு பிரச்சனை வரலாம் குறை நினைக்காதிங்கோ“
பயணிக்கும் போது எதிரே ஒரு நண்பன் வருகிறான்.
நாயகன் – “மச்சான் என்னை அடையாளம் தெரியுதோ“
அவன் – எப்பீடீடா மறக்கிறது
நாயகன் – ஆருமே வேலை தாறாங்கள் இல்லையடா ஒரு லோனுக்கு சைன் வச்சு தாறியே.
அவன் – குறை நினைக்காத மச்சான் உங்களோட பழகினாலே பிரச்சனை வரலாம் மச்சான் ஒன்றிரண்டு வருசம் போகட்டும் நீ என்ன கேட்டாலும் செய்யிறன்.
சொல்லிவிட்டு அவன் போக ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு நின்று விட்டுக் கிளம்புகின்றான்.
அடுத்த கடை வாசலுக்கு போகிறான் “தம்பி இந்த பிடி துறப்பு ஒண்டுக்கும் யோசிக்காதை கரண்ட் பில்லை மட்டும் ஒழுங்காக கட்டு“ இந்த வசனம் போகும் போதே அவன் துப்பரவாக்க ஆரம்பிக்கிறான்.
காட்சி 3
புதிய கடையில் இருக்கிறான். ஒரு சிறுவன் சிகரெட் வாங்க வருகிறான்.
“அண்ண ரெண்டு சிகரட் தாங்கோ“
“எத்தினை வயசடா உனக்கு“
“அப்பாவக்கு…“
“போய் கொப்பரை அனுப்பு..”

காட்சி 4
சில பியர் ரின்களில் தரித்து நிழற்கும் கமரா அப்படியே சிறுவர்களுக்கு மாறுகிறது. அப்படியோ பானிங் ஆகும் போது லோங்கில் நாயகன் வந்து கொண்டிருக்கிறான். மதியச் சாப்பாட்டுக்கு அவ் வீதியால் சென்று கொண்டிருக்கிறான். இவர் களைக் கடக்கும் போது
“இவர் தான் மச்சான் சிகரட் தர மாட்டனென்டவர்“
மற்றவன்
“இஞ்ச… ஹலோ..“
இவன் திரும்பிப் பார்க்க தெரியாதது போல அவர்கள் மற்றப்பக்கம் பார்க்கிறார்கள். இவன் கிளம்ப ஆயத்தமாகிறான்.
பின்னாலிருந்து குரல் வருகிறது.
“பிச்சக்காரத்தனமா கடை போட்டிருந்தா குடுக்கிற காசுக்கு சாமான் தரணும் கண்டியளோ”
சைக்கிளை விட்டு இறங்கியவன் ஸ்ரான்டை தட்டிவிட்டு அருகே போறான். போன வேகத்துக்கு கடைக்கு வந்த போடியனுக்கு பளார் என ஒரு அறை. அவன் சுழன்று விழுகிறான். மற்ற சைக்கிள்களும் பொத்தென்று விழ மற்றவர்கள் ஓடுகிறார்கள்.
இப்போது அவர்கள் ஓடுவதைக் காட்டத் தேவையில்லை வீழுந்த சைக்கிள் சில்லு சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களில் ஒருவன் திருப்பி வந்து செருப்பை எடுத்துக் கொண்டு ஓடுதலை காட்டினால் போதும்.
அடிவாங்கியவன் கன்னத்தை தடவிக் கொண்டு எழும்பி போகிறான்.
“பொறு உனக்கு அப்பாட்டை சொல்லி என்ன செய்யிறன் பார்“
“போடா போ.. கை இல்லாதவனெண்டால் போல பலமில்லாதவன் எண்டு நினைக்காதை கொப்பனையும் வெட்டிப் போட்டு ஜெயிலுக்கு போவன்ரா“ உச்ச கோபமா.. (இது அவன் இப்பவும் பலசாலி என்பதைக் காட்டுவதற்காக)
காட்சி 5
கடை வாசலில் கண்ணாடி துடைத்துக் கொண்டு நிற்கிறான்.
அப்போது தகப்பன் பின்னால் வருகிறார். அவரோடு அடிவாங்கியவனும் வருகிறான்.
கொஞ்சம் எட்டத்தில் நின்றபடி
“டேய் காட்டுமிராண்டி நாயே என்ர பொடியனுக்கு அடிக்க நீயாரடா“
திரும்பிப் பார்த்து விட்டு வன்முறை விரும்பாதவன் போல தன் வேலையை பார்க்கிறான். அவரது மகன் நகத்தைக் கடித்தபடி நிற்கிறான்.
“கொலைகாரா உன்ர குணத்தால தானே எல்லாரும் ஒதுக்கி வச்சிருக்குதுகள். செத்த சனத்தின்ர காசுகளை அடிச்சுக் கொண்டு வந்து கடை போட்டு பம்மாத்துக் காட்டிக் கொண்டு என்னை ஊரை ஏமாத்துறியாடா..”
இறுதி வசனங்கள் சொல்லும் போது கண் கலங்க வேண்டும் (இவனிலேயே கமரா நிற்க தந்தையின் தொனி குறைந்து அவர் திரும்பிச் செல்வதைக் காட்ட வேண்டும்…
அப்படியே கடைக்குள் ஓடிப் போய் ஒரு மூலைக்குள் இருக்கிறான்.
தன் இழந்த கையை தடவிவிட்டு மறுகையால் முகத்தைப் பொத்தி அப்படியே கீழே கையை விலக்கி வாயோடு நிறுத்துகிறான்.
குமுறி அழுதபடி “இந்தப் பேரெடுக்கவா இந்தளவையும் இழந்தன்“
கருந்திரையுடன் பெயர்கள் இடப்படுகிறது.

