Featured Articles
All Stories
eelam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
eelam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஜூலை, 2020

Darak Days of Heaven - Official Announcement

Official Announcement
Dark Days of Heaven

இது ஒரு வரலாற்று முயற்சி என்பதை நான் மட்டும் பெருமிதப்பட்டுக் கொள்ள முடியாது என்னை நம்பி பணம் இட்ட அந்த 101 பேருடனும் சேர்த்தே பெருமைப்படுகிறேன்.
ஏனென்றால் இந்த மாத முடிவுடன் எனது பணச் சேகரிப்புப் போராட்டத்தின் 2 வருடங்களைப் பூர்த்தி செய்கிறேன்.
இதில் சந்தோசமான செய்தி என்னவென்றால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முற்று முழுதாகப் பூரணப்படுத்தியுள்ளதுடன் படத்தொகுப்பிலும் குறிப்பிட்டதொரு கட்டத்தை கடந்திருக்கிறேன்.
28 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கொண்ட இத்திரைப்படத்துக்கு 1,936,039 ரூபாய்கள் சேர்ந்திருந்தன. இதில் Production வரை தீர்மானித்திருந்த செலவு 9 இலட்சத்து 50 ஆயிரமாகும் ஆனால் 935,977 ரூபாய்கள் செலவாகியிருக்கின்றது.
168 பேர் இணைந்திருந்த இந்த Crowdfunding இல் 101 பேர் பணமிட்டிருந்தார்கள். இது ஒட்டு மொத்த இலங்கை அளவில் அதிகமானவர் இணைந்திருந்த Crowdfunding திரைப்படம் என்ற வரலாற்றுக்குரியதாகும்.
முற்று முழுதாக ஐபோனில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் சர்வதேச விருதுகளுக்குள் நுழையுமானால் இலங்கை அளவில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு பெற்று சர்வதேச அங்கீகாரம் பெறும் முதலாவது ஐபோன் திரைப்படமுமாகும்.
இப்படைப்பில் பணியாற்றிய அனைவரையும் தனித்தனிப்பதிவில் நினைவுகூர இருக்கின்றேன். இப்படைப்புக்காக என்னோடு இணைந்து தம்மை முழுமையாக அர்ப்பணித்த அவர்களது போராளி வாழ்க்கைக்காக அவர்கள் ஒவ்வொருவரது நினைவும் பகிரப்பட வேண்டியதாகும்.

மிக மிக இறுக்கமான பட்ஜெட் நெருக்கத்தால் 14 நாட்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் படப்பிடிப்பை 10 நாளில் முடிக்க காரணம் என்னோடு சலிப்பின்றி களைப்பின்றி உழைத்த அத்தனை பேரது வியர்வையும் தான் இந்த மரத்தின் துளிர்ப்புக்கு மிக முக்கிய காரணமாகும். அதிலும் தனது 70 வயது கடந்த வயோதிபநிலையிலும் இப்படத்தை தனது பாத்திரத்தால் தாங்கிய பார்வதி சிவபாதம் அம்மாவின் உழைப்புக்கு நீங்கள் அனைவரும் உங்கள் சிரம் தாழ்த்தி வணங்க வேண்டியிருக்கும் என்பதில் எனக்கும் என் குழுவுக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது.
இத்திரைப்படத்தை பூசையிட்டு ஆரம்பித்து வைத்தவர் - பார்வதிசிவபாதம் அம்மா
Clapboard அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தவர் - வெற்றிச் செல்வி அக்கா
படத்தின் நடிகர் எண்ணிக்கை (cast) - 17 பேர்
தொழில்நுட்ப குழுவினர் - 9 பேர்
படத்தின் பின்நிலை வேலைகளில் சிலதை இந்தியாவில் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.
குறிப்பு - Dark Days of Heaven என்ற பெயரை copy செய்து உங்கள் பேஸ்புக் தேடல் பெட்டியில் இட்டு அப்பக்கதை விருப்பிட்டுக் கொள்ளுங்கள். எம் முயற்சியை மற்றையவருக்கும் கொண்டு சேர்க்க உதவியாக அப் பேஸ்புக் பக்கத்தில் உள்ள Invite பொத்தனை அழுத்தி உங்கள் நண்பரையும் இணைத்து விடும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
படவிளக்கம் - படத்தில் பணியாற்றிய அதிகமானவர் ஒன்றாக நிற்கும் படம், எனது பிறந்தநாளை அவர்கள் கொண்டாடியது தான் என்பதால் அப்படத்தையே பகிர்கிறேன். படத்தின் விளம்பரப்பிரிவுக்கு பொறுப்பாக இருப்பவர்களிடம் இருந்து அனுமதி பெறப்பட்ட படங்கள் விரைவில் வெளியாகும்.

