Featured Articles
All Stories
social லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
social லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜூலை, 2017

கொழும்புக்குள் எவ்விடத்திற்கேனும் செல்ல பஸ் இலக்கங்களை தரும் APPLICATION

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

என்னைப் போல சிங்களம் தெரியாமல் கொழும்பு என்ற பெரு நகரத்து பஸ்களில் விசாரித்து ஏறிப் போய் சேருவது என்பது என்றுமே இயலாத காரியம் தான்.

தேவை தானே எப்போதும் தேடலின் அடிப்படை ஆரம்பம். அன்ரோயிட்டில் தேடிக் கொண்டு போகும் போது பிரிந்தாபன் என்பவர் செய்து வைத்திருக்கும் இந்த செயலியை கண்டேன்.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் பாவிக்கிறேன் கொழும்புக்குள் நுழைந்து விட்டால் போக்கு வரத்துப் பிரச்சனை என்பதே எனக்கு ஏற்படாததால் பெருமளவான ஆட்டோவுக்கான செலவுப்பணம் மிச்சமாகிறது.

பயன்படுத்துவது பற்றி படங்களில் இட்டுள்ளேன்.


இந்த செயலியில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை பிரிந்தாபனது சேவரில் ஏதாவது பிரச்சனை வந்தால் நின்று விடுகிறது உடனே ஒரு மெயில் போட்டால் போதும் 4-5 மணித்தியாலத்திற்குள் சீர் செய்து விடுவார்.

பயன்படுத்தி பயன்பெறுங்கள். (செயலிக்கான தொடுப்புக்கு இங்கே சொடுக்கவும்)

இந்தப் பதிவு உபயோகமானது எனக் கருதின் உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தொடுப்பைக் கொடுங்கள்.

தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழுள்ள பேஸ்புக் லைக் பொத்தானை சொடுக்கி விட்டுச் செல்லவும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

9:24 PM - By ம.தி.சுதா 3

திங்கள், 16 ஜனவரி, 2017

டயலொக் வலையமைப்பின் பகல் கொள்ளையும் இலங்கை நுகர்வோர் சட்டங்களும்

வணக்கம் உறவுகளே...

இலங்கை என்பது நல்லாட்சியும் நீதி நிர்வாகங்கள் காக்கப்படும் ஒரு நாடாகவும் நல்லதொரு விம்பம் உருவாக்கப்பட்டக் கொண்டிருந்தாலும் மேல் தட்டு வர்க்கத்துக்கு கிடைக்கும் தனிமனித அடிப்படைச் சுதந்திரங்கள் அடித்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல நடுத்தர மக்களுக்கும் கிடைப்பதில்லை.


குறிப்பிட்டுச் சொல்லப் போனால் நுகர்வோர் தொடர்பான பாதுகாப்புச் சட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பான சட்டங்கள் இருந்தாலும் அது எந்தளவுக்கு ஒரு நுகர்வோனுக்கு உதவுகிறது என்ற கேள்விக்கு என்ன பதில் கிடைக்கப்போகிறது.

இன்று எந்தக் கடையில் போய் பொருள் வாங்கினாலும் 10 ரூபாவிற்கு மேற்பட்ட மிகுதியானால் மட்டுமோ காசாகக் கிடைக்கும் அதற்கு கீழ் என்றால் உதிரியாகத் திணிக்கப்பட்ட பொருட்களாக இருக்கும். பத்து ரூபாய் என்றால் தீப்பெட்டியும் ஐந்து ரூபாய் என்றால் ஏதாவது ஒரு உயர் சீனிப்பண்டமாக இருக்கும். இந்தச் சில்லறை விடயத்தில் சட்டத்தை இறுக்கத் தவறுவதால் பழக்கமற்றவனைக் கூட சொக்லேட் சாப்பிடப்பழக்குவதுமில்லாமல் இலங்கை அரசாங்கமே தனது சலரோக நோயாளருக்கான மருத்துவச் செலவை அதிகரித்துக் கொள்கின்றது.

வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருத்தரும் 3rd party இன்சூரன்ஸ் கட்டாயம் கட்ட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அது கட்டத் தவறி சில நாட்கள் கடந்தால் கூட நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதுடன் தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டி வரும். இந்தக் காப்புறுதியின்படி யாராவது ஒருவரை அவ்வாகனம் தாக்கினால் கூட அவருக்கான காப்பீடாக அது கருதப்பட்டாலும் இதுவரை யாருக்காவது அப்படிக் கிடைத்திருப்பதாக தகவல் இல்லை. ஆனால் பல வழக்கறிஞர்கள் கூட பாதிக்கப்பட்டிருப்பினும் இதைக் கண்டும் காணாமல் விடுவதை அறிவுசார் விடயமாக கருத முடியவில்லை.