சிறுகதைக்கான மூலத் தொடுப்பு இங்கே சொடுக்கவும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா




PM 8:02 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

புதன், 22 ஏப்ரல், 2015

மற்றவர் மரணத்தில் இலாபம் தேடுவது வைரமுத்துவுக்கு இது முதல் முறையல்ல

வணக்கம் உறவுகளே
நலம் எபபடி?


ஆரம்ப காலத்தில் சண் தொலைக்காட்சி ஒரு திரைப்பட நிகழச்சித் தொகுப்பை வழங்கும் அதன் பெயர் வாரம் ஒரு நட்சத்திரம் என்பதாகும். இதே போல இப்போது சமூக வலைத் தளங்களிலும் வாரம் ஒரு நட்சத்திரமாக பலியாடுகளாக அவர்களாகவே தலையை கொடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் குமுதம் மூலம் இந்த வாரம் தலையைக் கொடுத்திருப்பவர் கவிஞர் வைரமுத்துவாகும். மறைந்த மதிப்பிற்குரிய எழுத்தாளரான ஜெயகாந்தனின் பெயரில் தன்னை பாராட்டி எழுதியதான கடிதம் ஒன்றை அதுவும் அவரது இறுதிக் கடிதம் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப் போக அதற்குப் பின்னிருந்த மறைக்கபட்ட நிகழ்வுகளை ஜெயகாந்தனின் மகளான தீபலக்சுமி தனது பேஸ்புக்கில் அப்பட்டமாக போட்டுடைத்துள்ளார்.

இதற்கப்பால் இதற்கு முன்னரும் மற்றவர் மரணத்தில் தனது விளம்பர வண்டி ஓட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது பலருக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை.
ஈழத்தில் இடம்பெற்ற போராட்டத்துக்காக ஆரம்ப காலத்தில் பல தென்னிந்தியப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆனால் மிக நீண்ட காலமாக வைரமுத்து அவர்களை பாடல் புனையும்படி புலம் பெயர் சமூகத்தில் இருந்து பலர் கேட்டக் கொண்டிருந்தாலும் தனது பேருக்கு கெடுதல் ஏற்பட்டு விடும் என மறுத்து வந்தார்.
குறிப்பாக கருணாநிதி அவர்கள் தனது அரசியல் நிலையை தக்க வைத்துக் கொள்ள மத்திய அரசுடன் ஒத்திசைந்து நடக்க வேண்டிய நேரத்தில் தான் தனது அரசியல் பக்க பலத்தை கட்டி எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் வைரமுத்துவுக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் கருணாநிதியுடன் மிகவும் நெருங்க வேண்டிய சூழ்நிலை ஒன்றுக்கு தள்ளப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவ் ஆட்சியில் அவர் பெற்ற சலுகைகள் பட்டங்கள் பற்றி எல்லாம் இந்த உலகமே அறியும்.
இப்படி நடந்தவர் போர் ஓய்ந்து சமாதான காலப்பகுதியில் கிடைத்த சுனாமி என்ற சந்தர்ப்பத்தை ஈழம் நோக்கி சரியான விளம்பர ஆயுதமாக பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர் பணத்தைக் கறந்து தானே ஒரு அல்பத்தை வெளியிட்டு புரட்சிவாதி போல அடையாளப்படுத்திக் கொண்டார்..
இது தொடர்பாக 2011 ம் ஆண்டு நான் எழுதிய பதிவு ஒன்றில் இடப்பட்ட கருத்துப் பெட்டியில் அறிவிப்பாளரும் பதிவருமான நிருபன் அவர்கள் புட்டுப் புட்டு வைத்திருந்தார். அவை தொடர்பான ஸ்கிரீன் சொட்கள் இங்கே பகிர்கிறேன்.