சொர்க்கத்தின் இருண்ட நாட்கள் திரைப்படத்தின் பேஸ்புக் பக்கத்தை விருப்பிட்டு அதன் தரவேற்றங்களுடன் இணைந்திருக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்...


3:43 PM - By ம.தி.சுதா 0

திங்கள், 22 ஜூலை, 2019

இலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்

இப்பதிவு சற்றுப் பெரியது தான் ஆனால் கிரிக்கேட் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய வரலாறுகள் சிலதை உள்ளடக்கியிருக்கிறேன்.

தமிழிழம் உருவாக்கப்பட்டால் அதற்கான கட்டமைப்புத் திட்டங்கள் நூலாகவே வெளியிடப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால் நூலிற்கப்பால் அத்தேசம் சர்வதேசங்களுக்கு நிகராக நிற்பதற்குரிய கனவுகளும் பெரிதாகவே இருந்தது. அதில் ஒன்று தான் கிரிக்கேட் அணியாகும்.
யுத்தகாலத்தில் கிளிநொச்சியில் மட்டும் 14 கடினப்பந்து கழகங்கள் போட்டிகளில் பங்கு பற்றிக் கொண்டிருந்தன. அதை விட பாலிநகரில் எனது ஆரம்ப கால குருவான தவராஜா சேரால்  ஒரு அணியும் முல்லைத் தீவில் சென்யூட் மற்றும் வித்யா அணிகள் பலம் வாய்ந்தவையாக இருந்தன.
தேசிய மட்டத்தில் இடம்பெறும் மிக முக்கிய போட்டிகளாக 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டியான சங்கர் கிண்ணமும் 20 ஓவரைக் கொண்ட T20 போட்டியான ரமணன் கிண்ணமும் மற்றும் NEC இன் T20 போட்டித் தொடரும் அடங்கும்.
கிளிநொச்சியில் 2007 இன் ஆரம்பங்கள் வரை இளந்தென்றல் அணியே கொடிகட்டிபறந்தது அதன் நிர்வாகப் பொறுப்பை புலனாய்வுத்துறையின் தலமைச் செயலகத்தைச் சேர்ந்த பிரசன்னா கவனித்துக் கொண்டார். அவர்களது பலத்தின் காரணமே கர்ண கொடூரமான ஆரம்ப வேகப்பந்து விச்சாளர்கள் தான்.
1) செந்தாமரை (எ) செந்தா
2) ராஜ்குமார் (புலிகளின் குரல் செய்திவாசிப்பாளரான அன்பரசியின் கணவர்)
அதே 2007 காலப்பகுதியில் தான் எமது மருத்துவக்கல்லூரி அணி வைத்தியராக இருந்த அமுதனால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு பொருட்கள் சேகரிப்பதற்கு மும்முரமாக இருந்தது சிவதரண்ணா  தான். மென்பந்து அணியாக இருக்கும் போது கற்கைகளுக்காக நான் அணித்தலைமையில் இருந்து விலத்திய பின் சிவதரண்ணா தான் அணியை வழி நடத்தினார் பின்னர் கடினப்பந்தான பின் என்னிடமே ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பப் போட்டிகளிலேயே இளந்தென்றல் அணியை வெல்லாவிடினும் அவர்களுக்கு அச்சுறுத்தலாகப் போராடினோம். 
எங்கள் ஆட்டம் எமது தலைமை மருத்துவரும் கிரிக்கேட் வெறியருமான சுஜந்தன் டொக்ரரை கவர எமது அணியை நிரந்தரமாக்குவது என்றும் அணி வீரர்களின் கடமைகளுக்கு பிரதியீடாக ஏனையவரை அனுப்புவதும் என முடிவாகிறது. அதற்கு கற்கை நேரங்களை மாற்றியதுடன் வாமன் டொக்ரரும் மலரவன் டொக்ரரும் தமது கடமை தவிரந்த ஏனைய நேரங்களில் எங்களோடு செலவிட்டார்கள் பிற்பகுதியில் தூயவன் டொக்ரரும் இசைவாணன் டொக்ரரும் இணைந்து கொண்டனர்.