நேற்று டயலொக் மற்றும் மொபிடல் உடைய கட்டணப்பட்டியலைப் பார்க்க நேர்ந்தது. அதில் பார்த்தால் மொபிடலை விட டயலொக்கின் அரச வரிகள் மிக அதிகமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் அறிவிக்கும் போது பொதுவான அரச வரிகள் தான் அறிவிக்கப்படும். அப்படி இருக்கையில் எப்படி வலையமைப்புக்கு வலையமைப்பு அரச வரிகள் மாற முடியும். மொபிடல் என்பது அரசுசார் வலையமைப்பு என்றாலும் தனியார் வலையமைப்புக்கு வரி வீதம் அதிகம் என்று அறிவிக்கப்படவில்லையே.



ஆக மொத்தத்தில் நாம் (நானும்) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பற்றி முழுமையாக தெரியாமல் இருப்பதால் தான் யாரோ ஒரு முதலாளித்துவ வர்க்கத்துக்கு அநியாயமாகப் பணத்தை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம். ஊடகங்கள் இச்சட்டங்களை அடிமட்ட மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும். எல்லா ஊடகத்தினதும் 90 % க்கு மேற்பட்ட பக்கங்களை அரசியலும் கேளிக்கையும் தான் நிரப்புகிறதே தவிர அத்தியாவசியம் நிரப்பவில்லை.

மேலே நான் குறிப்பிட்டவற்றில் கூட நான் அறியாத நுகர்வோர் சட்டத்திற்குள் அடங்கிய ஏதாவது இருக்கலாம். தெரிந்தால் எனக்கும் சுட்டிக் காட்டுங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

மிச்சக்காசு பிரச்சனை ாடர்பாக நான் இயக்கிய குறும்படத்தை இங்கே காணுங்கள்.


8:39 PM - By ம.தி.சுதா 1

வியாழன், 5 நவம்பர், 2015

வெளிநாட்டுப் பொதிப்பரிமாற்றமும் மறைமுகப் பணப்பறிப்பும்

முற்குறிப்பு - ஊடகங்கள் பிரசுரிக்க மறுக்கும் ஆக்கங்களில் இதுவும் ஒன்று. அதனால் என் சுதந்திர வலைத்தளத்தில் இட்டுக் கொள்கிறேன்..
பல்வேறுபட்ட தொடர்பாடலின் விளைவின் ஒரு பகுதியாக உள் நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் இடையிலான பொதிப்பரிமாற்றமும் அதிகரித்து வரும் இந்நிலையில் அதற்குள் கை மாறும் ஏமாற்று வித்தைகளும் அதிகரிக்கின்றது.

உதாரணத்துக்கு கனடாவில் இருந்து நீங்கள் ஒரு பொதி அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் அங்கிருந்து பரிமாறும் முகவர் முழுத்தொகையும் என்னிடமே செலுத்தினால் போதும் என்று ஒரு பெரும் தொகைப்பணத்தைப் பெற்றுக் கொள்வார். அவரிலிருந்து கொழும்பிலிருக்கும் ஒரு முகவருக்கு மாற்றப்படும். அம்முகவருக்கான பணத்தை கனடாக்காரரே செலுத்திக் கொள்வார். ஆனால் இந்த கொழும்பு முகவர் தான் நேரடியாக பெறுநருக்கு அளிப்பார் அல்லது தான் கிளை முகவருக்கு ஒரு தொகைப்பணத்தைக் கொடுத்து பொதியை விநியோகிப்பார்.

இவை தான் ஒரு பொதிப்பரிமாற்றத்தில் நடக்கும் படிமுறைகளாகும். இதில் எங்கெங்கு ஏமாற்றபடுகிறது என்றால் கனடாவில் இருந்து பொதியை பெறும் பிரதான முகவரோ அல்லது கிளை முகவரோ இங்கிருந்து பொதியை பெறுபவரிடம் தம் கை வரிசையைக் காட்டிவிடுவார்கள்.

இது எப்படி நடைபெறுகின்றது என்பதை பார்ப்போமானால் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் பொதிக்கு இங்கு பெறுவதற்கான பண பெறுதி ஒன்றை முன்வைப்பார்கள். ”அடடா இந்தளவு பெறுமதியான பொருளுக்கு இது ஒரு தொகையா” என நினைத்து செலுத்தி வாங்கிச் செல்பவரே அதிகம்.
பெறுநர் கொஞ்சம் சிக்கனப் பேர்வழி என்றால் அடுத்த கேள்வி கேட்பார். ”இதற்கு இவ்வளவு பணமா? ஏன் இப்படி சொல்கிறீர்கள்” என்றால் அதற்கு அளிக்கப்படும் பதில் ”பரவாயில்லை நீங்கள் எடுக்காவிட்டால் திருப்பி அனுப்பி விடுவோம்” என்பார்கள். அந்தப் பயத்தில் பொதியை பெற்றுச் செல்பவர்களே மிக மிக அதிகமாகும்.