பதிவுக்கான தொடுப்பு - இங்கே சொடுக்கவும்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
PM 2:53 - By ம.தி.சுதா 2

2 கருத்துகள்:

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

DD தொலைக்காட்சியில் ஒன்றாய் கலந்துரையாடிய 4 ஈழத்து கலைஞர்கள் - காணொளி இணைப்பு

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?


கடந்த சித்திரைப் புதுவருட நாள் நிகழ்ச்சயாக டிடி தொலைக்காட்சியானது 4 ஈழத்துக் கலைஞர்களை அழைத்து சமகாலத்தில் கலைத்துறையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியை பாடலாசிரியரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான வெற்றி துஷ்யந்தன் தொகுத்து வழங்கியிருந்தார்.
இக்கலந்துரையாடலில்...
ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும், இயக்குனருமான லோககாந்தனும்
நடிகரும், இயக்குனரும் ஆன கவிமாறனும்
நடிகரும், பாடகருமான ஜெராட்டும்
நானும் கலந்து கொண்டிருந்தோம்.
கலந்துரையாடலின் முழுமையான வடிவம் இணைக்க முடியாமையால் முக்கியமான பகுதிகளை மட்டும் சிறு நேரம் ஒன்றுக்குள் சுருக்கி இணைத்த்துள்ளேன்.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
AM 10:47 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஆகாசின் ”என் கனா உன் காதல்” குறும்படத்தில் நான் ரசித்தவை

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

மிகக் குறைந்த வளங்கள், அடிப்படை சினிமா கற்கை எதுவும் இல்ல பூமியான எம் தேசத்தில் இருந்து வரும் குறும்படங்களில் சின்ன சின்ன வளர்ச்சி கூட தட்டிக் கொடுக்கப்பட வேண்டியவையே...
அந்த வகையில் இன்று செல்லா திரையரங்கில் நான் ரசித்த ஆகாசின் ”என் கனா உன் காதல்” பற்றி பேசியே ஆக வேண்டும்.
முதலில் முன்னரே ரசிக்க வைத்த இடம் குறும்படத்துக்கான தலைப்பாகும். கதையின் மொத்தக் கருவையும் தலைப்புக்குள் உள்ளடக்கியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பில் தென்னிந்திய அரங்கில் இருந்து 5D mark போன்ற கமராக்களில் இருந்து படங்கள் வந்திருந்தாலும் அவர்களிடம் இருக்கும் Lens வசதி போல இங்கில்லை அதனால் DSLR camera வில் படம் பிடிப்பது என்பதே சவாலான ஒரு விடயமான நிலையில் இருக்கும் வளத்தை வைத்து திரையரங்குக்கான தரம் ஒன்றை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். சரியான லென்ஸ் இல்லை என்று பட்ப்பிடிப்பு செய்த சசிகரன் தனிப்பட்ட ரீதியில் கூறியிருந்தாலும் சில இடங்களைத் தவிர அவர் தன்னால் இயன்றவரை வெற்றி கண்டிருக்கிறார்.

அடுத்ததாக கவர்ந்த விடயம் நடிப்பு ஆகும். தனது சொந்தக் கதை என்பதாலோ தெரியவில்லை நடிகர் விஷ்ணு கதாபாத்திரமாகவே அப்படியே படத்திலும் சரி மனதிலும் சரி ஒட்டிக் கொண்டிருக்க...

என்னை வியப்பாக பார்க்க வைத்தவர் நடிகை நிரோசா வாகும். நான் பார்த்த எம்மவர் குறும்படங்களில் முதன் முதலாக ஒரு நடிகையின் romantic நடிப்பை முழுமையான பார்த்த ஒரு திருப்தியைக் கொடுத்தார். படத்தின் மிகப் பெரிய பலமே அவரது பேச்சும் பேச்சுக்கு முதலே பேச வந்ததை பேசிய கண்களும் தான்...

