Featured Articles
All Stories

புதன், 22 ஏப்ரல், 2015

மற்றவர் மரணத்தில் இலாபம் தேடுவது வைரமுத்துவுக்கு இது முதல் முறையல்ல

வணக்கம் உறவுகளே
நலம் எபபடி?


ஆரம்ப காலத்தில் சண் தொலைக்காட்சி ஒரு திரைப்பட நிகழச்சித் தொகுப்பை வழங்கும் அதன் பெயர் வாரம் ஒரு நட்சத்திரம் என்பதாகும். இதே போல இப்போது சமூக வலைத் தளங்களிலும் வாரம் ஒரு நட்சத்திரமாக பலியாடுகளாக அவர்களாகவே தலையை கொடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் குமுதம் மூலம் இந்த வாரம் தலையைக் கொடுத்திருப்பவர் கவிஞர் வைரமுத்துவாகும். மறைந்த மதிப்பிற்குரிய எழுத்தாளரான ஜெயகாந்தனின் பெயரில் தன்னை பாராட்டி எழுதியதான கடிதம் ஒன்றை அதுவும் அவரது இறுதிக் கடிதம் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப் போக அதற்குப் பின்னிருந்த மறைக்கபட்ட நிகழ்வுகளை ஜெயகாந்தனின் மகளான தீபலக்சுமி தனது பேஸ்புக்கில் அப்பட்டமாக போட்டுடைத்துள்ளார்.

இதற்கப்பால் இதற்கு முன்னரும் மற்றவர் மரணத்தில் தனது விளம்பர வண்டி ஓட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது பலருக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை.
ஈழத்தில் இடம்பெற்ற போராட்டத்துக்காக ஆரம்ப காலத்தில் பல தென்னிந்தியப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆனால் மிக நீண்ட காலமாக வைரமுத்து அவர்களை பாடல் புனையும்படி புலம் பெயர் சமூகத்தில் இருந்து பலர் கேட்டக் கொண்டிருந்தாலும் தனது பேருக்கு கெடுதல் ஏற்பட்டு விடும் என மறுத்து வந்தார்.
குறிப்பாக கருணாநிதி அவர்கள் தனது அரசியல் நிலையை தக்க வைத்துக் கொள்ள மத்திய அரசுடன் ஒத்திசைந்து நடக்க வேண்டிய நேரத்தில் தான் தனது அரசியல் பக்க பலத்தை கட்டி எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் வைரமுத்துவுக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் கருணாநிதியுடன் மிகவும் நெருங்க வேண்டிய சூழ்நிலை ஒன்றுக்கு தள்ளப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவ் ஆட்சியில் அவர் பெற்ற சலுகைகள் பட்டங்கள் பற்றி எல்லாம் இந்த உலகமே அறியும்.
இப்படி நடந்தவர் போர் ஓய்ந்து சமாதான காலப்பகுதியில் கிடைத்த சுனாமி என்ற சந்தர்ப்பத்தை ஈழம் நோக்கி சரியான விளம்பர ஆயுதமாக பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர் பணத்தைக் கறந்து தானே ஒரு அல்பத்தை வெளியிட்டு புரட்சிவாதி போல அடையாளப்படுத்திக் கொண்டார்..
இது தொடர்பாக 2011 ம் ஆண்டு நான் எழுதிய பதிவு ஒன்றில் இடப்பட்ட கருத்துப் பெட்டியில் அறிவிப்பாளரும் பதிவருமான நிருபன் அவர்கள் புட்டுப் புட்டு வைத்திருந்தார். அவை தொடர்பான ஸ்கிரீன் சொட்கள் இங்கே பகிர்கிறேன்.

பதிவுக்கான தொடுப்பு - இங்கே சொடுக்கவும்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
PM 2:53 - By ம.தி.சுதா 2

2 கருத்துகள்:

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

DD தொலைக்காட்சியில் ஒன்றாய் கலந்துரையாடிய 4 ஈழத்து கலைஞர்கள் - காணொளி இணைப்பு

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?


கடந்த சித்திரைப் புதுவருட நாள் நிகழ்ச்சயாக டிடி தொலைக்காட்சியானது 4 ஈழத்துக் கலைஞர்களை அழைத்து சமகாலத்தில் கலைத்துறையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியை பாடலாசிரியரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான வெற்றி துஷ்யந்தன் தொகுத்து வழங்கியிருந்தார்.
இக்கலந்துரையாடலில்...
ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும், இயக்குனருமான லோககாந்தனும்
நடிகரும், இயக்குனரும் ஆன கவிமாறனும்
நடிகரும், பாடகருமான ஜெராட்டும்
நானும் கலந்து கொண்டிருந்தோம்.
கலந்துரையாடலின் முழுமையான வடிவம் இணைக்க முடியாமையால் முக்கியமான பகுதிகளை மட்டும் சிறு நேரம் ஒன்றுக்குள் சுருக்கி இணைத்த்துள்ளேன்.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
AM 10:47 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஆகாசின் ”என் கனா உன் காதல்” குறும்படத்தில் நான் ரசித்தவை