ஆனால் அங்கு பொதியிட்டவர் தான் முழுப்பணத்தையும் செலுத்திவிட்டதாக பெறுநருக்கு பற்றுச்சீட்டுடன் அறிவுறுத்தியிருந்தால் இங்கிருக்கும் முகவர் வழங்கும் அறிவுறுத்தல் ”அது சரி அங்கு கட்டித் தான் இருக்கிறார்கள் ஆனால் இங்கு சுங்க வரி விதிக்கப்பட்டிருக்கிறது” என்பார். விசயம் தெரியாதவர் என்றால் இந்த இடத்தில் ஏமார வேண்டியது தான். ஆனால் கொஞ்சம் விசயம் தெரிந்தவர் சுங்கவரிப்பற்றுச்சீட்டைக் கேட்டால் அதற்கும் ஒரு பதில் தயாராக இருக்கும்.
”கப்பலில் வந்த பொதி என்பதால் மொத்த பொதிகளுக்கும் சேர்த்துத் தான் பற்றுச்சீட்டு உள்ளது” என்று மேசை அறையில் கிடக்கும் ஒரு பற்றுச்சீட்டைத் தூக்கிப் போடுவார்கள். இந்த இடத்திலும் நீங்கள் ஏமாரவில்லையானால் உங்களிடம் எழும் கேள்வியில் தான் நீங்கள் தப்பிப்பதற்கான வழி புலப்படும்.
அதாவது உங்களது பொதி இலங்கையில் சுங்க வரிக்குட்படாதவையாக இருந்தால் நீங்கள் அதைக் கூறுகையில் இங்கிருந்து சில தொலைபேசி அழைப்புக்கள் மாறும் அதன் படி அங்கிருந்து திரும்பும் பதிலில் ”ஓம் சரி அண்ணை உங்களது பணம் அங்கேயே செலுத்திவிட்டார்கள். இப்பற்றுச்சீட்டு உங்கள் பெயரில் மாறி வந்து விட்டது” என்ற சின்ன இற(ர)க்கத்துடன் உங்கள் பொதி கையளிக்கப்படும்.
இச்செயற்பாடனது ஒட்டு மொத்த பரிமாற்ற முகவர்களாலும் இடம்பெறாவிட்டாலும் சிலரால் ஈவிரக்கமின்றி பகல் கொள்ளையாக பெருமளவான பணம் அறவிடப்படுகிறது.
ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனில் தான் குற்றம் என்ற மொழியை நாம் உண்மையாக்கமல் இருப்பதற்காவது முயற்சிப்போமே.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

குறிப்பு - இந்த தகவல் பலரைச் சென்றடைய வேண்டும் என்று கருதினால் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
9:00 PM - By ம.தி.சுதா 0

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

ஒரு வெற்றி பெற்ற இயக்குனருடன் பரிமாறப்பட்ட என் மறக்க முடியா உணர்வுத் தாக்கம்

வணக்கம் உறவுகளே
இந்த வருடத்தின் முதல் பதிவை பெரும்பாலான  மனிதரும் சந்திக்கும் ஒரு ஆழ்மன உணர்வுடன் பகிர்கிறேன்.
அவர் அனுமதி பெறாவிட்டாலும் என் மன பாதிப்பு என்பதாலும் பகிர்கிறேன்.
எமக்கு எவ்வளவு தான் வெற்றி கிடைத்தாலும் எமக்கு பிடித்தமானவருடன் அந்த சந்தோசத்தை பகிராத வெற்றிகள் அனைத்தும் வெற்றியாக இருந்தாலும் திருப்தியாக இருக்க போவதில்லை.
அதே இடத்தில் நான் இருக்கும் நிலையை உணரும் போது தான் அதன் வலியையும் உணர்ந்தேன். நான் வாழ்க்கையில் விழுந்து போய் காலையும் மாலையும் கூலித் தொழிலாளியாக அப்பாவை கடக்கும் போது இயாலாமையால் பார்க்கும் அந்த முகத்தை இன்று வெற்றிகளோடு பார்க்க இருக்கவில்லை.
ஆனால் இன்று நான் வாங்கும் சம்பளத்தில் இருந்து விருதுகள் வரை அவர் படத்துக்கு முன் போய் தான் எனக்கு சொந்தமாகிறது.
அதே வலியுடன் ஒரு வெற்றியாளனை சந்தித்தேன். அவர் மறைக்க இயலாமல் மறைத்து மறைத்து சிந்திய அந்த சில துளி கண் கசிவுகள் இப்பவும் என் கண்ணில் தான் படமாக இருக்கிறது.
முந்த நாள் (2.1.2015) தான் அப்பா எம்மை விட்டு பிரிந்து சரியாக இரண்டு வருடங்கள் முடிவடைந்தது. என் தொழில் துறை, திரைத்துறை என எந்த வெற்றியையும் காணாமலே நான் தோற்றுப் போய் இருந்த காலத்திலேயே போய் விட்டார்.
சரி இந்த மனிதன் யார்?
அண்மையில் மௌன விழித்துளிகள் என்ற குறும்படம் மூலம் அமெரிக்காவரை சென்று ஜெயித்து வந்த இயக்குனர் இளங்கோ ராம் அண்ணாவைப்பற்றித் தான் சொல்கிறேன்.