அடுத்ததாக பேச வேண்டிய விடயம் பின்னணி இசையாகும். அடையாளமாக பேச எமக்குள் பல பாடல்கள் இருந்தாலும் பின்னணி இசைக்காக பேசப்பட்ட படங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் அவதானித்தவரையில் பின்னணி இசையில் ரொமான்டிக் படம் ஒன்றில் என்னை இரண்டாவது தடவையாக இசையமைப்பாளர் சுதர்சன் அண்ணா கட்டிப் போட்டிருந்தார். இதற்கு முன்னர் மயன், வினோ அண்ணா, ஜெயதீபன் ஆகியோரின் படைப்பாக வந்த "Unwanted love" ல் புகுந்து விளையாடியிருந்தார். இயற்கை இசைக்கனா இடைவெளியின் போதாமை உணர்வு ஒன்று எனக்குள் இருந்தாலும் குறையாக பார்க்க அவர் இடம் வைக்கவில்லை. படத்தின் இறுதிக் காட்சியில் சந்தோசம், புத்துணர்ச்சி என அவர் கலந்திட்ட இசையின் மெட்டை ஒரே ஒரு தடவை தான் கேட்டிருந்தாலும் இப்போதும் என்னால் பாடிக் காட்ட முடிகிறது.

படத்தில் புதிய கதை என சொல்வதற்கு எதுவும் இல்லை ஆனால் அக்கதையை எமக்கு சொன்ன விதம் தான் படத்தை பலமாக்கியது எனலாம். ஆனால் என் அவதானிப்பின்படி ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்வேன் எடிட்டிங் மேசையில் வைத்துத்தான் திரைக்கதை முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. எதை வைத்துச் சொல்கிறேன் என்றால் முதலே திரைக்கதை திட்டமிடப்பட்டமைக்கான காட்சியமைப்புத் திருப்திகள் காணப்படவில்லை.

மொத்தத்தில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த காதல் படங்களுக்குள் மேம்பட்ட ஒரு படமாக ”என் கனா உன் காதல்” முன்னுக்கு வந்திருப்பதை சந்தோசமாக பார்க்கிறேன்.
இப்படத்திற்கு மிகவும் பலம் சேர்த்தவை 3 விடயங்கள் தான்.
1. திரைக்கதை
2. நிரோசா
3. பின்னணி இசை
இப்படைப்புக்காக உழைத்த ஆகாஷ், விஸ்ணு, நிரோசா, சசிகரன், ஆதன், சுதர்சண்ணா, கிருத்திகன் இவர்களோடு பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
PM 9:42 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