நட்புரீதியான ஆட்டம் ஒன்றில் இளம்தென்றல் அணியை வெல்கிறோம் அந்த வெற்றி மேல்மட்டங்கள் வரை கடத்தப்பட எம் நிகழ்வு ஒன்றுக்கு வந்த தமிழ்ச்செல்வன் அண்ணை மேலிடத்தின் வாழ்த்தை நேரடியாகப் பரிமாறிச் சென்றார்.
காலை , மாலை என தொடர் பயிற்சிக்கு நேரம் அளிக்கப்பட்டாலும் இடை நேரத்தில் கற்கையும் அது தவிர்ந்த நேரத்தில் மருத்துவக் கடமைக்கும் என ஒரு சுற்றுவட்டத்தில் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தோம். காரணம் அக்காலப்பகுதியில் பள்ளமடுப் பகுதியிலும் முகமாலையிலும் மணலாறிலும் உக்கிர சண்டை நடந்து கொண்டிருந்த நேரமாகும்.
கிளிநொச்சி முத்தவெளி விளையாட்டு மைதானத்தில் சங்கர் கிண்ண ஒருநாள் போட்டிகளின் தெரிவு அணிக்கான கிளிநொச்சி மாவட்ட இறுதிப் போட்டியில் இளந்தென்றல் அணியை எதிர் கொள்கிறோம். நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கையில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரமது. அதை வென்றால் தேசிய மட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டாவது அணியான வித்தியாவை எதிர் கொண்டு இலகுவாக இறுதிப் போட்டிக்கு வரலாம்.
ஆனால் 8 ம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த தர்சண்ணா  அடித்த அரைச்சதத்தால் அப் போட்டி தோற்கிறோம்.
அணித்தலைவரான நான் தோல்விக்கான முழுக் காரணத்தை ஏற்றாலும் அன்று அமுதன் டொக்ரரிடம் வாங்கிய தண்டனை என்பது மிகுதி 10 பேருக்குமான ரோசத்தைக் கிளறுவதற்காகவே எனக்கு வழங்கப்பட்டது.
அடுத்த ஒருவாரத்தில் சென்யூட் உடனான அந்த அரையிறுதிப் போட்டியில் மோத இருக்கிறோம். முல்லைத்தீவின் சம்பியன் அணியான சென்யூட் ஐ வென்றால் தான் இறுதிப் போட்டியாகும். அதன் தலைவர் ஹாட்லிக் கல்லூரியின் தலைவராக இருந்த கோகுலன் ஆவார். தோற்ற எம் அணி மைதானத்தை விட்டு வெளியேறக் கூடாது என்ற தண்டனையும் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குரிய இன்னொரு சோடி உடைகளும் பாடப்புத்தகங்களும் அளிக்கப்படுகிறது. குளிப்பதற்கும் கழிவுக் கடன் கழிப்பதற்கு மட்டும் விளையாட்டுத்துறையின் அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் 3 நேரச் சாப்பாடும் மைதானத்துக்கு தரன் மூலம் வரும்.
காலை 6-11 வரையும் பிற்பகல் 3-6 வரையும் பயிற்சி இடை நேரத்திலும் இரவிலும் மைதானத்தில் தான் கற்கை. இத்தண்டனைக்குரிய காரணம் எமக்காக கடமையேற்ற சக மாணவருக்கு நாம் கொடுத்த பரிசான தோல்வி என்பதை எவரும் ஜிரணிக்கவில்லை.