ஒவ்வொரு விடயத்துக்கும் வழிகாட்டிய ஒரு நபரிடம் இருந்து அவர் காட்டிய இலக்கை அடைந்தவன் வந்து தன் வெற்றியை பகிர்ந்தாலும் அதற்கான கருத்தை கேட்க முடியாத நிலை என்பது மிகவும் வலிமிகுந்த ஒன்றாகும்.
மௌன விழித்துளிகளுக்காக பெற்ற விரதடன் அவர் தந்தையிடம் போயிருக்கிறார். ஆனால் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் தந்தையால் மனதால் மட்டும் தான் வாழ்த்த முடிந்ததே தவிர கருத்தால் அல்ல.
”சின்னனில் இருந்து என்னோட சின்ன சின்ன வெற்றிகளையும் பாராட்டி அடுத்த கட்டத்துக்கான கருத்துக்கள் சொல்பவரிடம் இந்த வெற்றிக்கான பாராட்டை பெற முடியாமல் இருப்பதும் அடுத்த கட்டத்துக்கான கருத்தை கேட்க முடியாமல் இருப்பது நரக வலி சுதா” என அவர் கூறிய அந்த நிமிடம் அத்தனை வலியையும் ஒட்டு மொத்தமாக உணர்ந்தேன். அவர் எனக்கு மறைக்க நினைத்தாலும் அவராலேயே அடக்க முடியாமலே சில துளிகள் பொத்தென்று விழுந்தது.
என்னால் கூற முடிந்தது ஒரு சில வரிகள் தான் ”எமக்காக வாழ்ந்தவர்கள் ஆத்மாவாகவென்றாலும் எம்மோடு தான் இருப்பார்கள்”
அவர்களது ஆத்ம சாந்திக்காகவாவது போராடுவோம். 

அண்மையில் என்னோடு நெருங்கிப்பழகும் ஒரு சகோதரனுக்கு வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறேன். அது அவன் மனதுக்கு தாக்கத்தை கொடுத்திருக்கலாம் ஆனால் அவன் பிற்பொழுது ஒன்றில் வருந்தும் போது ஆறுதல் சொல்வதை விட இப்போது பச்சையாக சொல்லலாம் தானே என்று தான் கூறினேன். அது என்னவென்றால் தந்தையாரின் கண்டிப்பு தொடர்பாக கொஞ்சம் தகப்பன் பற்றி காட்டமாக பேசினான். அப்போது தான் சொன்னேன் ”அப்ப அப்படித் தான்ர இருக்கும் ஆனால் அவர் செத்த பிறகு ஏன் அவர் அப்படி நடந்தார் எத்தனை விசயங்களை எமக்கு தெரியாமல் மறைத்திருக்கிறார். என்று தெரிய வரும் அப்ப தான் உணருவம்” என்று என் சொந்த அனுபவத்தை சொன்னேன்.
உண்மையில் அப்பாவுக்கு முன்னரே மாரடைப்பு வந்ததை மறைத்திருக்கிறார் என்பது இறப்பின் பின்னர் தான் தெரியும். அன்று என்னை சிரமப்படுத்தக் கூடாது என்று அவர் நினைத்த அந்த ஒரு சில  ஆயிரங்கள் இன்று என்னிடம் கிடைக்கும் பல ஆயிரங்களுக்கு பெறுமதியே இல்லாமல் செய்து விட்டது.

எத்தனை தரம் விழுந்தாலும் எழுந்து நின்று போராடுவதற்கான தைரியம் கொடுப்பது அவர்களது நம்பிக்கை தான் என்ற ஒரு வித கோட்பாட்டுடனேயே பயணிப்போம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
11:31 PM - By ம.தி.சுதா 3

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

யாழ் கொழும்பு வழி பயணத்திற்கான வாகன வசதிகளின் ஒரு ஒப்பீடு

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

இலங்கையின் இரு வேறு அந்தங்களில் காணப்படும் பகுதியாக இருந்தாலும் இரு கண்டங்களை அடைவது போன்ற மன நிலைப்பாட்டைக் கொடுத்திருந்த யாழ் கொழுப்பு பிரயாணமானது சுமூக நிலைக்கு வந்ததன் பிற்பாடு பல்வேறு வகையான போக்குவரத்து மார்க்கங்கள் வந்த பின்னரும் சராசரி மக்களின் மார்க்கமாக இருப்பவை ஏசி பொருத்திய சொகுசு பேருந்து, இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, ஹையெஸ் வாகனம் என்பனவாகும்.

இதில் குறிப்பிட்ட மூன்றிலும் பயணித்தவன் என்ற ரீதியில்  பொதுவான ஒப்பீட்டை வரைகிறேன் (இங்கு குறிப்பிடப்படும் பெரும்பாலான ஒப்பீடுகள் வடமராட்சி கொழும்புக்கானது).
செலவு குறைந்த சிக்கனப் பயணத்திற்கு நாங்க பாவிக்கும் வழிமுறை ஒன்றிருக்கிறது பதிவின் இறுதியில் படியுங்கள்.