வர்த்தக சினிமாவில் இன்னொரு கட்டத்துக்கு நகரும் ஈழசினிமா

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

ஈழத் தமிழருக்கென்று அடையாள சினிமா தேடும் போராட்டத்தில் ஒவ்வொரு கலைஞனும் தம் நேரம், பொருள், வாழ்வு என பலதை அர்ப்பணித்து கலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் தோற்றுப் போனாலும் எம் போராட்டமும் உழைப்பும் அடுத்த சந்ததிக்கு நல்லதொரு அனுபவப் புத்தகமாக இருக்கும்.
ஈழத்தில் இதுவரை உருவாக்கப்பட்ட குறும்படங்களில் எடுகோளான விழாக்களை எடுத்துக் கொண்டால் இதுவரை காலமும் ஒரு தொகுதியினர் கை கடிக்க கடிக்க தம் காசில் தன்னம்பிக்கையை மட்டும் கொண்டு எடுத்து விட்டு யூரியுப்பில் தரவேற்றிக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் போட்ட காசை எடுக்கலாம் என்ற நம்பிக்கையிலும் படத்துக்கான விளம்பரமாக அமையலாம் என்ற எண்ணத்திலும் வெளியீட்டு விழாக்கள் மூலம் பிரதி விநியோகத்தின் மூலம் போட்ட காசில் குறிப்பிட்ட ஒரு தொகையை மட்டும் எடுத்துக் கொண்டனர்.
இவை எம் சினிமாவை வெளி உலகுக்கு கொண்டு வந்தாலும் வர்த்தக ரீதியில் பாரிய நட்டத்தையே கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் பின்னர் பல இயக்குனர்களது பார்வை திரையங்குகள் பக்கம் திரும்பியது. இதற்கு ஏதுவாக ஹிமாலயா நிறுவனத்தால் நடாத்தப்பட்ட சர்வதேச அரங்கில் அடையாளப்படுத்தப்பட்ட போட்டிகளில் ஒன்றான 48 hours film project என்ற போட்டியின் இறுதி நிகழ்வானது ராஜா திரையரங்கில் நிகழ்த்தியதன் மூலம் கணிசமான வருகையாளர் எண்ணிக்கை ஒரு மாற்றமாக அமைந்த நிலையில்....
மாதவனுடைய ”என்னாச்சு” , சமிதனுடைய ”நீ நான் அவர்கள்” , சிவராஜ் உடைய ”பை” ”பிகரை தியெட்டர் கூட்டிப் போவது எப்படி” , நிலானுடைய ”காதல் என்ன விளையாட்டாப் போச்சா” வரோவின் ”இலவு” போன்ற குறும்படங்கள் திரையரங்க திரைகளை அலங்கரித்து வர்த்தக சினிமாவுக்கான ஒரு ஒளிப்பிரகாசம் அளித்தது.
முழு நீளப்படங்களில் ஏற்கனவே கவிமாறனுடைய ”என்னுள் என்ன மாற்றமோ” , ரமணாவின் ”மாறுதடம்” (இப்படம் தணிக்கை பிரச்சனையால் திரையரங்கில் தடை விதிக்கப்பட பின்னர் மண்டபம் ஒன்றில் திரையிடப்பட்டது) , ராதா வின் ”சிவசேனை” போன்றன திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தன.
அடுத்ததாக ஆகாசின்  ”‎என்‬ ‪‎கனா‬ ‎உன்‬ ‪‎காதல்”‬ என்ற குறும்படம் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1 மணிக்கு செல்லா திரையரங்கில் திரையிடப்படுகின்றது. கலைஞர்களாக அக் குறும்படத்துக்கு எம்மால் ஆனா ஒத்துழைப்பை கட்டாயம் வழங்க வேண்டும் காரணம் இது எம் சினிமா இதை வர்த்தகமயமாக கட்டி எழுப்ப வேண்டிய கடமை ஒவ்வொருத்தருக்கும் இருக்கின்றது. அத்துடன் இக்குறும்படத்தின் தரத்தை என்னால் நிச்சயமாக உறுதிப்படுத்த முடியும்.
வர்த்தகமாக்கலில் உள்ள சவால் என்னவென்றால் கணிசமான மக்கள் இந்திய சினிமா மோகத்துக்குள் இருப்பதால் அம் மக்களை எடுத்த வீச்சமாக எமது சினிமாவுக்குள் இழுத்து வர முடியாத நிலை ஒன்று இருப்பதால் படிப்படியாகவே அவர்களை எம் சினிமாவுக்கு பழக்கப்படுத்தி அவர்களை இவற்றையும் எதிர் பார்ப்போடு ரசிக்க வைக்க வேண்டும். இது ஒரு மிகச் சவாலான விடயமே காரணம் அவர்களைச் சென்றடையும் படைப்புக்கள் அனைத்தும் தர மட்டத்தில் குறைந்தனவாக இருந்தால் ஒட்டு மொத்த படைப்பாளிகளையும் குப்பைகளாக மதிப்பீடு இட்டு விடுவார்கள்.
வர்த்தகமயமாக்கலில் எதிர் கொள்ளும் இன்னொரு மிக முக்கிய சிக்கல் என்னவென்றால் திரையரங்க உரிமையாளர்களின் ஒத்துழைப்பாகும். திரயரங்குக்கு கொண்டு செல்லும் குறும்படம் கூட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தணிக்கை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறார்கள் இதற்கான அலைச்சலுக்கே ஒருவருக்கு 10,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படும். அதற்கப்பால் தென்னிந்திய முன்னணி நடிகர்களின் படங்கள் தவிர்ந்த சாதாரண படங்களை வைத்திருந்து பார்வையாளர்களே இல்லா நிலையில் இருக்குமு் திரை அரங்குகள் கூட இப்படி ஒரு திட்டத்துடன் அணுகும் போது ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் 30,000 ஆயிரம் வரை கேட்கிறார்கள். மிக முக்கியமாக இப்பிரச்சனைகளை எல்லாம் ஒரு கலைஞனால் எதிர் கொள்ள முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் எமக்கென்று இதுவரை செயற்பாட்டுடன் கூடிய ஒரு சங்கம் இல்லாமையே..
இப்படியான சிரமங்களுக்கு மத்தியிலும் எம்மால் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் தான் ஒவ்வொரு படைப்பாளியும் உழைக்கிறான். இந்த உழைப்பானது ஒரு நாளில் நிச்சயம் வரலாறாகப் பேசப்படும். அதற்காகவாவது கை கோர்த்து உழைப்போம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