ஆனால் அடுத்தவார அரையிறுதியில் சென்யூட் அணியை வெல்கிறோம். ஆனால் மறுபக்கம் தேசிய இறுதிப் போட்டிக்கு மீண்டும் இளந்தென்றல் வந்தாலும் சென்யூட் உடனான வெற்றி எம்மை மைதானத்தில் இருந்து விடுதலை செய்கிறது. அவ்வெற்றிக்கும் மேலிடத்தில் இருந்து பாராட்டுக் கிடைக்கிறது. இறுதிப் போட்டியில் இளந்தென்றலை வென்று அவர்களிடம் இருந்த கிண்ணத்தை பெறுகிறோம்.
NEC இன் T20 இன் தொடரின் ஆரம்பத்தில் எனக்கு காலில் ஏற்பட்ட என்பு வெடிப்பால் உதவித் தலைவராக இருந்த நிரோஷ் அணியை வழி நடத்த ஆரம்பிக்கிறான்.
அந்நேரம் எங்களுக்கு ஒரு பரிசு கிடைக்கிறது. திருகோணமலையில் இருந்து இலங்கை A அணியின் குழுவுக்குத் தெரிவாகி பின் போராட்டத்தில் இணைந்திருந்த அருண் அண்ணையை அணிக்குள் அனுப்பவுதற்கான அனுமதியை தலைமைச் செயலகம் கொடுக்கிறது. அணியின் பலம் அதிகரிக்கிறது. அதன் பின் ரொசான், பார்த்தி  , அமலன் என புதிய வீரர்கள் உள்வாங்கப்பட அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பல வீரர்கள் வெளியேறி மருத்துவக் கடமையில் இணைந்து கொள்கிறார்கள்.
(சிவதரன் அண்ணை , கிரி , அரவிந்தன் , மயிலழகன் , சபேஷ் , ஜெயசீலன் , அசோக் என ஒரு பட்டியலே உள்ளது)
அதன் பின் NEC இன் T20 இன் லீக் ஒன்றிலும் இறுதிப் போட்டியிலும் இளந்தென்றலை வெல்கிறோம். அவ் இறுதிப் போட்டிக்கு அணி மீண்டேன் ஆனா அவ் இறுதிப் போட்டிக்கு எந்த அணியிலுமே நடக்காத ஒன்று நடந்தது. இருவர் அணித்தலைவராக செயற்பட்டோம்.
அந்த போட்டியில் நான் எடுத்த 4 கடுமையான பிடிகளுக்காகவும். இறுதி விக்கேட்டான சதீசை மட்டும் வைத்துக் கொண்டு செந்தா அண்ணா வீசிய போட்டியின் இறுதிப் பந்தில் 6 ஓட்டத்தைப் பெற்று அணியை வெற்றி பெற வைத்ததற்காகவும் சிறந்த ஆட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டேன்.
மருத்துவப்பிரிவின் பொருப்பாளரான ரேகா அண்ணை தலைமையின் பாராட்டுடன் நேரடியாக வருகிறார். அவர் ஒதுக்கிய பணத்திலேயே அன்றைய ஐஸ்கிரீம் விருந்து வீரர்களுக்கு கொடுக்கப்பட்டாலும். ஒத்துழைத்த கல்லூரி மணவர்களுடன் A9 விடுதியில் பெரிய விருந்தளிக்கப்படுகிறது. எமது அணிக்கு இந்தளவு முன்னுரிமை கொடுக்கப்பட்டதற்குக் காரணம் எல்லோரும் சராசரி 22 வயதை கொண்டவர்கள். அதில் 8 வேகப்பந்து வீச்சாளர்கள். 9 பேர் சகலதுறை வீரர்கள். இந்த அணி தமிழீழ தேசிய அணியல்ல ஆனால் அப்படி ஒன்று உருவாகுவதற்கு இதில் உள்ளவர்களின் பயமே இல்லாத அந்தத் துணிவு முன்னுதாரணமாக இருக்கும் என நம்பினர்.