சொகுசுப் பேருந்து
சராசரியாக 1250 ரூபாவிலிருந்து 1400 ரூபாய் வரை அறவிடப்படும் இச்சேவையில் கிடைக்கும் பெரிய அனுகூலம் அலுவலக நாள் அன்று காலை கொழும்பு போய்ச் சேர்ந்தாலும் ஏதோ படுக்கையில் இருந்து எழுந்து போகும் மனநிலையே இருக்கும்.
ஆனால் பலருக்கு இருக்கும் பிரச்சனை கிட்டத்தட்ட அரை நாட்களை தின்று விடும் என்பதேயாகும். யாழ்ப்பாணம் பட்டணப்பகுதியில் இருந்து இரவு 7.30 ற்கு வெளிக்கிடுபவருக்கு அதன் பாதிப்பு தெரிவதில்லையானாலும் வடமராட்சி போன்ற இடங்களில் இருந்து 5 அல்லது 5.30 ற்கு வெளிக்கிடுபவர் நிலை தான் கவலைக்கிடமானதாகும். ஆனால் முடிவிடத்துடன் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் காலை சரியான நேரத்திற்கு நீங்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்திருப்பீர்கள்.
அனால் இதிலும் CTB (SLTB) பேருந்துகளிலும் இருக்கும் உணவுப்பிரச்சனை ஒன்றிருக்கிறது. ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் எந்தக்கடையில் சரியான சலுகையும் உபசரிப்பும் கிடைக்கிறதோ அங்கேயே பேருந்துகள் நிறுத்தப்படும்.

நொச்சிகாமத்தில் உள்ள ஒரு கடையில் நின்றால் ஓட்டுனரின் முன்பக்கக் கண்ணாடியைக் கூட துடைத்து விடுவார்கள். அதே போல இன்னொரு இடத்தில் (பெயர் குறிப்பிடவில்லை) உள்ள முஸ்லீம் கடை ஒன்றில் நிறுத்தும் பேருந்துகளுக்கு பொலிஸ் தரப்பிலிருந்து ஏதாவது சிக்கல் வந்தால் (வேக கட்டுப்பாட்டை மீறல் தொடர்பான) அவர்களே சுமூகமாககி வைப்பார்கள்.

CTB (SLTB) பேருந்து
இங்கே குறிப்பிடப்படுவது சாதாரண பேருந்து பற்றியதாகும். ஆனால் உள்ளுரில் ஓடும் சாதாரண பேருந்துகள் ஓடப்படுவதில்லை எல்லா இருக்கைகளும் தலை சாய்கக் கூடியவையே (இருக்கைகள் நகர்த்த முடியாது) அத்துடன் தொலைக்காட்சியும் இருக்கிறது. 675 ரூபா வுடன் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் பயணமானது காலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும் அதே போல காலை 5.30 ற்கு ஆரம்பிக்கும் பயணமும் மாலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும்.
இரு இருக்கைகள் உள்ள பக்கம் உங்களால் முற்பதிவு செய்ய முடிந்தால் பெரிய உடல் அசதியிருக்கப் போவதில்லை.
இங்குள்ள சிக்கல் என்னவென்றால் அதிகாலை 3.30 ற்கு கொழும்பு வீதிகளில் ஒரு பெண்ணால் நிற்க முடியாது என்பதேயாகும். உங்களுக்கான வாடிக்கையான ஒரு ஆட்டோக்காரர் இருப்பாரானால் எந்த சிக்கலுமில்லை.
சிலதடவை நான் இரவு கொழும்பு போய் எனது வேலையை முடித்துக் கொண்டு காலை பேருந்தில் திரும்பியிருக்கிறேன் (24 மணி நேரத்திற்குள்).

ஹையெஸ் வாகனம்
சராசரியாக 1200  ரூபாய் அறவீட்டுடன் ஆரம்பிக்கும் இப்பயணத்தில் உள்ள மிகப் பெரும் சாதகமான விடயம் என்னவென்றால் வீட்டு வாசலில் ஏற்றப்பட்டு நாம் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கப்படுவோம். இதைப் போல பாதுகாப்பான பயணம் எதிலும் கிடைப்பதில்லை. ஆனால் மற்றையதில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து தப்புவதற்கு கிடைக்கும் சந்தர்ப்ப விகிதம் இதில் மிக மிகக் குறைவு.
அத்துடன் என் போல சற்று கால் நீளமானவருக்கு ஏதுவான இருக்கை கிடைக்காவிடில் விடிய இறங்கும் போது தேநீர் குடிப்பதற்கு இரண்டு சிரட்டைகள் கையில் இருக்கும்.
ஆனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனை உள்ளவருக்கு சிறந்ததாகும் (super luxary சொகுசுப் பேருந்துகளுக்கு கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது)
அதே போல நல்ல கடைகளில் சாப்பிடலாம்.

இதை விட தனியார் அரைச் சொகுசு பேருந்துகளும் போகின்றன அவை பற்றி நான் விபரித்துத் தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை.