இணைப்புக் குறிப்பு - 

1) இப்படியான திட்டம் ஒன்று சென்ற மார்கழி மாதம் எனக்குள் இருந்தாலும் இதுவரை செய்த 9 குறும்படங்களில் ஒன்றுக்கு கூட வெளியீட்டு விழாக் கூட நடாத்தாத நிலையில் ஒரு சிறிய குறும்படத்துக்காக மட்டும் ஒரு பார்வையாளன் இருந்த களை மாற முதல் எழும்ப வைப்பது ஏதோ மனசை உறுத்தியது. ஆனால் இப்போது என் திட்டத்தை வெளிக் கொணரும் எண்ணம் இருக்கிறது. 2009 போரின் பின்னர் வன்னியின் போன் வெளிக்கள போர்க்காட்சியை மையப்படுத்திய என்னுடைய ”தாத்தா” குறும்படத்தையும்,
அண்ணன் தங்கையை மையப்படுத்திய ”கருவறைத் தோழன்” மற்றும் நோர்வே சர்வதேச திரைப்பட விழாவில் இறுதிப் போட்டிக்கு தெரிவான ”கரகம்” ஆவணப்படத்தையும் உள்ளடக்கி ஒரு முழுமையான சினிமா நேரமாக்கி. தயாரிப்பாளர் எதுவும் கிடைக்காமல் பண நெருக்கடியால் கிடப்பில் கிடக்கும் என்னுடைய முழு நீளத் திரைப்படமான ”உம்மாண்டி” திரைப்படத்துக்கான பணம் சேர்க்கும் நோக்குடன் வரும் மே மாத கடைசியில் திரையிடும் எண்ணம் இருக்கிறது.

2) ஆகாசின்  ”‎என்‬ ‪‎கனா‬ ‎உன்‬ ‪‎காதல்”‬ என்ற குறும்படம் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1 மணிக்கு செல்லா திரையரங்கில் திரையிடப்படுகின்றது. எம்மால் ஆன ஒத்துழைப்பை வழங்குவோம். இப்படைப்பில் பணியாற்றிய விஷ்ணு, நிரோசா, சசிகரன், சுதர்சன், ஆதன் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள் சேரட்டும்.

3) அடுத்து வரும் காலப்பகுதியில் சக இயக்குனர்களின் குறும்படத்துடன் இணைத்து முழுமையான பட நேரம் ஒன்றுக்கு கொண்டு வந்து திரையிடும் எண்ணமும் இருக்கின்றது.
PM 11:20 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

ஞாயிறு, 15 மார்ச், 2015

என்னைத் தாக்கிய சேரனின் ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை”

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு தலை எழுத்தாகவே மாற்றப்பட்ட விடயங்களில் ஒன்று தான் இந்த நடிகர்களுக்காகப் படம் பார்ப்பது என்ற கலாச்சாரமாகும். அதுமுட்டுமல்லாமல் சந்தோசப்படுத்தும் அல்லது மசாலக்கலவைகள் கலந்து படம் எடுக்க வேண்டும் என்ற திணிப்புக்கள் அதிகமாக உள்ள இடம் தான் இந்த தமிழ் சினிமா உலகமாக முத்திரையிடப்பட்டு வருகிறது.