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

மிகக் குறைந்த வளங்கள், அடிப்படை சினிமா கற்கை எதுவும் இல்ல பூமியான எம் தேசத்தில் இருந்து வரும் குறும்படங்களில் சின்ன சின்ன வளர்ச்சி கூட தட்டிக் கொடுக்கப்பட வேண்டியவையே...
அந்த வகையில் இன்று செல்லா திரையரங்கில் நான் ரசித்த ஆகாசின் ”என் கனா உன் காதல்” பற்றி பேசியே ஆக வேண்டும்.
முதலில் முன்னரே ரசிக்க வைத்த இடம் குறும்படத்துக்கான தலைப்பாகும். கதையின் மொத்தக் கருவையும் தலைப்புக்குள் உள்ளடக்கியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பில் தென்னிந்திய அரங்கில் இருந்து 5D mark போன்ற கமராக்களில் இருந்து படங்கள் வந்திருந்தாலும் அவர்களிடம் இருக்கும் Lens வசதி போல இங்கில்லை அதனால் DSLR camera வில் படம் பிடிப்பது என்பதே சவாலான ஒரு விடயமான நிலையில் இருக்கும் வளத்தை வைத்து திரையரங்குக்கான தரம் ஒன்றை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். சரியான லென்ஸ் இல்லை என்று பட்ப்பிடிப்பு செய்த சசிகரன் தனிப்பட்ட ரீதியில் கூறியிருந்தாலும் சில இடங்களைத் தவிர அவர் தன்னால் இயன்றவரை வெற்றி கண்டிருக்கிறார்.

அடுத்ததாக கவர்ந்த விடயம் நடிப்பு ஆகும். தனது சொந்தக் கதை என்பதாலோ தெரியவில்லை நடிகர் விஷ்ணு கதாபாத்திரமாகவே அப்படியே படத்திலும் சரி மனதிலும் சரி ஒட்டிக் கொண்டிருக்க...

என்னை வியப்பாக பார்க்க வைத்தவர் நடிகை நிரோசா வாகும். நான் பார்த்த எம்மவர் குறும்படங்களில் முதன் முதலாக ஒரு நடிகையின் romantic நடிப்பை முழுமையான பார்த்த ஒரு திருப்தியைக் கொடுத்தார். படத்தின் மிகப் பெரிய பலமே அவரது பேச்சும் பேச்சுக்கு முதலே பேச வந்ததை பேசிய கண்களும் தான்...

அடுத்ததாக பேச வேண்டிய விடயம் பின்னணி இசையாகும். அடையாளமாக பேச எமக்குள் பல பாடல்கள் இருந்தாலும் பின்னணி இசைக்காக பேசப்பட்ட படங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் அவதானித்தவரையில் பின்னணி இசையில் ரொமான்டிக் படம் ஒன்றில் என்னை இரண்டாவது தடவையாக இசையமைப்பாளர் சுதர்சன் அண்ணா கட்டிப் போட்டிருந்தார். இதற்கு முன்னர் மயன், வினோ அண்ணா, ஜெயதீபன் ஆகியோரின் படைப்பாக வந்த "Unwanted love" ல் புகுந்து விளையாடியிருந்தார். இயற்கை இசைக்கனா இடைவெளியின் போதாமை உணர்வு ஒன்று எனக்குள் இருந்தாலும் குறையாக பார்க்க அவர் இடம் வைக்கவில்லை. படத்தின் இறுதிக் காட்சியில் சந்தோசம், புத்துணர்ச்சி என அவர் கலந்திட்ட இசையின் மெட்டை ஒரே ஒரு தடவை தான் கேட்டிருந்தாலும் இப்போதும் என்னால் பாடிக் காட்ட முடிகிறது.

படத்தில் புதிய கதை என சொல்வதற்கு எதுவும் இல்லை ஆனால் அக்கதையை எமக்கு சொன்ன விதம் தான் படத்தை பலமாக்கியது எனலாம். ஆனால் என் அவதானிப்பின்படி ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்வேன் எடிட்டிங் மேசையில் வைத்துத்தான் திரைக்கதை முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. எதை வைத்துச் சொல்கிறேன் என்றால் முதலே திரைக்கதை திட்டமிடப்பட்டமைக்கான காட்சியமைப்புத் திருப்திகள் காணப்படவில்லை.