சரி நாம் பாவிக்கும் சிக்கன வழி இது தான். தயவு செய்து பேருந்து முதலாளியிடம் போட்டுக் கொடுத்திட வேண்டாம். பிற்பகல் 5 மணிக்கு வவுனியா பஸ் எடுத்திடவேண்டும். அங்கே 9 அல்லது 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்து சொகுசுப் பேருந்துகள் வரும். அதற்கு முன்னர் நல்ல கடையில் சாப்பிட்டு விட்டு 10 ரூபாயை வவுனியா பஸ்நிலைய கழிப்பறைக்கு கொடுத்து மதியப் பாரத்தை இறக்கி வைத்து விட்டு நின்றால் பேருந்துகள் வரும். நடத்துனரிடம் சென்று “அண்ணே ஏதாவது சீட் இருக்கா“ என்று கேட்டால் அவர் பதிலளிப்பார் இருந்தால் 500 அல்லது 600 ஐ அவரிடம் கொடுத்து விட்டு அலுப்பற்ற சந்தோசப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். 400 கொடுத்து பயணிக்கும் என் நண்பர் ஒருவரும் இருக்கிறாரென்றால் பாருங்களேன். இப்ப சொல்லுங்கள் நாம் பழம் தின்று கொட்டை போட்டவரா இல்லையா?

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
11:13 PM - By ம.தி.சுதா 4

வியாழன், 11 ஜூலை, 2013

பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் ஆன்மீகம் கடந்த சமூக சாதனைகள்

 வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


உலக சுழற்சியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல்வேறு நபர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் மீது நாம் நோக்கும் பக்கமே அவர்கள் மீதான தோற்றப்பாட்டை எம் மீது உட்செலுத்துகிறது.
தகவல் தொடர்பாடல் வளர்ச்சியின் பின்னர் சாதகமான கருத்துக்கள் செய்திகளின் பரம்பல் வேகத்திற்கீடாக எதிர்மாறான பரப்புரைகளும் வாதந்திகளும் சம வேகத்தில்  பரவவிளைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் சிலரது நல்ல பக்கங்களும் மெது மெதுவாக மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு செல்கிறது.
இந்த நூற்றாண்டில் உலகை விட்டுப் பிரிந்தவர்களில் மிக முக்கியமான சரித்திர நாயகர்களில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவும் ஒருவராகத் திகழ்கின்றார். இவரை ஒரு ஆன்மீகவாதியாகவும், மத பரப்புரையாளராகவும், மதச் சிந்தனையாளருமாகவே பலர் நோக்குகையில் ஒரு பெரும் தேசத்தின் மூலையில் இருந்து கொண்டு ஒரு தனிமனிதன் இந்தளவு வளர்ச்சி கண்டு இவ்வளவு சாதித்திருப்பது என்பது வியக்க வேண்டிய விடயமொன்றாகும். பணம் எதுவும் செய்யும் என்ற ஒரு வாக்கியத்தால் மறுவாதங்களை பிரயோகித்தாலும் உலகில் எவருமே எட்ட முடியாத ஒரு எல்லையைத் தான் அவர் எட்டியிருக்கிறார்.
இவருக்கு உலகமெங்கிலும் 114 மையங்களில் 1200 சத்யசாய் அமைப்புக்கள் உள்ளன. அவரது பக்தர்கள் 100 கோடி பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுப்புக் கூறுகின்றது.
அவருடைய நிறுவனங்கள் உலகமெங்கிலும் 136 நாடுகளில் சமூகசேவையாற்றுகின்றது. அதன் ஒரு பகுதி அமைப்பான விழுமிய சமூக அமைப்பானது ஒரிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தது.
விழுமிய கல்வி அமைப்பானது பல மாணவருக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறது. அதே போல விழுமிய மருத்துவ நிறுவனம் பல இலவச வைத்திய முகாம்களை அமைத்து உலகின் பல்வேறு இடங்களிலும் இலவச மருத்துவ உதவியை அளித்து வருகிறது. அத்துடன் புட்டர்பத்தியிலும் பெங்களுரிலும் மிகப் பெரும் மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டு மருத்துவ வசதியளிக்கப்படுகிறது.
இவரது மிகப் பெரும் சாதனையாகக் கருதப்படுபவற்றில் பிரதானமானது இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ்காரர் ஆட்சியிலிருந்தே ஆந்திராவில் ஆனந்பூர் மற்றும் கோதாவாரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முடியாமல் வறட்சியில் காணப்பட்டது. இப்பிரச்சனை இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் பல் ஆட்சியாளர்களால் தீர்க்க முடியாமல் இருந்த நிலையில் ஒரே வருடத்தில் அவ்வளவு இடத்திற்கும் குடிநீர் கிடைக்கச் செய்து வழி செய்தார்.
சென்னையில் இருந்த குடி நீர் பஞ்சத்தைத் தீர்க்க ஆந்திர அரசுடன் இணைந்து இரு அரசும் முயற்சித்த தெலுங்கு கங்கை நீர்த்திட்டத்தை சுமார் 200 கோடி செலவழித்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.
இவை இப்படியிருக்கையில் பகுத்தறிவு பேசியும் ஆன்மீகவாதிகளை கீழ்த்தரப்படுத்தியும் அரசியல் நடத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் கூவம் நதியை துப்பரவு செய்து தரும்படி பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் வேண்டு கோள் விடுத்திருந்தார்.
இவர் மரணம் அடைந்த பொழுது உலகமெங்கிலும் இருந்து 4 லட்சம் பக்தர்கள் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவரது இறுதி நேரம் உறுதியாகிவிட்ட நிலையில் 6000 போலிஸ்காரர்கள் புட்டர்பத்தியில் குவிக்கப்பட்டிருந்தார்கள். ஆந்திரா அரசு 4 நாட்கள் துக்கதினமாக அறிவித்து அனுஸ்டித்து அவரை கௌரவித்தது.
எல்லாம் தெரிந்தவருக்கு தன்னைக் காப்பாற்றத் தெரியவில்லை என சில பகுத்தறிவு பேசும் அரைகுறை அறிவாளிகள் கூறிக் கொண்டாலும் சித்தர்களைத் தவிர சமூக மாயைக்குள் வாழ்ந்த எந்த மனிதனும் மரணச் சக்கரத்தைக் குழப்பி வாழவில்லை என்பது அறிவுறுத்தியும் எடுபடப் போவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் என தம்மை அடையாளப்படுத்தி வாழ்பவர்கள் தம்மை ஒரு குழுவிற்குள் வேறுபடுத்திக்காட்டவும் தம் நிலைப்படுத்தலை உறுதிப்படுத்தவுமே பகுத்தறிவு பேசுகிறார்கள்.
ஒரு தனிமனிதனால் 100 கோடி பேர் நல்லவர்களாக வாழ்கிறார்கள் என்றால் அதைப் போல சாதனை இந்த பாதக உலகத்தில் வேறெதுவாக இருக்க முடியும். அப்படி நம்பி வாழ்பவரை கீழ்த்தரப்படுத்துவதால் பாவிகள் உலகத்தை சிருஸ்டிக்கும் நீங்களே பாவிகளாக மாறிக் கொள்கிறீர்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