இயக்குனருக்காக அல்லது இந்த இயக்குனரின் படைப்பு என் பார்க்கும் ரசிகர்கள் மிக மிகக் குறைவானவர்களே. இது தவிர்ந்த வகையறாக்களுக்குள் மாட்டுப்பட்டுத் தவிக்கு தனித்தவமான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் சேரனும் மிக முக்கியமானவராகும். கடந்த வாரம் அவரது ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை” என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. எம் வாழ்க்கையோடு மட்டுமல்ல எம்மோடு பின்னிப்பிணைந்த ஒரு கதை. யதார்த்தத்தோடு சற்றும் விலகாமல் பயணித்திருந்தது.
பலர் அப்படம் தொடர்பாக சிலாகித்திருந்தார்கள். ஆனால் அது சேரனின் படம் என்று பார்க்கப் போனவர்கள் அனைவரும் திருப்தியோடு மட்டுமல்ல சேரனின் வழமைக்கு மாறான அனுபவம் ஒன்றுடன் தான் திரும்பினார்கள். காரணம் வழமையாக சேரன் கதை சொல்லும் விதத்திலிருந்து இம்முறை திரைக்கதை சற்று மாறுதல் அடைந்திருந்தது. காட்சிகள் அளவாகக் கத்தரிக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாமல் சென்டிமென்டை அள்ளிக் கொட்ட பல இடங்கள் இருந்தும் அளவாக சோகக் காட்சிகளைக் காட்டியிருக்கிறார்.
சில காட்சிகளுக்கான பதிலை முதலே பூடகம் போட்டிருந்தார்.
குறிப்பாக அந்த பறவைகளின் முடிவுக் கதையை முன்னமே வைத்திருந்தார். உன்னிப்பாக இருந்தவருக்கு படத்தின் முக்கால்வாசியிலேயே இறுதிக் காட்சி வழங்கப்பட்டு விட்டது.
மிக முக்கியமாக அந்த நாயகனைப் பாருங்கள். படத்தின் ஆரம்பம் எல்லாம் ஒரு நாயகனின் வளர்ச்சி சம்மந்தமானதாகும். ஆனால் நாயகனோ நித்திரையால் எழும்பியவன் போல் தான் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது . (சில வேளை இந்த இடத்தில் தான் சாமானிய மசால ரசிகன் குழம்பியிருக்கலாம். காரணம் அவன் பார்ப்பது முழுக்க நாயக எழுச்சி என்றால் ஒரு பாடலும் 10 பாஞ்ச் வசனமும் தான்).
அந்த பிளாஷ்பாக் காட்சியின் பின் அந்த நாயகன் ஏன் அப்படி நடக்கிறான் என்பது எந்த வித எரிச்சலும் இல்லாமல் கதையோடே ஒட்ட வைத்துப் பயணிக்க வைப்பார்.
மகன் இறப்புக்கு பெற்றோர் அழும் இடத்தில் பாருங்கள் காட்சியின் நேர நீட்சியை தவிர்ப்பதற்காகவும் அள்ளித் தெளிக்கும் சோகக் காட்சியையும் கிளிசேவ் ஆகாமலும் இருப்பதாற்காக அவர்கள் அழும் காட்சி வேறாகவும் அவர்கள் குரல் வேறாகவும் அமைத்திருப்பார்.
ஆணும் பெண்ணும் பழகினாலே பார்ப்பவர் முதல் பார்வை ஒரு சந்தேகப் பார்வையாகவே இருக்கும் ஆனால் இப்படத்தில் அவள் கட்டிப்பிடித்தும் கூட பார்ப்பவருக்கும் சந்தேகமில்லாமல் இருவரையும் ஒரு நல்ல நண்பர்களாகவே பார்க்க வைத்து வெற்றி கண்டிருப்பார்.
என்னைப் பொறுத்தவரை ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை”  சேரனின் படமாகும். படத்தைச் சிதைக்கக் கூடாது என்பதற்காக கதைக்குள் ஆழமாக போகவில்லை. ஆனால் மனிதர்களோடு வாழ நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாகும்.

பிற்குறிப்பு - இவ்வளவு நுணுக்கமாக படத்தைச் செதுக்கியவர் சந்தானம் வரும் முதல் காட்சியில் டப்பிங்கும் வைக்க மறந்து போய். அப்படி துள்ளும் ஒரு காட்சியை ஏன் வைத்தார் என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
PM 12:05 - By ம.தி.சுதா 4

4 கருத்துகள்:

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

ஒரு வெற்றி பெற்ற இயக்குனருடன் பரிமாறப்பட்ட என் மறக்க முடியா உணர்வுத் தாக்கம்

வணக்கம் உறவுகளே
இந்த வருடத்தின் முதல் பதிவை பெரும்பாலான  மனிதரும் சந்திக்கும் ஒரு ஆழ்மன உணர்வுடன் பகிர்கிறேன்.
அவர் அனுமதி பெறாவிட்டாலும் என் மன பாதிப்பு என்பதாலும் பகிர்கிறேன்.
எமக்கு எவ்வளவு தான் வெற்றி கிடைத்தாலும் எமக்கு பிடித்தமானவருடன் அந்த சந்தோசத்தை பகிராத வெற்றிகள் அனைத்தும் வெற்றியாக இருந்தாலும் திருப்தியாக இருக்க போவதில்லை.
அதே இடத்தில் நான் இருக்கும் நிலையை உணரும் போது தான் அதன் வலியையும் உணர்ந்தேன். நான் வாழ்க்கையில் விழுந்து போய் காலையும் மாலையும் கூலித் தொழிலாளியாக அப்பாவை கடக்கும் போது இயாலாமையால் பார்க்கும் அந்த முகத்தை இன்று வெற்றிகளோடு பார்க்க இருக்கவில்லை.
ஆனால் இன்று நான் வாங்கும் சம்பளத்தில் இருந்து விருதுகள் வரை அவர் படத்துக்கு முன் போய் தான் எனக்கு சொந்தமாகிறது.
அதே வலியுடன் ஒரு வெற்றியாளனை சந்தித்தேன். அவர் மறைக்க இயலாமல் மறைத்து மறைத்து சிந்திய அந்த சில துளி கண் கசிவுகள் இப்பவும் என் கண்ணில் தான் படமாக இருக்கிறது.
முந்த நாள் (2.1.2015) தான் அப்பா எம்மை விட்டு பிரிந்து சரியாக இரண்டு வருடங்கள் முடிவடைந்தது. என் தொழில் துறை, திரைத்துறை என எந்த வெற்றியையும் காணாமலே நான் தோற்றுப் போய் இருந்த காலத்திலேயே போய் விட்டார்.
சரி இந்த மனிதன் யார்?
அண்மையில் மௌன விழித்துளிகள் என்ற குறும்படம் மூலம் அமெரிக்காவரை சென்று ஜெயித்து வந்த இயக்குனர் இளங்கோ ராம் அண்ணாவைப்பற்றித் தான் சொல்கிறேன்.