மொத்தத்தில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த காதல் படங்களுக்குள் மேம்பட்ட ஒரு படமாக ”என் கனா உன் காதல்” முன்னுக்கு வந்திருப்பதை சந்தோசமாக பார்க்கிறேன்.
இப்படத்திற்கு மிகவும் பலம் சேர்த்தவை 3 விடயங்கள் தான்.
1. திரைக்கதை
2. நிரோசா
3. பின்னணி இசை
இப்படைப்புக்காக உழைத்த ஆகாஷ், விஸ்ணு, நிரோசா, சசிகரன், ஆதன், சுதர்சண்ணா, கிருத்திகன் இவர்களோடு பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
PM 9:42 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

வர்த்தக சினிமாவில் இன்னொரு கட்டத்துக்கு நகரும் ஈழசினிமா

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

ஈழத் தமிழருக்கென்று அடையாள சினிமா தேடும் போராட்டத்தில் ஒவ்வொரு கலைஞனும் தம் நேரம், பொருள், வாழ்வு என பலதை அர்ப்பணித்து கலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் தோற்றுப் போனாலும் எம் போராட்டமும் உழைப்பும் அடுத்த சந்ததிக்கு நல்லதொரு அனுபவப் புத்தகமாக இருக்கும்.
ஈழத்தில் இதுவரை உருவாக்கப்பட்ட குறும்படங்களில் எடுகோளான விழாக்களை எடுத்துக் கொண்டால் இதுவரை காலமும் ஒரு தொகுதியினர் கை கடிக்க கடிக்க தம் காசில் தன்னம்பிக்கையை மட்டும் கொண்டு எடுத்து விட்டு யூரியுப்பில் தரவேற்றிக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் போட்ட காசை எடுக்கலாம் என்ற நம்பிக்கையிலும் படத்துக்கான விளம்பரமாக அமையலாம் என்ற எண்ணத்திலும் வெளியீட்டு விழாக்கள் மூலம் பிரதி விநியோகத்தின் மூலம் போட்ட காசில் குறிப்பிட்ட ஒரு தொகையை மட்டும் எடுத்துக் கொண்டனர்.
இவை எம் சினிமாவை வெளி உலகுக்கு கொண்டு வந்தாலும் வர்த்தக ரீதியில் பாரிய நட்டத்தையே கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் பின்னர் பல இயக்குனர்களது பார்வை திரையங்குகள் பக்கம் திரும்பியது. இதற்கு ஏதுவாக ஹிமாலயா நிறுவனத்தால் நடாத்தப்பட்ட சர்வதேச அரங்கில் அடையாளப்படுத்தப்பட்ட போட்டிகளில் ஒன்றான 48 hours film project என்ற போட்டியின் இறுதி நிகழ்வானது ராஜா திரையரங்கில் நிகழ்த்தியதன் மூலம் கணிசமான வருகையாளர் எண்ணிக்கை ஒரு மாற்றமாக அமைந்த நிலையில்....
மாதவனுடைய ”என்னாச்சு” , சமிதனுடைய ”நீ நான் அவர்கள்” , சிவராஜ் உடைய ”பை” ”பிகரை தியெட்டர் கூட்டிப் போவது எப்படி” , நிலானுடைய ”காதல் என்ன விளையாட்டாப் போச்சா” வரோவின் ”இலவு” போன்ற குறும்படங்கள் திரையரங்க திரைகளை அலங்கரித்து வர்த்தக சினிமாவுக்கான ஒரு ஒளிப்பிரகாசம் அளித்தது.
முழு நீளப்படங்களில் ஏற்கனவே கவிமாறனுடைய ”என்னுள் என்ன மாற்றமோ” , ரமணாவின் ”மாறுதடம்” (இப்படம் தணிக்கை பிரச்சனையால் திரையரங்கில் தடை விதிக்கப்பட பின்னர் மண்டபம் ஒன்றில் திரையிடப்பட்டது) , ராதா வின் ”சிவசேனை” போன்றன திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தன.
அடுத்ததாக ஆகாசின்  ”‎என்‬ ‪‎கனா‬ ‎உன்‬ ‪‎காதல்”‬ என்ற குறும்படம் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1 மணிக்கு செல்லா திரையரங்கில் திரையிடப்படுகின்றது. கலைஞர்களாக அக் குறும்படத்துக்கு எம்மால் ஆனா ஒத்துழைப்பை கட்டாயம் வழங்க வேண்டும் காரணம் இது எம் சினிமா இதை வர்த்தகமயமாக கட்டி எழுப்ப வேண்டிய கடமை ஒவ்வொருத்தருக்கும் இருக்கின்றது. அத்துடன் இக்குறும்படத்தின் தரத்தை என்னால் நிச்சயமாக உறுதிப்படுத்த முடியும்.
வர்த்தகமாக்கலில் உள்ள சவால் என்னவென்றால் கணிசமான மக்கள் இந்திய சினிமா மோகத்துக்குள் இருப்பதால் அம் மக்களை எடுத்த வீச்சமாக எமது சினிமாவுக்குள் இழுத்து வர முடியாத நிலை ஒன்று இருப்பதால் படிப்படியாகவே அவர்களை எம் சினிமாவுக்கு பழக்கப்படுத்தி அவர்களை இவற்றையும் எதிர் பார்ப்போடு ரசிக்க வைக்க வேண்டும். இது ஒரு மிகச் சவாலான விடயமே காரணம் அவர்களைச் சென்றடையும் படைப்புக்கள் அனைத்தும் தர மட்டத்தில் குறைந்தனவாக இருந்தால் ஒட்டு மொத்த படைப்பாளிகளையும் குப்பைகளாக மதிப்பீடு இட்டு விடுவார்கள்.
வர்த்தகமயமாக்கலில் எதிர் கொள்ளும் இன்னொரு மிக முக்கிய சிக்கல் என்னவென்றால் திரையரங்க உரிமையாளர்களின் ஒத்துழைப்பாகும். திரயரங்குக்கு கொண்டு செல்லும் குறும்படம் கூட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தணிக்கை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறார்கள் இதற்கான அலைச்சலுக்கே ஒருவருக்கு 10,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படும். அதற்கப்பால் தென்னிந்திய முன்னணி நடிகர்களின் படங்கள் தவிர்ந்த சாதாரண படங்களை வைத்திருந்து பார்வையாளர்களே இல்லா நிலையில் இருக்குமு் திரை அரங்குகள் கூட இப்படி ஒரு திட்டத்துடன் அணுகும் போது ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் 30,000 ஆயிரம் வரை கேட்கிறார்கள். மிக முக்கியமாக இப்பிரச்சனைகளை எல்லாம் ஒரு கலைஞனால் எதிர் கொள்ள முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் எமக்கென்று இதுவரை செயற்பாட்டுடன் கூடிய ஒரு சங்கம் இல்லாமையே..
இப்படியான சிரமங்களுக்கு மத்தியிலும் எம்மால் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் தான் ஒவ்வொரு படைப்பாளியும் உழைக்கிறான். இந்த உழைப்பானது ஒரு நாளில் நிச்சயம் வரலாறாகப் பேசப்படும். அதற்காகவாவது கை கோர்த்து உழைப்போம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