7:53 AM - By ம.தி.சுதா 6

புதன், 12 ஜூன், 2013

என் உயிருடன் விளையாடிய வல்லைப் பாலமும் ஊடகங்கள் காணாத பக்கமும் வீடியோவாக

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
முற் குறிப்பு- இச்சம்பவம் ஆனது கடந்த சில நாட்களின் முன்னர் இடம்பெற்ற இயற்கைக் குழப்பத்தின் போது நடந்தது. அதன் வீடியோவை உடனே ஏற்ற முடிந்தாலும் பதிவெழுத நேரமின்மையால் காலதாமதமாகிவிட்டது.

யாழில் அமைந்துள்ள முக்கிய பெருந்தெருக்களில் யாழ் பருத்தித்துறை வீதிமுக்கியமானதும் அதிக வருவாய் தரும் விதியுமாகும் (பிரயாணிகள் மூலம்)
இதன் சீர் திருத்தப்பணிகள் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வருகின்ற போதும் இன்னும் முடிவதாகத் தெரியவில்லை.

இதே பாணியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த யாழ் பலாலி வீதியானது ஜனாதிபதியின் வருகையை அடுத்து ஒரே இரவில் முழுமையடையச் செய்யப்பட்டது பலர் அறிந்ததே. ஆனால் இதே வீதியில் பல குன்றும் குழிகளும் மாதக்கணக்காக இருப்பது மட்டுமல்லாமல் வீதி புனரமைப்பாளரால் பல மாதக்கணக்காக பாரிய குழிகள் தோண்டி விடப்பட்டுள்ளது.

இதில் பலவற்றுக்கு எச்சரிக்கை சமிஞ்ஞை கூட இல்லாத நிலையில் இருக்கிறது. இதில் மிக முக்கியமாக காணப்படுவது வல்லைப் பாலத்திற்கு இருமருங்கிலும் இருக்கும் பாரிய பள்ளமாகும். இதன் ஒரு பகுதி சாதாரண பள்ளமாக இருந்தாலும் மறுபகுதி மிகவும் ஆபத்தானது. கடந்த 4 மாதங்களாக இருக்கும் இக் குழி ஏன் இருக்கின்றது என யாருக்குமே தெரியாது.

அதுமட்டுமல்லாமல் இதனூடாக நிச்சயம் யாழின் அனைத்து உயர்பதவி வகிக்கும் அதிகாரிகளும் ஏசி வாகனத்தில் ஊர்ந்து கடந்து சென்ற அனுபவம் இருக்கும் என்பது மிக மிக உறுதியான விடயமாகும்.

மேலும் இங்கு கடந்த சில தினங்களாக தலைகீழாக ஒரு எச்சரிக்கை பதாதை தொங்க விடப்பட்டிருந்தது ஆனால் இப்பதாதையானது யாழ் நோக்கிச் செல்வோருக்கு மட்டுமே தெரியும் யாழிலிருந்து பருத்துறை நோக்கி வருபவருக்கு இப்படி ஒரு கிடங்கிருப்பது தெரியாது. அதுமட்டுமல்லாமல் இப்போது அந்த பதாதையும் அங்கே இல்லை.
இப்போது பலத்த காற்று வீச ஆரம்பித்துள்ள நேரத்தில் சாதாரணமாகவே அவ் வெளியில் பல உந்துருளிப் பிரயாணிகள் கடலுக்குள் விழுந்த சம்பவங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளது.
விபத்துக்கான காரணங்களை எங்கள் வசம் வைத்துக் கொண்டு விபத்து சம்பந்தமான போதனைகளைப் போதித்து என்ன ஆகப் போகிறது.
சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுப்பார்களா?