காரணம் பயிற்சியின் போது சுஜந்தன் டொக்ரர் இதைத் தான் சொல்வார். ”லேதர் போல் என்பது ரவுண்ஸ் அல்ல அதனால் உங்களைத் துளைக்க முடியாது அதால பயப்படாதிங்கோ” இந்த வார்த்தையில் அப்படி என்ன இருக்கிறது என இப்ப புரியாது ஆனால் சண்டைக்குள் குண்டு துளைக்கும் என தெரிந்தே இருப்பவர்களுக்கு இந்த துளைக்காத குண்டில் என்ன பயம் வந்துவிடப் போகிறது.
இவை எல்லாம் வரலாறுக்காக கூறினேன்.
இனி சொல்வது தான் மேலிடத்தின் தூர நோக்காகும். கேணல் ரமணன் கிண்ணத்திற்கான போட்டித் தொடர் ஆரம்பிக்க இருந்த நிலையில் இராணுவம் ஒரு பக்கம் மல்லாவிக்கும் முழங்காவிலுக்கும் வந்து விடுகிறது. அதனால் போட்டித் தொடரை நிறுத்துவதற்கு விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரான ராஜா அண்ணா தலைமைச் செயலகத்துக்கு அறிவிக்கிறார். ஆனால் அங்கிருந்து கிடைத்த பதில் நாட்டிற்கு இதுவும் தேவையானது தான் போட்டித் தொடர் நடக்கட்டும் என்பதே.
ஆனால் கடமைகளுக்காக நானும் , கேசவனும் , சதீசும் சண்முகராஜா டொக்ரரால் முள்ளியவளை அழைக்கப்பட்டோம். அருண் அண்ணை சண்டை அணிக்குள் போன இடத்தில் வீரச்சாவடைந்து விடுகிறார். மற்றவர்களும் வெவ்வேறு பக்கம் கடமை நிமித்தம் சென்று விட போரும் உக்கிரமாக அந்த கனவு அணி உடைந்து போகிறது. அதன் பின் அமலனும் தலையில் ரவை ஒன்று பாய்ந்து இறந்து போகிறான்.
இலங்கை தேசிய அணியில் தமிழருக்கு இடம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஏன் தலைவரின் சிந்தனையை பின்பற்ற தவறுகிறோம்.
எம் மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அணியை உருவாக்கி போட்டிகளை வைத்து ஒரு மாகாண அணியை உருவாக்குவோம் அதைக் கொண்டு அத்தனை சிங்கள கழகங்களுக்கும் அடிப்போம். ஏன் வெளிநாட்டுக் கழகங்களுக்கும் போய் அடித்து எம்மை நிருபிப்போம். அயர்லாந்தைச் சேர்ந்த இயான் மோகனையும், இந்தியாவைச் சேர்ந்த நசீர் குசைனையும் அணித்தலைவராக்கிய இங்கிலாந்து அணி ஒரு ஈழத்தவனை அணிக்கு எடுக்காதா ? துரை சிங்கத்திற்கு இடம் கொடுத்த கனடா அணி எம்மவருக்குக் கொடுக்காதா ?
எல்லாவற்றுக்கும் முதல் சென் பற்றிக்ஸ் இல் மட்டும் புல்தரை ஆடுகளத்தை வைத்துக் கொண்டு தேசிய அணிக்கு ஆசைப்படும் நாம் எம் வீரர்களை மெட்டிங் இல் இருந்து புற்தரை ஆடுகளத்துக்கு மாற்றி விட்டு எம் கனவுகளைக் காணலாம் காரணம் மெட்டிங் இல் ஆடும் ஒருவரால் புற்தரைக்கு பழக்கமாகவே நீண்ட காலம் எடுக்கும்.
தீர்வுப் பொதிக்காக மட்டும் மேசைக்கு மேலால் போராடிக் கொண்டிருக்கும் எம் அரசியல் தலமைகளை எம் அடையாளங்களுக்காகவும் கொஞ்சம் போராடச் சொல்லுவோமாக ?
குறிப்பு - (அவர்களில் செந்தா அண்ணை சண்டை ஒன்றில் இறந்து விட்டார் அந் நேரம் சிறந்த வீரர்களாக இருந்த நவநீதன் , அச்சுதன் போன்றோர் இப்போதும் இப்போதும் இருக்கிறார்கள். இவர்களை விட சோலைக்கு விளையாடிய கீரன் மிகச்சிறந்த சகலதுறை வீரர்.)

தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்
https://www.facebook.com/mathisuthaofficial/
3:16 PM - By ம.தி.சுதா 0

வெள்ளி, 25 ஜனவரி, 2019

10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்



இந்த உலகத்தின் தமிழன் என்ற சொல்லுக்கே அடையாளம் கொடுத்தவன் ஈழத் தமிழன் தான் ஆனால் சினிமா என்று வரும் போது எம்மிடம் அது இல்லை. இந்த உலகுக்குச் சொல்ல வேண்டிய ஆயிரம் கதைகள் எம்மிடம் உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதைச் சொல்ல தனி ஒருவனிடம் அதற்கான பண முதலீடு இல்லை.

எமக்கு ஏன் சினிமா தேவை?
எம்மிடம் உள்ள வாழ்வியல், பேச்சு மொழி, பண்பாடு என்பவற்றை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். இதை இன்னொரு சந்ததிக்கு கடத்தவோ அல்லது எம் வாழ்வியலை இன்னொரு சமூகத்தக்கு காட்டவோ எம்மிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் சினிமா மட்டும் தான்.
எமக்கிருக்கும் பிரச்சனை இங்கு தயாரிப்பாளர்கள் இல்லாமையே.

உங்களது 10 டோலரால் அல்லது 1000 ரூபாவால் ஒரு இனத்தின் சினிமா கட்டமைக்கப்படும் என்றால் ஏன் இந்த முயற்சியை ஒரு சில நிமிடங்கள் செலவழித்துப் படித்துப் பார்க்கக் கூடாது.?

இதுவரை 106 பேரை இத்திட்டத்தில் இணைத்து வைத்திருக்கும் மதிசுதா தன் முயற்சியில் அரைவாசிக் கட்டத்தை நெருங்கி விட்டார்.

இது தொடர்பாக எமது சினிமாவுக்கென்று கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் மதிசுதா குறிப்பிடுகையில்..


“சிறு துளி பெரு வெள்ளம், ஊர் கூடி ஒரு தேரை இழுப்போமா ? ”

அன்புக்குரிய எனதன்புத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
இம்மடலூடாக உங்களோடு பேசிக் கொண்டிருப்பது ஈழத்தில் தீவிர திரைச் செயற்பாடுகளில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் மதிசுதாவாகும்.

என்னுடைய இலட்சியம் யாதெனில், தனக்கென பண்பாட்டையும் கலையையும் கொண்டிருக்கும் பல நாடுகளும் அது சார்ந்த இனங்களும் தமக்கென்று ஒரு சினிமாவை தமக்குரிய தனித்துவத்துடன் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் தமிழுக்கென்று உலகில் அடையாளப்படுத்தக் கூடிய சினிமாத் தளம் இல்லை. உலகின் எந்த மூலையில் தமிழன் என்று சொன்னாலும் அடையாளம் கொடுத்தவன் ஈழத் தமிழன் ஆனால் தமிழ் சினிமா என்று வரும் போது தமிழ்நாடே அடையாளப்படுத்தப்படுகிறது. தமிழுக்கு அடையாளம் கொடுத்தது போல திரைக்கும் நாமே அடையாளத்தைக் கொடுக்க வேண்டும் என்பது தான் என் இலட்சியமாகும்.
 ஆவணப்பட உருவாக்கலில் ADVANCE DIPLOMA கற்கையை நோர்வே அரசாங்கத்தால் கற்பிக்கப்பட்ட நான் இதுவரை ஒரு முழுநீளத் திரைப்படத்தையும் 15 குறும்படங்களையும் 5 ஆவணப்படங்களையும் உருவாக்கியுள்ளேன். கனடா, அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், இந்தியா, நோர்வே போன்ற நாடுகளில் எனது குறும்படங்கள் விருதுகள் பெற்றிருப்பதுடன் இவை தவிர பங்களாதேஷ், துருக்கி , தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சர்வதேசப் போட்டிகளில் தெரிவாகித் திரையிடப்பட்டும் உள்ளது.

இம்மடல் மூலம் தங்களிடம் அன்பாக வேண்டி நிற்பது குழுச் சேர்க்கை (Crowdfunding) மூலம் சேகரிக்கும் பணத்தில் ஒரு முழு நீளத் திரைப்படத்தை உருவாக்குவதற்கான பங்கு சேர்ப்பதற்காக இம்மடலை வரைகிறேன்.
வாக்குறுதிப் பட்டியல்
1)       இப்படைப்பானது இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவுபெற்று படப்பிடிப்பு அனுமதி பெறப்பட்ட கதையுடனேயே ஆரம்பிக்கப்படுகிறது.
2)       படப்பிடிப்புக்கு 10 நாட்கள் ஒதுக்கப்படுகிறது படத்தைப் பூரணப்படுத்த 6 மாத காலங்கள் தேவைப்படும்.
3)   பங்களிப்பாளர் இடக்கூடிய மிகக் குறைந்த பங்குகளின் பெறுமதி ஆயிரம் ரூபாய்கள் ஆகும், (வெளிநாட்டில் இருந்து பங்கெடுப்பதானால் 10 அமெரிக்கன் டொலர்களாகும்)
4)       மொத்த பட்ஜெட் இருபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும். முழுமையான பட்ஜெட் விபரம் பத்திரத்தின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
-          முன்னாயத்த வேலைக்கு 100,000
-          படப்பிடிப்பை மேற்கொள்ள 850,000
-          படப்பிடிப்பின் பின்னான பட உருவாக்கத்திற்கு 900,000
-          விருது மற்றும் விநியோகத்திற்கு 1,000,0000