ஒவ்வொரு விடயத்துக்கும் வழிகாட்டிய ஒரு நபரிடம் இருந்து அவர் காட்டிய இலக்கை அடைந்தவன் வந்து தன் வெற்றியை பகிர்ந்தாலும் அதற்கான கருத்தை கேட்க முடியாத நிலை என்பது மிகவும் வலிமிகுந்த ஒன்றாகும்.
மௌன விழித்துளிகளுக்காக பெற்ற விரதடன் அவர் தந்தையிடம் போயிருக்கிறார். ஆனால் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் தந்தையால் மனதால் மட்டும் தான் வாழ்த்த முடிந்ததே தவிர கருத்தால் அல்ல.
”சின்னனில் இருந்து என்னோட சின்ன சின்ன வெற்றிகளையும் பாராட்டி அடுத்த கட்டத்துக்கான கருத்துக்கள் சொல்பவரிடம் இந்த வெற்றிக்கான பாராட்டை பெற முடியாமல் இருப்பதும் அடுத்த கட்டத்துக்கான கருத்தை கேட்க முடியாமல் இருப்பது நரக வலி சுதா” என அவர் கூறிய அந்த நிமிடம் அத்தனை வலியையும் ஒட்டு மொத்தமாக உணர்ந்தேன். அவர் எனக்கு மறைக்க நினைத்தாலும் அவராலேயே அடக்க முடியாமலே சில துளிகள் பொத்தென்று விழுந்தது.
என்னால் கூற முடிந்தது ஒரு சில வரிகள் தான் ”எமக்காக வாழ்ந்தவர்கள் ஆத்மாவாகவென்றாலும் எம்மோடு தான் இருப்பார்கள்”
அவர்களது ஆத்ம சாந்திக்காகவாவது போராடுவோம். 

அண்மையில் என்னோடு நெருங்கிப்பழகும் ஒரு சகோதரனுக்கு வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறேன். அது அவன் மனதுக்கு தாக்கத்தை கொடுத்திருக்கலாம் ஆனால் அவன் பிற்பொழுது ஒன்றில் வருந்தும் போது ஆறுதல் சொல்வதை விட இப்போது பச்சையாக சொல்லலாம் தானே என்று தான் கூறினேன். அது என்னவென்றால் தந்தையாரின் கண்டிப்பு தொடர்பாக கொஞ்சம் தகப்பன் பற்றி காட்டமாக பேசினான். அப்போது தான் சொன்னேன் ”அப்ப அப்படித் தான்ர இருக்கும் ஆனால் அவர் செத்த பிறகு ஏன் அவர் அப்படி நடந்தார் எத்தனை விசயங்களை எமக்கு தெரியாமல் மறைத்திருக்கிறார். என்று தெரிய வரும் அப்ப தான் உணருவம்” என்று என் சொந்த அனுபவத்தை சொன்னேன்.
உண்மையில் அப்பாவுக்கு முன்னரே மாரடைப்பு வந்ததை மறைத்திருக்கிறார் என்பது இறப்பின் பின்னர் தான் தெரியும். அன்று என்னை சிரமப்படுத்தக் கூடாது என்று அவர் நினைத்த அந்த ஒரு சில  ஆயிரங்கள் இன்று என்னிடம் கிடைக்கும் பல ஆயிரங்களுக்கு பெறுமதியே இல்லாமல் செய்து விட்டது.

எத்தனை தரம் விழுந்தாலும் எழுந்து நின்று போராடுவதற்கான தைரியம் கொடுப்பது அவர்களது நம்பிக்கை தான் என்ற ஒரு வித கோட்பாட்டுடனேயே பயணிப்போம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
PM 11:31 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top