சரி தலைப்பிற்கு வருவோம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் அப்பாலத்தில் நடந்த சம்பவம் இது.
நான் உடுப்பிட்டியில் இருந்து யாழ்  நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது பாலத்தில் அக்கிடங்கை கடந்து ஏறுகையில் எதிரே ஒரு ஆட்டோவும் பிக்அப் ரக வாகனமும் வேகமாக வந்து கொண்டிருந்தன.
சடுதியாகக் கிடங்கைக் கண்ட ஆட்டோக்காரர் பிறேக்கை (வேக நிறுத்தியை) பிடித்தார் அவர் பின்னால் வந்த பிக்கப் வேகமாக வந்ததால் அதன் ஓட்டுனரும் பிறேக்கைப் பிடித்தார். இரும்புப் பாலமாகையால் பிடிமானமில்லாத ரயர்கள் சறுக்க பிக்கப் திரும்பிக் குறுக்காக நின்றது.

என்னுடைய உந்துருளியாகையால் என்னால் பிறேக் பிடிக்க முடியாது பிடித்தால் சறுக்கி விழுத்தி விடும் அளவுக்கு மழை.
நான் சுதாகரிப்பதற்கு முன்னரே பிக் அப்பிற்கும் பாலத்திற்கும் இடைப்பட்டிருந்த 3 அடி (கிட்டத்தட்ட) இடைவெளிக்குள்ளால் புகுந்த உந்துருளி மறுபக்கம் கடந்து விட்டது. மறு நாள் போய் தான் இந்த வீடியோவை எடுத்ததுடன் மேலே குறிப்பிட்டிருந்த ஆக்கத்தையும் (சுய புராணத்திற்கு மேல் உள்ளது) ஒரு யாழ்ப்பாணத்து தினசரிப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதை கண்டு கொண்டதாகத் தெரியாததால் பத்திரிகைக்கும் எனக்கும் உள்ள விதிமுறையை மீறி முதலே பதிவிட்டுக் கொள்கிறேன்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
3:14 PM - By ம.தி.சுதா 5

செவ்வாய், 14 மே, 2013

புலம்பெயர் தேசத்தில் கலக்கும் ஈழத் தமிழர் சாதனைகள் பாகம்-1

எந்த நாடு போனாலும் இந்தக் கூடு வேகுது கூட்டத்தோடு வறுமையும் தான் நாடு மாறுது என்ற வரி என்மனவானில் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கும். இவ்வரி ஒரு நாடோடிக்கூட்டத்தின் வறுமையை சிததரிப்பதற்காக குறிப்பிடப்பட்டிருந்தாலும் தமிழனைப பொறுத்தவரை இவ்வரி மாறிய வருகிறது. எந்த நாடு போனாலும் அவனுக்கென்று தனி முத்திரையை எதோ ஒரு வகையில் பதித்திருப்பான்.

அந்த வகையில் இன்று அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் கனடா மார்க்கம் நகரசபைஅங்கத்தவராக இருக்கும் திரு லோகன் கணபதிப்பிள்ளையாவார். யாழின் தீவகத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதும் நாடடின் சூழல் இவரை கொண்டு சேர்த்த எல்லை தான் பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் கனடிய தேசமாகும்.

ஆனால் ஒரு நகரசபையில் இருக்கும் மக்களின் 90 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஒரு ஈழத் தமிழன் அங்கத்தவராக வருவதென்பது எல்லோருக்கும் பெருமையான விடயம் ஒன்று தானே.
அந்நகரசபையின் ஒரே ஒரு தமிழ் பேசும் அங்கத்தவராக இருக்கும் இவர் செய்தது என்ன?
அந்நகரசபையின் முக்கிய வீதி ஒன்றுக்கு “வன்னி வீதி” “vanni street in markham canada”என பெயர் சூட்டுவோம் என இவர் முன்மொழிந்து அதை நடைமுறைப்படுத்தி திறக்கவும் உள்ளார்.

இதே நகரசபை தான் தமிழரின் விழா மாதமான தைத்திருநாள் மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக மாற்றி அதை விழாவாகவும் எடுத்து எமது கலை பண்பாட்டை கட்டிக் காக்க உதவி வருகின்றமை சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

பல நல்ல செயல்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இவரது வழியில் பின்பற்றி எமது மொழி கலை பண்பாட்டுக்கு நாமும் உதவுவோம். அவருக்கு என் சார்பான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
(ஏனையவர்கள் சாதனைகள் பற்றிய பதிவு தொடரும்)

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

1:25 PM - By ம.தி.சுதா 3

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top