இணைப்புக் குறிப்பு - 

1) இப்படியான திட்டம் ஒன்று சென்ற மார்கழி மாதம் எனக்குள் இருந்தாலும் இதுவரை செய்த 9 குறும்படங்களில் ஒன்றுக்கு கூட வெளியீட்டு விழாக் கூட நடாத்தாத நிலையில் ஒரு சிறிய குறும்படத்துக்காக மட்டும் ஒரு பார்வையாளன் இருந்த களை மாற முதல் எழும்ப வைப்பது ஏதோ மனசை உறுத்தியது. ஆனால் இப்போது என் திட்டத்தை வெளிக் கொணரும் எண்ணம் இருக்கிறது. 2009 போரின் பின்னர் வன்னியின் போன் வெளிக்கள போர்க்காட்சியை மையப்படுத்திய என்னுடைய ”தாத்தா” குறும்படத்தையும்,
அண்ணன் தங்கையை மையப்படுத்திய ”கருவறைத் தோழன்” மற்றும் நோர்வே சர்வதேச திரைப்பட விழாவில் இறுதிப் போட்டிக்கு தெரிவான ”கரகம்” ஆவணப்படத்தையும் உள்ளடக்கி ஒரு முழுமையான சினிமா நேரமாக்கி. தயாரிப்பாளர் எதுவும் கிடைக்காமல் பண நெருக்கடியால் கிடப்பில் கிடக்கும் என்னுடைய முழு நீளத் திரைப்படமான ”உம்மாண்டி” திரைப்படத்துக்கான பணம் சேர்க்கும் நோக்குடன் வரும் மே மாத கடைசியில் திரையிடும் எண்ணம் இருக்கிறது.

2) ஆகாசின்  ”‎என்‬ ‪‎கனா‬ ‎உன்‬ ‪‎காதல்”‬ என்ற குறும்படம் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1 மணிக்கு செல்லா திரையரங்கில் திரையிடப்படுகின்றது. எம்மால் ஆன ஒத்துழைப்பை வழங்குவோம். இப்படைப்பில் பணியாற்றிய விஷ்ணு, நிரோசா, சசிகரன், சுதர்சன், ஆதன் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள் சேரட்டும்.

3) அடுத்து வரும் காலப்பகுதியில் சக இயக்குனர்களின் குறும்படத்துடன் இணைத்து முழுமையான பட நேரம் ஒன்றுக்கு கொண்டு வந்து திரையிடும் எண்ணமும் இருக்கின்றது.
PM 11:20 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top