5)       தேவையான பங்குகள் எண்ணிக்கை 2,850
(இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு படத்தை முழுமைப்படுத்தத் தேவையான குறைந்த பட்ச பட்ஜெட் தொகையாகும். இதைவிட 500 பங்குகளாவது அதிகமாகக் கிடைக்குமாக இருந்தால் படத்தை இன்னும் மெருகூட்ட இலகுவானதாக இருக்கும்)



6)       பங்குதாரருக்கு மீள் அளிப்பதற்கான வாக்குறுதி
-          ஒரு பங்கை மட்டும் இடுபவருக்கு 2 நுழைவுச் சீட்டுக்களோ (இலங்கையில்)
அல்லது
-          படம் திரையிடப்பட்டு முடிந்தவுடன் ஒரு டீவீடியோ (வெளிநாடு உள்ளடங்கலாக)
அல்லது
-          அவர்களது பணமோ மீளளிக்கப்படும்.
-          பண மீளளிப்பு படம் வெளியிடப்பட்டு 6 மாத காலத்தில் தான் மீளளிக்கப்படும்.

7)       இப்படைப்பில் என் பங்காக ”தர்மா” குறும்படத்துக்காக எனக்கு கிடைத்த பரிசுத் தொகையான ஐம்பது ஆயிரம் ரூபாய்களை இட்டு 50 பங்குகளை நானும் வாங்கி இணைந்து கொள்கிறேன். ஆனால் ஒரு படைப்பை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருப்பதால் இந்த பட்ஜெட் தொகையில் எனது சம்பளமாக எதையும் இட்டுக் கொள்ளவில்லை..


8)   இப்படத்துக்கான பங்கு முதலீட்டாளர்கள் இரண்டாவது படைப்பில் இணைந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களின் இப்படத்துக்கான பங்கு எண்ணிக்கையுடன் இப்படத்தின் வருவாய்த் தொகையில் அவர்களது பங்குக்குரிய இலாபமும் சேர்த்துக் கொள்ளப்பட்டு இரண்டாவது படத்தின் வருமானத்தில் அவர்களுக்கும் பங்கு அளிக்கப்படும். ஆனால் முதல் படத்துடன் விலகும் பட்சத்தில் அவர்களது முதலீட்டுத் தொகையுடன் 5 % ம் இணைத்து அளிக்கப்படும்.



பிரதான வாக்குறுதி -  இங்கு முதலிடப்படும் பணத்துக்கு முழுப் பொறுப்பாளி இயக்குனரே ஆகையால் படம் வென்றாலும் தோற்றாலும் அத்தனை முதலீட்டாளரது பணத்தையும் தனது சொந்தப்பணத்திலாவது எடுத்து மீளளிக்க வேண்டிய பொறுப்பாளி இயக்குனரே ஆவார். அப்படி மீளளிக்காத பட்சத்தில் பங்கு இட்டவர்களது சட்டரீதியான நடவடிக்கையையும் இயக்குனர் எதிர் கொள்ள வேண்டும்.

நன்றிச் செதுக்கலுடன்                                   
அன்புச் சகோதரன்                        
மதிசுதா 
தொடர்புக்கு   
0094773481379 (Viber / Whatsapp)

அன்பு வேண்டுகை – இம்மடல் படிக்கக் கிடைக்கும் பட்சத்தில் இந்தக் கோப்பை தங்கள் நண்பர்கள் எவருக்கேனும் பகிர்ந்துதவுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன். சிறு துளி தான் பெரு வெள்ளமாக உருவெடுக்கும்.

(படத்தின் மேல் சொடுக்கி உருப்பெருக்க வைத்துப் பார்க்கவும்)







10:50 PM - By ம.தி.சுதா 1

திங்கள், 6 நவம்பர், 2017

என் முழுநீளத் திரைப்படத்தின் சுவரோட்டிகள்...

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

கடந்த 28.10.2017 மற்றும் 29.10.2017 அன்று யாழில் உள்ள ராஜா திரையரங்கில் எனது இயக்கத்தில் உருவான ”உம்மாண்டி” திரைப்படம் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டது.
இந்த வெற்றிக்களிப்பில் இருக்கும் வேளையில் இந்திய நண்பர்களின் வேண்டுகைக்கு அமைய அடுத்த காட்சி இந்தியாவிலும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் மற்றைய பிரதேசங்களிலும் அதன் பின்னர் வெளிநாடுகளிலும் திரையிடப்பட இருக்கின்றது.
இத்திரைப்படத்திற்கான வெளிநாட்டு உரிமத்தை திரு முகுந்த முரளி அவர்களால் நிறுவப்பட்ட இளந்தமிழ் வெளியீட்டகம் வாங்கியுள்ளது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

படத்திற்காக எம்மால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ சுவரொட்டிகள்....





உம்மாண்டி மேலான அபிமானத்தில் நண்பர்களால் செய்யப்பட்டவை




என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழுள்ள facebook like பொத்தனை அழுத்திச் செல்லுங்கள்
8:53 AM - By ம.தி.சுதா 0

புதன், 22 ஏப்ரல், 2015

மற்றவர் மரணத்தில் இலாபம் தேடுவது வைரமுத்துவுக்கு இது முதல் முறையல்ல

வணக்கம் உறவுகளே
நலம் எபபடி?


ஆரம்ப காலத்தில் சண் தொலைக்காட்சி ஒரு திரைப்பட நிகழச்சித் தொகுப்பை வழங்கும் அதன் பெயர் வாரம் ஒரு நட்சத்திரம் என்பதாகும். இதே போல இப்போது சமூக வலைத் தளங்களிலும் வாரம் ஒரு நட்சத்திரமாக பலியாடுகளாக அவர்களாகவே தலையை கொடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் குமுதம் மூலம் இந்த வாரம் தலையைக் கொடுத்திருப்பவர் கவிஞர் வைரமுத்துவாகும். மறைந்த மதிப்பிற்குரிய எழுத்தாளரான ஜெயகாந்தனின் பெயரில் தன்னை பாராட்டி எழுதியதான கடிதம் ஒன்றை அதுவும் அவரது இறுதிக் கடிதம் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப் போக அதற்குப் பின்னிருந்த மறைக்கபட்ட நிகழ்வுகளை ஜெயகாந்தனின் மகளான தீபலக்சுமி தனது பேஸ்புக்கில் அப்பட்டமாக போட்டுடைத்துள்ளார்.

இதற்கப்பால் இதற்கு முன்னரும் மற்றவர் மரணத்தில் தனது விளம்பர வண்டி ஓட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது பலருக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை.
ஈழத்தில் இடம்பெற்ற போராட்டத்துக்காக ஆரம்ப காலத்தில் பல தென்னிந்தியப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆனால் மிக நீண்ட காலமாக வைரமுத்து அவர்களை பாடல் புனையும்படி புலம் பெயர் சமூகத்தில் இருந்து பலர் கேட்டக் கொண்டிருந்தாலும் தனது பேருக்கு கெடுதல் ஏற்பட்டு விடும் என மறுத்து வந்தார்.
குறிப்பாக கருணாநிதி அவர்கள் தனது அரசியல் நிலையை தக்க வைத்துக் கொள்ள மத்திய அரசுடன் ஒத்திசைந்து நடக்க வேண்டிய நேரத்தில் தான் தனது அரசியல் பக்க பலத்தை கட்டி எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் வைரமுத்துவுக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் கருணாநிதியுடன் மிகவும் நெருங்க வேண்டிய சூழ்நிலை ஒன்றுக்கு தள்ளப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவ் ஆட்சியில் அவர் பெற்ற சலுகைகள் பட்டங்கள் பற்றி எல்லாம் இந்த உலகமே அறியும்.
இப்படி நடந்தவர் போர் ஓய்ந்து சமாதான காலப்பகுதியில் கிடைத்த சுனாமி என்ற சந்தர்ப்பத்தை ஈழம் நோக்கி சரியான விளம்பர ஆயுதமாக பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர் பணத்தைக் கறந்து தானே ஒரு அல்பத்தை வெளியிட்டு புரட்சிவாதி போல அடையாளப்படுத்திக் கொண்டார்..
இது தொடர்பாக 2011 ம் ஆண்டு நான் எழுதிய பதிவு ஒன்றில் இடப்பட்ட கருத்துப் பெட்டியில் அறிவிப்பாளரும் பதிவருமான நிருபன் அவர்கள் புட்டுப் புட்டு வைத்திருந்தார். அவை தொடர்பான ஸ்கிரீன் சொட்கள் இங்கே பகிர்கிறேன்.

பதிவுக்கான தொடுப்பு - இங்கே சொடுக்கவும்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
2:53 PM - By ம.தி.சுதா 2

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top